Monday 30 December 2019

கீழடி - கூடல் என்ற கைவிடப்பட்ட நகரம்

கீழடி - ஓர் கைவிடப்பட்ட நகரம்

மதுரைக்குத் தென்கிழக்கே சுமார் 12கி.மீ. தொலைவில், சிவகங்கை மாவட்டம் கீழடி என்ற ஊருக்கு அருகே உள்ள பள்ளிச்சந்தை கொந்தகை மணலூர் அகரம் என்ற கிராமங்களில் தொல்லியல்துறையினர் அகழாய்வு செய்து வருகின்றனர்.  இங்கே பூமிக்குள் புதைந்துள்ள மிகவும் தொன்மையான 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட நகர் ஒன்றைக் கண்டறிந்து வெளிக் கொணர்ந்துள்ளனர்.  சிறப்பாகச் செயல்பட்டு தமிழரின் தொன்மையான நகரைக் கண்டறிந்து உலகறியச் செய்த மத்திய மற்றும் மாநிலத் தொல்லியல் துறையினரைப் போற்றுவோம், அவர்களுக்கு நமது நன்றிகைளைத் தெரிவித்துக் கொள்வோம்.

மணலூர்க் கண்மாய்க்கு அருகே உள்ள தென்னந்தோப்பில் முதன்முதலாகத் தொல்லியல் ஆய்வைத் திரு அமர்நாத் அவர்கள் தொடங்கி வைத்தார். 

மணலூர் மிகவும் தொன்மையான ஊராகும்.  புராண காலத்தில், இந்த ஊரில் பிறந்த வளர்ந்த காந்திமதி என்ற பெண்ணை உக்கிரபாண்டியன் திருமணம் செய்து கொண்ட காரணத்தினால் மணலூருக்கு  மணவூர் என்ற காரணப் பெயர் உண்டானது.   இது மணலூர் எனப் பழைய திருவிளையாடலிலும், “மணலூர் புரம்” என வடமொழி வியாசபாரதத்திலும் குறிப்பிடப் பெற்றுள்ளது.

மணவூரும் மதுரையும் - 
உக்கிரபாண்டியனின் ஆட்சிக் காலத்தில் பிரளயம் ஏற்பட்டு  கடல்கோள் (பெருஞ் சுனாமி) உண்டாகி மதுரை எழுகடல்தெருவரை வந்து அழித்துள்ளது.  இந்தக் கடல்கோளிலால் மணவூரை மண்மூடி விட்டது.   மணவூரைப் பற்றிய குறிப்புகள் திருவிளையாடற் புராணப் பாடல்களில் உள்ளன.  மணவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த குலசேகரபாண்டியன் என்ற மன்னனே தற்போதுள்ள மதுரை நகரைத் திட்டமிட்டு உருவாக்கினான்.  மணவூரிலிருந்த மக்களை யெல்லாம் புதிதாக உருவாக்கப்பெற்ற (இன்றைய) மதுரை நகரில் குடியேற்றம் செய்தான்.

மணவூரைப் பற்றிய குறிப்புகள் திருவிளையாடற் புராணத்தில் கீழ்க்கண்ட மூன்று பாடல்களில் உள்ளன.

1) திருவிளையாடல் புராணம் பாடல் எண் 473

இன் நரம்பு உளர் ஏழிசை எழான் மிடற்று அளிகள்
கின்னரம் பயில் கடம்பமா வனத்தினின் கீழ் சார்த்
தென்னகர் சேகரன் எனும் குலசேகரன் உலக
மன்னர் சேகரன் அரசு செய்து இருப்பது மணவூர்.

(பொருள் - இனிய நரம்புகளைத் தடவுதலினால் உண்டாகின்ற  ஏழிசை போன்று, கண்டத்திலிருந்து உண்டாகும் ஓசையினையுடைய வண்டுகள், கின்னரம் என்ற இசைபாடுகின்ற பறவையும், பெரிய கடம்பவனத்தின் கிழக்குப் பகுதியைச் சார்ந்த இடத்தில், உலகின்கண் உள்ள மன்னர்களுக்கு முடிபோல்பவனும், பாண்டிய மரபிற்கு மகுடம் என்று சொல்லப் படுபவனுமாகிய, குலசேகரபாண்டியன் ஆட்சி புரிந்து இருப்பதற்கு இடமாக உள்ளது மணவூராகும்.)

2) திருவிளையாடல் புராணம் பாடல் எண் 969

தீம் தண் புனல் சூழ் வடபுலத்து மணவூர் என்னும் திருநகர்க்கு
வேந்தன் பரிதி திரு மரபின் விளங்கும் சோம சேகரன் என்று
ஆய்ந்த கேள்வி அவனிடத்துத் திருமாது என்ன அவதரித்த
காந்திமதியை மணம் பேச இருந்தார் அற்றைக் கனை இருள்வாய்.

(பொருள் - இனிய தண்ணீரால் சூழப்பட்ட வடக்கே (வடதிசையில்) உள்ள மணவூர் (மணம் -- திருமணம் -- கல்யாணம்) என்னும் அழகிய நகரத்துக்கு, சூரியனது திருக் குலத்தில் வந்து விளங்கா நின்ற சோமசேகரன்  அரசனாவான் என்று கருதி, ஆராய்ந்த கேள்வியினையுடைய அம்மன்னனிடத்து, திருமகளைப் போல அவதரித்திருந்த காந்திமதியை மணம் பேசக் கருதியிருந்தார்கள்; அன்று செறிந்த இருளை யுடைய நள்ளிரவில் .....)

3) திருவிளையாடல் புராணம் பாடல் எண் 974

நென்னல் எல்லை மணம் பேச நினைந்தவாறே அமைச்சர் மதி
மன்னர் பெருமான் தமரோடு மணவூர் நோக்கி வழி வருவார்
அன்ன வேந்தன் தனைக் கண்டார் அடல் வேல் குமரன் அனையான் எம்
தென்னர் பெருமான் குமரனுக்கு உன் திருவைத் தருதி என அனையான்.

(பொருள் -  நேற்றைப் பொழுதில் மணவினை பேசுதற்கு நினைந்த வண்ணமே, சந்திர மரபில் வந்த அரசர் பெருமானாகிய சுந்தரபாண்டியன் தன்னுடைய அமைச்சரோடும் சுற்றத்தாரோடும்,  மணவூரை நோக்கி வழி வருகின்றார்கள்.  மணவூருக்கு மன்னனான சோமசேகரனைக் கண்டார்.  வெற்றி பொருந்திய வேலை யேந்திய முருகக் கடவுளை ஒத்தவனாகிய,  எங்களது பாண்டிய மன்னர் பெருமானின் திருப்புதல்வனாகிய உக்கிரவழுதிக்கு, உன் புதல்வியைத் தருவாய் என்று கூற,  அம் மன்னன் .....)


சந்திர குலத்தில் தோன்றிய  சுந்தரபாண்டியன்.  இவனது மகன் உக்கிரப்பெருவழுதி.  இவர்களது தலைநகருக்கு வடக்கே மணவூர் உள்ளது.
மணவூரைச் சூரியகுலத்தில் தோன்றிய சோமசேகரன் என்ற மன்னன் ஆண்டு வருகிறான்.  இவனது மகளாகிய காந்திமதியை உக்கிரப் பெருவழுதிக்குப் பெண்கேட்டுத் திருமணம் செய்து வைத்தனர் என்ற செய்தியை இந்தப் பாடல்களின் வழியா அறிய முடிகிறது. 

மேலும் இங்கே குறிப்பிடப்படும் மணவூரானது பாண்டியர்களது தலைநகருக்கு வடக்கே உள்ளது என்ற செய்தியையும் அறிய முடிகிறது.
இந்த ஊரை மணலூர் என்று பெரும்பற்றப் புலியூர் நம்பியின் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.  இந்நாளிலும் இந்த ஊரானது மணலூர் என்றே அழைக்கப்படுகிறது.  மணலுரைப் பெருமணலூர் என்றும் மணவூர்புரம் என்றும் மகாபாரதம் குறிப்பிடுகிறது.  இந்தப் பாடல்களின் வழியாகப் பாண்டியர் தலைநருக்கு வடக்கே மணலூர் என்ற மணவூர் இருந்துள்ளதை அறிய முடிகிறது.  

தற்போது தொல்லியலாளர்கள் தோண்டிக் கண்டறிந்துள்ள நகருக்கு வடக்கே மணலூர் உள்ளது.  எனவே தொல்லியலாளர்கள் தோண்டிக் கண்டறிந்துள்ள நகர நாகரிகமானது சுந்தரபாண்டியனால் ஆளப்பட்ட தொன்மையான கூடல் என்ற மதுரை யாகும் என்பது தெளிவாகிறது.  

கீழடி யருகே தொல்லியலாளர்கள் தோண்டிக் கண்டறிந்துள்ள நகரின் பெயர் கூடல் என்ற மதுரையாகும்.  இந்நகரைத் தலைநகராகக் கொண்டே சுந்தரபாண்டியனும், அவனது மகன் உக்கிரபாண்டியனும் அரசாண்டுள்ளனர் என்ற செய்தியை திருவிளையாடற் புராணப் பாடல்களின் வழியாக அறிந்து கொள்ள முடிகிறது.

தொல்லியல் ஆய்வுகள் நடைபெறும் வரை புராணக்கருத்துகளைப் பலரும் புனைக்கதைகள் என்றே கூறிவந்துள்ளனர்.  புராணத்தில் கூறப்பட்டுள்ள கதைகளில் தமிழரின் தொன்மையான வரலாறும் புதைந்துள்ளன.  மணவூரின் தொன்மையையும் புராணக் கதைகளின் உண்மையையும் உலகறியச் செய்வோம்.

அன்பன்
கி.காளைராசன்

Tuesday 24 December 2019

சூரிய கிரகணம், பகலில் இரவு

  பகலில்  சிறு இரவு  


மார்கழி 10  (2612.2019) வியாழக்கிழமை.   மதுரை, சிவகங்கை, காரைக்குடி,  இராமேசுவரம், கோவை,  புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், உதகை, கரூா், அவிநாசி,  (சில பகுதிகள்) உள்ளிட்ட ஊர்களில் சூரியகிரகணம் முழுமையாக இருக்கும்.  சூரியகிரகணம் காலை 8.07 மணிக்கு தொடங்கி 11.16 மணி வரை இருக்கும்.  மூன்று நிமிடங்களுக்கு காலை 9.31 மணி முதல் 9.33 மணி வரை முழுமையாக இருக்கும்.  பிற பகுதிகளிலும் கிரகணம் தெரியும், ஆனால் முழுமையாக மறைத்த தோற்றத்தைக் காண முடியாது.

கண் பாதுகாப்பு அவசியம் - 
குவியாடியைச் சூரியஒளியில் காட்டி அதையொரு தாளில் குவித்திட்டால், அந்தத் தாள் தீப்பிடித்து எரிவதைக் காணலாம்.  நமது கண்ணுக்கு உள்ளேயும் ஒரு குவியாடி (லென்ஸ்) உள்ளது. இதுவே ஒளியை நமது கண்ணுள் உள்ள விழித்திரையில் குவியச் செய்கிறது.   சூரியக் கிரகணத்தின் போது,  சூரியனை  வெறுங் கண்ணால் பார்த்தால்,  சூரியஒளி நமது விழித்திரையில் குவிந்து விழித்திரையை கருக்கிவிடும் அபாயம் உள்ளது.  இதனால் பார்வைக் கோளாறு ஏற்படும்.  எனவே சூரியனை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது.  அதுவும் உற்றுப் பார்க்கவே கூடாது, கூடாது.



சூரியகிரகணத்தைப் பாதுகாப்பாகப் பார்ப்பது எப்படி?
சற்று அகலமான காகிதஅட்டையில் ஒரு ஓட்டையைப் போட்டுக் கொள்ள வேண்டும்.  அதன் வழியாகச் சூரியஒளி ஊடுறுவி வரும்போது வட்டமாகத் தெரியும்.  அதில் கிரகணம் நன்றாகத் தெரியும், நிழலில் தெரியும் கிரணத்தை நன்றாகப் பார்க்கலாம்.

15 சனவரி 2010 அன்றும் இதுபோன்றதொரு சூரியகிரகணம் நிகழ்ந்தது.  அப்போது எடுத்த எடுத்த படத்தை இணைத்துள்ளேன்.



அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

பாண்டியரைக் கண்டுமிரண்ட ராவணன்

Gowtham Tamilan in FB
27.11.2019
பாண்டியரைக்  கண்டுமிரண்ட ராவணன்!!
+++++++++
மாகவி காளிதாசரின் இரகுவம்சத்தில்!!
+++++++

பாண்டியன் புகழ் பாடும் முக்கிய ஸ்லோகம்:--

அஸ்த்ரம் ஹராதாப்தவதா துராபம் யேன இந்த்ரலோகாவ ஜயாய த்ருப்த:

புரா ஜனஸ்தான விமர்த்தசங்கீ சந்த்யாய லங்காதிபதி: ப்ரதஸ்தே (ரகு.6-62)

இதன் பொருள்:-- தான் இல்லாத போது ஜனஸ்தானம் என்னும் இடத்தைப் பாண்டியர்  அழித்துவிடுவரோ என்று பயந்த ராவணன், பரம சிவனைத் துதிபாடி பிரம்ம சிரஸ் என்ற அஸ்திரத்தைப் பெற்றுள்ள பாண்டியரோடு சமாதானம் செய்துகொண்டு இந்திரலோகத்தை வெற்றி கொள்ளப் புறப்பட்டான் (ரகுவம்சம் 6-62)

ராவணனும் பயப்படும் அளவுக்கு பாண்டியர்களின் பராக்ரமம் இருந்தது!!

ரகுவம்சம் நாலாவது சர்க்கத்திலும் பாண்டியர்-அகத்தியர் புகழ் அடுத்தடுத்து வருகிறது. தமிழுக்கும் வெளியே இப்படி ஒரு அரிய சான்று கொடுப்பது காளிதாசனின் வடமொழிக் காப்பியம் ஒன்றே ஆகும்.

ஆக நச்சினார்க்கினியர், காளிதாசன் ஆகியோர் மூலம் பாண்டிய வம்சம் மிகப் பழமை உடையது என்பதும் ராமாயண கலத்திலேயே ராவணனை நடுங்கச் செய்தது பாண்டியர்களின் படைபலம்  என்பதும் தெளிவாகிறது.

இனவெறி பரப்பும் ஆரிய—திராவிடக் கொள்கைக்கு காளிதாசனும், நச்சினார்க்கினியரும் கொடுக்கும் அடி இது, என்பதும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியது. ராவணன், இலங்கையில் அரசும், தண்டகாரண்யப் பகுதியில் ஒரு ‘காலனி’யும் வைத்திருந்தான் என்பதும், அதைத் தளமாகக் கொண்டே இமயம் வரை சென்று சிவனின் கயிலாயத்தையும் அசைக்க முயற்சித்தான் என்பதும் இதனாற் பெறப்படும்

Wednesday 4 December 2019

கீழடி - புதையுண்டுள்ள நகரம் எப்போது அழிந்தது? எப்படி அழிந்தது?

கீழடி -
கூடல் என்ற மதுரை 
எப்போது உருவாகியது ? எப்போது அழிந்தது ?


கீழடியருகே தொல்லியலாளர் தோண்டிக் கண்டறிந்துள்ள நகரமானது, கைவிடப்பட்ட பண்டைய கூடல்  என்ற மதுரை என்பது எனது கருத்து.

புதையுண்டுள்ள இந்த நகரத்தின் ஈமக்காடானது கொந்தகை அருகே சாலையின் ஓரத்தில் உள்ளது என்று திரு அமர்நாத் அவர்கள் குறிப்பிடுகிறார்.  இங்கே ஏராளமான முதுமக்கள்தாழிகள் உள்ளன.  இது புதையுண்டுள்ள நகரம் உயிருடன் இருந்தபோது இங்கு வாழ்ந்த மக்களின் ஈமக்காடு ஆகும். இந்த ஈமக்காட்டில் வரும் ஆண்டில் (2020)  தொல்லியல் ஆய்வுகள் நடைபெறவுள்ளன என அறிகிறேன்.

இந்த ஈமக்காட்டில் பழந்தமிழரின் பெயர்கள் அடங்கிய முதுமக்கள் தாழிகள் நிறையக் கிடைத்திட வாய்ப்புகள் உள்ளன.   நடைபெறவுள்ள இந்த ஆய்வின் வழியாகப் பழந்தமிழரின் உணவுப் பழக்கவழங்களும், நீத்தார்வழிபாட்டு முறைகளும் அறிவியல் அடிப்படையில் தெரியவரும் என எதிர்பார்க்கிறேன்.

புதையுண்டுள்ள இந்நகரில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே இந் நகரம் அழிந்திருந்தால்,  இங்கு வாழ்ந்த மக்களும் அவர்களது உடைமைகளும் ஒன்றுசேரப் புதையுண்டு போயிருக்க வேண்டும்.  ஆனால் மக்களின் எலும்புகள் ஏதும் இந்நகரில் இதுவரை கிடைக்காத காரணத்தினால் இந்நகரம் அழியும்போது இங்கு மக்கள் யாரும் வசிக்கவில்லை என்பது தெளிவாகிறது. 

இந்நகரம் மண்ணால் புதையுண்டு அழிந்திருப்பதற்கு இரண்டு காரணிகள்தான் இருக்கமுடியும். 1) கடல்கோள் அல்லது சுனாமி (இதற்குத் திருவிளையாடல் புராணத்தில் சான்றுகள் உள்ளன. 2) வைகை யாற்றுப் பெருக்கு (வைகை யாற்றுப் பெருக்கிற்கு இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.  ஆனால் ஆற்றுப் பெருக்கால் நகரம் ஏதும் அழிந்ததாகக் குறிப்புகள்  இல்லை).

இந்த நகரம் எவ்வாறு அழிந்தது? கடல்கோளாலா அல்லது ஆற்றுப் பெருக்காலா? என இதுநாள்வரை அறிவியல் அடிப்படையில் ஆராயப்படவில்லை.  முறையினா அறிவியல்  ஆய்வுகள் நடைபெற்று  முடிவுகள் தெரியவரும்போதுதான், இந்நகரம் அழிந்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும்.  அதுவரை பண்டைய புராணக் கருத்தைப் புளுகு என்று கற்பனையாகக் கருதி ஒதுக்கிவிட இயலாது.


கடல்கோளால் இந்நகரம் அழிவைச் சந்தித்திருந்தால்,  கிழக்கிலிருந்து வந்த கடல்நீரினால் இங்கு வசித்த மக்கள் மேற்குநோக்கி அடித்துச் செல்லப்பட்டிருப்பர்.  எனவே அவர்களது உடல்கள் இந்த நகருக்கு மேற்கே புதையுண்ட கிடக்க வாய்ப்புகள் உள்ளன.  மேலும், இந்த நகரின்  சிதையுண்டுள்ள மதில்களும் அவற்றின் இருப்பிடத்திற்கு மேற்கே புடைபெயர்ந்து கிடக்க வாய்ப்புகள் உள்ளன.

மேற்கிலிருந்து பாய்ந்து வரும் வைகை ஆற்றுப்பெருக்கினால்  இந்நகரம் அழிந்திருந்தால்,  இந்நகரில் வசித்தவர்களின் உடல்கள் கிழக்கே அடித்துச் செல்லப்பட்டு இந்த நகருக்குக் கிழக்கே புதையுண்டு கிடக்கும் வாய்ப்புகள் உள்ளன.  மேலும், இந்த நகரின்  சிதையுண்டுள்ள மதில்களும் அவற்றின் இருப்பிடத்திற்குக் கிழக்கே புடைபெயர்ந்து கிடக்க வாய்ப்புகள் உள்ளன.

அப்படி எந்தவொரு தடயமும் இதுநாள் ஆராயப்படவில்லை. இங்கு படிந்துள்ள மண் அல்லது மணற் திட்டுக்கள் கிழக்கிலிருந்து மேற்காகப் படிந்துள்ளனவா? அல்லது மேற்கிலிருந்து கிழக்காகப் படிந்துள்ளனவா? எனக் கண்டறியப்பட வில்லை. 

மேலும், இதுவரை நடைபெற்ற ஆய்வுகளில், வாழ்ந்துகொண்டிருந்த மனிதர்களோ மிருகங்களோ இறந்துபோன தடயங்கள் ஏதும் கிடைக்கவில்லை.  அதாவது வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்களின் எலும்போ அல்லது கால்நடைகளின் எலும்போ கண்டறியப்பட வில்லை..
எனவே, திருவிளையாடற் புராணத்தில் கூறப்பட்டுள்ளபடி,  இந்நகரில் வாழ்ந்த மக்கள் புலம்பெயர்ந்து சென்ற பின்னரே, இந்நகரம் அழிந்துள்ளது என்பது உறுதி.


நகரின் காலக்கணிப்பு
பண்டைய ஆலவாய் என்ற மதுரை நகரம் அழிந்ததை ஊழிக்காலம் என்று புராணமும் பரிபாடலும் கூறிப்பிடுகிறன.   ஊழிக்குப் பின்னர் கலிகாலம் தோன்றி 5112 ஆண்டுகள் ஆகின்றன என்று பஞ்சாங்கக் கணிப்பு உள்ளது.  ஊழிக் காலத்திற்குப் பின்னர் மீண்டும் பாண்டியர்கள் கூடல் என்ற மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துள்ளனர்.
எனவே, இவற்றின் அடிப்படையில் கீழடி யருகே புதையுண்டுள்ள இந்நகரம் (கூடல் என்ற மதுரை) தோன்றி 5112 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்பது எனது கருத்து. 

குலசேகர பாண்டியனின் ஆட்சிக்காலத்தில், ஆலவாய் என்ற மதுரை இருந்த இடம் கண்டறியப்படுகிறது.  அந்தத் தொன்மையான ஆலவாய் என்ற மதுரை இருந்த இடத்தில் புதிதாக மதுரை நகர் உருவாக்கப்படுகிறது. 
கூடல் என்ற மதுரையில் இருந்த மக்கள் அனைவரும் புதிதாக உருவாக்கப் பெற்ற மதுரைக்கு சென்று குடியேறுகின்றனர்.  அதனால் இந்தக் கூடல் என்ற மதுரை நகரம் கைவிடப்பட்ட நகரமாக மாறிவிடுகிறது.

பின்னாளில்,  மற்றொரு கடல்கோள் (சுனாமி) உண்டாகியுள்ளது.  இந்தக் கடல்கோளில்  இப்போதிருக்கும் மதுரையின் எழுகடல்தெருவில் உள்ள வாவி (குளம்) வரை கடல்நீர் வந்து சேர்ந்தது என்கிறது திருவிளையாடல் புராணம்.  எழுகடல்தெருவரை மட்டுமே வந்து திரும்பிய இந்தக் கடல்வெள்ளத்தால்  இன்றிருக்கும் மதுரை அழியவில்லை.  ஆனால் மதுரைக்குக் கிழக்கே யிருந்தன எல்லாமும் கடல்வெள்ளத்தில் சிதைந்து அழிந்து போயுள்ளன.

இந்தக் கடல்கோளால்தான் (சுனாமியினால்தான்) கீழடியருகே கைவிடப்பட்ட கூடல் என்ற  மதுரைநகரும் அழிந்து புதைந்துள்ளது.  புதையுண்டுள்ள நகரம் (கூடல் என்ற மதுரை) அழிந்த காலம் இன்னதென்று  தெரியவில்லை.  தொல்லியலாளர்கள் கண்டுபிடித்தால்தான் உண்டு.

ஆலவாய் என்ற மதுரை போற்றுவோம்.
கூடல் என்ற மதுரை போன்றுவோம்,
மதுரை போற்றுவோம்,
தொல்லியலாளர் போற்றுவோம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

Tuesday 3 December 2019

கீழடி, தொலைந்து போனவைகளே தோண்டி எடுக்கப்படுகின்றன

தொலைந்து போன பொருட்களே 
கீழடியில்
தொல்லியலாளர்களால் 
தோண்டி எடுக்கப்படுகின்றன


கீழடி அகழாய்வில் தங்கத்திலான பொருட்களும் கிடைத்துள்ளன. யானைத் தந்தத்தினால் ஆன சீப்பு கிடைத்துள்ளது.  மிருகங்களின் எலும்புகள் கிடைத்துள்ளன.  சுட்ட களிமண்ணால் செய்யப்பட்ட  குழாய்களும், பானைகளும், பானைஓடுகளும் நிறையவே கிடைத்துள்ளன. ஆனால் மனித எலும்புக்கூடுகள் கிடைக்கவில்லை.

கீழடியருகே சுமார் 100 ஏக்கர் பரப்பளவுள்ள தொல்லியல் மேட்டைத் திரு அமர்நாத் அவாகளது தலைமையிலான தொல்லியல்துறையினர் கண்டறிந்து அகழ்வாராய்ச்சி செய்தனர்.   தொடர்ந்து தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறையினர் அகழாய்வு செய்து வருகின்றனர்.  100 ஏக்கர் பரப்பளவில் உள்ள தொல்லியல்மேட்டில் சுமார் 8 ஏக்கர் அளவுள்ள இடத்தில் மட்டுமே இதுவரை தொல்லியல் அகழாய்வு நடைபெற்றுள்ளது.  எல்லா இடங்களையும முழுமையாகத் தோண்டிக் கண்டறிய இன்னும் சுமார் 10 ஆண்டுகள் ஆகலாம் என்று திரு அமர்நாத் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

“இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்களில மனித எலும்புக்கூடுகள் ஏதும் கிடைக்கவில்லை.   இந்தக் காரணத்தினால் இது ஒரு கைவிடப்பட்ட நகரநாகரிகமாக இருக்கலாம்” என்று கருதுகின்றனர்.

கைவிடப்பட்ட நகரத்தில் தங்கத்தினால் ஆன அணிகலன்,  மணிகளால் ஆன அணிகலன்கள், தந்தத்தினால் ஆன சீப்பு எப்படிக் கிடைக்கும்?  என்ற ஐயம் எழுகிறது.

பண்டைய மதுரையின் அருகே வடக்கே மணவூர் (மணலூர்) இருந்தது என்றும்,  மதுரையை ஆண்ட சுந்தரபாண்டியனின் மகனான உக்கிரசேன பாண்டியனுக்கு மணவூரில் வசித்த காந்திமதியைத் திருமணம் செய்து வைத்தார்கள் என்றும்.   பாண்டியர்களின் குலவழிவந்த குலசேகரபாண்டியன் மணவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான் என்றும்,  இந்தக் குலசேகரபாண்டியன் இப்போதிருக்கும் மதுரையைப் புதிதாக உருவாக்கினான் என்றும், அப்போது  இங்கே வசித்த மக்களை யெல்லாம் புதிதாக உருவாக்கப்பட்ட மதுரைக்கு அழைத்துச் சென்று குடியமர்த்தினான் என்றும் திருவிளையாடல் புராணம் குறிப்பிடுகிறது.   இங்கிருந்த மக்கள் எல்லோரும் புதிதாக உருவாக்கப்பட்ட மதுரைக்குச் சென்று குடியேறிவிட்ட காரணத்தினால், இது “கைவிடப்பட்ட நகரம்” ஆகிறது.


மதுரை நகருக்குக் குடியேறுவதற்கு முன்பு, இங்கு வசித்த  மக்களால் தொலைக்கப்பட்ட அல்லது கைவிடப்பட்ட  பொருட்களே இன்று தொல்லியலாளர்களால் கண்டெடுக்கப்படுகின்றன எனக் கருதவேண்டியுள்ளது.   தங்கம் மற்றும் தந்தத்தால் ஆன பொருட்கள் தொலைக்கப்பட்ட பொருட்களில் அடங்கும்.  பானைகள் கைவிடப்பட்ட பொருட்களில் அடங்கும் எனவும் கருதுகிறேன்.

(குறிப்பு - இது தொல்லியல் ஆய்வுக் கருத்து அல்ல, எனது தனிப்பட்ட கருத்து ஆகும்)

தொல்லியலாளர் போற்றுவோம்,
மாமதுரை போற்றுவோம்,
சங்கத் தமிழ் போற்றுவோம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கார்த்திகை 17 (03.12.2019) செவ்வாய்கிழமை.

Monday 25 November 2019

அகத்தியர் அருளிச் செய்த கார்த்திகை வழிபாடுத் தலம்

கார்த்திகை மாதம் 
கார்த்திகை நட்சத்திரத் திருநாளில் வழிபடவேண்டிய திருத்தலம் எது?


கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத் திருநாளில் வழிபடவேண்டிய திருத்தலம் எது?

எல்லாத் திருத்தலங்களும் எல்லாநாட்களிலும் வழிபட உகந்தனவே.  என்றாலும் ஒவ்வொரு திருத்தலத்தையும் ஒருசில குறிப்பிட்ட நாட்களில் வழிபடுவது சிறப்புடையதாக உள்ளது.  கருநாடக மாநிலத்தில் உள்ள திருக்கோகர்ணம் திருத்தலத்தைக் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திர நன்னாளில் வழிபடுவது சிறப்புடையது என அகத்தியமுனிவர் அருளிச் செய்துள்ளதாகத் திருவிளையாடல் புராணம் குறிப்பிடுகிறது.
சிவபெருமானால் இராவணனுக்கு அருளப்பெற்ற ஆத்மலிங்கம் உள்ள திருத்தலம் இது.  வாழ்வில் ஒருமுறையேனும் அன்பர்கள் சென்று வழிபடவேண்டிய சிவலிங்கம்.

கோ என்றால் மாடு.
கர்ணம் என்றால் காது.
கோகர்ணம் என்றால் மாட்டினுடைய காது என்று பொருள்.
மாட்டினுடைய காதுபோன்ற அமைப்பில் இங்குள்ள சுயம்புலிங்கம் உள்ளது.  அதனால் அந்தச் சிவலிங்கத்திற்குக் கோகர்ணம் என்ற காரணப் பெயர்.  சிவலிங்கத்திற்கான பெயரே ஊருக்கும் ஆகி அமைந்துள்ளது.




திருவிளையாடல் புராணம் பாடல் எண் 3322 -
பாடல் -
சுரபிநீள் செவியி லிங்கச் சுடருரு வாயி னான்றன்
இரவினிற் றிருத்தேர் மன்றல் நடக்குமூ ரிவ்வூர் மேலை
உரவுநீர்க் கரைத்தேண் மாதத் துயர்ந்தகார்த் திகையிற் றேரூர்ந்
தரவுநீர்ச் சடையான் வேள்வி நடக்குமூ ரவ்வூர் காண்மின்.

சொற்ப்பொருள் பிரிப்பு -- 
சுரபி நீள் செவியில் இலிங்கச் சுடர் உரு ஆயினான் தன்
இரவினில் திருத்தேர் மன்றல் நடக்கும் ஊர், இவ்வூர் மேலை
உரவு நீர்க்கரைத் தேள்மாதத்து உயர்ந்த கார்த்திகையில் தேர்ஊர்ந்து
தரவு நீர்ச்சடையான் வேள்வி நடக்கும் ஊர், அவ்வூர் காண்மின்.

பாடலின் பொருள் ---
பசுவினது நீண்ட காதைப்போன்ற இலிங்கத்தின் சுடர் உருவம் உடைய, இறைவனது சிவ நிசியில் திருத்தேர் விழா நடக்கும் திருக் கோகரணம் இத் திருப்பதியாம்;  மேலைக் கடற்கரையில், கார்த்திகைத் திங்களில் சிறந்த கார்த்திகை நாளில், பாம்பையுங் கங்கையையு மணிந்த சிவ பெருமான் தேரில் ஏறியருள, திருவிழா நடக்கும் திருவஞ்சைக்களம் அத் திருப்பதியாம்;  கண்டு வழிபடுங்கள், கண்டு வழிபடுங்கள்.



சுரபி நீள் செவி = ஆவின் நெடிய காது; கோகர்ணம். இராவணன் இலங்கையில் நிறுவுமாறு சிவபிரான்பாற் பெற்றுக் கொணர்ந்த சிவலிங்கத்தை வானோர் வேண்டுகோளின்படி விநாயகர் வாங்கிக் கீழ்வைத்துப் பிரதிட்டை செய்துவிடலும், இராவணன் அதனைப் பெயர்த் தெடுக்கத் தன் ஆற்றல்கொண்டு இழுத்தகாலை அந்தச் சிவலிங்கம் பசுவி்ன் காதுபோற் குழைந்தமையின் ‘கோகர்ணம்’எனப் பெறுவதாயிற்று.
சுடர் உருவாயினான் தன் இரவு = மகா சிவராத்திரி. சுடர் உருவாய் ஆன சிவபெருமானின் இரவு.
தேர் மன்றல் = தேர்த்திருவிழா, இரதோற்சவம்.
உரவு நீர் = வலிய நீர்; கடல்.
தேள் மாதம் = விருச்சிக ராசியில் ஆதித்தன் இருக்கும் கார்த்திகைத் திங்கள், கார்த்திரை மாதம்.
உயர்ந்த கார்த்திகை = கார்த்திகைத் திங்களில் வரும் திருக்கார்த்திகை நட்சத்திரம்.
தரவு நீர்ச்சடையான் = சிவபெருமான்
வேள்வி நடக்கும் ஊர், அவ்வூர் காண்மின்.

இது திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய இருவர் பாடல்பெற்ற துளுவ நாட்டுத் திருப்பதி.
----------------------------------------------------
http://www.kamakoti.org/tamil/tirumurai237.htm
திருமுறைத்தலங்கள் - திருக்கோகர்ணம் (கோகர்ணா)
துளூவநாட்டிலுள்ள ஒரே திருமுறைத்தலம்.
இத்தலம் கர்நாடக மாநிலத்தில் மேற்குக் கடற்கரையில் உள்ளது.
1) பெங்களூர் சென்று அங்கிருந்து அரசு விரைவுப் பேருந்து மூலம் திருக்கோகர்ணம் சென்றடையலாம்.
2) சென்னையிலிருந்து புகைவண்டி மூலம் செல்வதாயின், குண்டக்கல் வழியாக ஹுப்ளி சென்று, அங்கிருந்து பேருந்தில் ஏறித் திருக்கோகர்ணத்தை அடையலாம்.
3) மங்களூரிலிருந்தும் கோகர்ணத்திற்குப் பேருந்து செல்கின்றது. கோ-பசு, கர்ணம் -காது, சுவாமி பசுவின் காதுபோலக் குழைந்து காணப்படுவதால் இத்தலம் இப்பெயரைப் பெற்றது. இதற்கு ருத்ரயோனி, வருணாவர்த்தம் முதலிய பெயர்களுண்டு.
இத்தலத்தை அப்பர், தாம் அருளிய திரு அங்கமாலையில் வைத்துப் பாடியுள்ளார்.

"கால்களாற் பயனென், கறைக்கண்டன் உறைகோயில்
கோலக்கோபுரக் கோகரணம் சூழாக், கால்களாற் பயனனென்'.
ஒரு சமயம் இராவணன் இலங்கையில் பிரதிஷ்டை செய்விப்பதற்காகக் கயிலையிலிருந்து (சிவபெருமானிடம்) ஒரு சிவலிங்கம் பெற்று வந்தான். வந்தவன், வழியில் இத்தலத்திற் சற்று இளைப்பாற எண்ணித் தரையில் வைத்தான். இறைவன் இத்தலத்திலேயே வீற்றிருக்கத் திருவுள்ளம் கொண்டாராதலின், அவன் சிறிது நேரம் இளைப்பாறிய பின்னர் அச்சிவலிங்கத்தை மீண்டும் எடுக்க முயன்றபோது அது அசைந்து கொடுக்கவில்லை. அவன் தன் வழிமையனைத்தையும் பயன்படுத்தி எடுக்க முயன்றபோது அச்சிவலிங்கபாணம் பசுவின் காது போலக் குழைந்துவிட்டது. அதனால் தலத்திற்குக் கோகர்ணம் என்று பெயர் வந்தது.
இறைவனுக்கு மகாபலேஸ்வரர் என்று பெயருண்டாயிற்ற. ஆலயத்தில் நேரிற்காண்போர், சிவலிங்கம் ஒரு கொட்டைப்பாக்கு அளவில் ஆவுடையாரில் அடங்கியருப்பதைக் காணலாம். இத்தலத்து வழக்கப்படி மக்கள் திருமேனியைத் தொட்டு நீராடி மலர்சூட்டி வழிபடலாம்.

இறைவன் - மஹாபலேஸ்வரர், பிராணலிங்கேஸ்வரர், ஆத்ம லிங்கேஸ்வரர்.
இறைவி - கோகர்ணேஸ்வரி, தாம்ரகௌரி.

சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது.
இத்தலத்தில் சிவராத்திரி வழிபாடு சிறப்புடையது. இத்தலச் சிறப்பை பிரமோத்திர காண்டம், உபதேசகாண்டம் முதலிய நுழல்கள் புகழ்கின்றன. பிரமன், அகத்தியர், காமதேனு, மார்க்கண்டேயர், சரஸ்வதி, வசிட்டர் முதலான மகரிஷிகள், இராவணன், நாகராசன் முதலிய எண்ணற்றோர் இப்பெருமானை வழிபட்டுள்ளனர்.

கோயிலமைப்பு, 
தமிழ்நாட்டு அமைப்பினின்றும் வேறானது. தெற்கிலும் மேற்கிலும் வாயில்கள் உள்ளன. மேற்குவாயில் வழியாகக் கடற்கரைக்குச் செல்லலாம். கோயில் கடற்கரைக்கு அருகில் உள்ளது. தெற்கு வாயில் வழியாக உட்சென்றால் கோபுர வாயில் கடந்ததும் விசாலமான வெளிப்பிராகாரம். உள்வாயில் தாண்டியதும் ரிஷபதேவர் தரிசனம். அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கியது - பக்கத்தில் தாம்ரகுண்டமென்னும் தடாகம் உள்ளது. உட்புறம் மகாபலேஸ்வரர் கருவறை பக்கத்தில் தத்தாத்ரேயர், ஆதிகோகர்ணேஸ்வரர் சந்நிதிகள் உள்ளன.

மூலத்தானம் சிறிய அளவுடையது. நடுவில் சதுரமேடை - அதில் வட்டமான பீடம் - இப்பீடத்தின் தென்கிழக்குப் பகுதியில் வெடிப்பொன்று உள்ளது. இதனைச் சுவர்ணரேகையுள்ள சாளக்கிராம பீடமென்பர். இதன் நடுவில் வெள்ளை நிறமான பள்ளம் உள்ளங்கையளவு உள்ளது. அப்பள்ளத்தின் நடுவில் கொட்டைப்பாக்கு அளவில் மகாபலேஸ்வரர் சிவலிங்கபாணம் தென்படுகிறது. விரலால் தொட்டுத் திருமேனியை உணரலாம். பசுவின் காதுபோலக் குழைந்து தோற்றமளிக்கும் அருட்காட்சி நம்மை ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது.

பிராகாரத்தில் விநாயகர், மகிஷாசுர மர்த்தினி சந்நிதிகள். விநாயகர், யானைமுகத்துடனும் இரண்டு திருக்கரங்களோடு நின்ற கோலத்தில் "துவிபுஜ" விநாயகராகக் காட்சி தருகின்றார். இவர்முடியில் யானைத் தலையில் இருப்பதுபோல இருபுறமும் மேடும் நடுவில் பள்ளமும் உள்ளது. இஃது இராவணன் குட்டியதால் ஏற்பட்ட பள்ளமென்பர். கோயில் மதிலுக்கு வெளியே வடபால் தரைமட்டத்தின் கீழ் தண்ணீரில் பெரிய சிவலிங்வடிவில் ஆதிககோகர்ணேஸ்வரர் காட்சி தருகிறார். இத்தலத்தில் உள்ள கோகர்ப்பக்குகை கண்டுகளிக்கத்தக்கது. இங்கு 33 தீர்த்தங்கள் உள்ளன. அவற்றுள் கோகார்ண தீர்த்தம், தாம்ரகௌரிநதி, கோடி தீர்த்தம், பிரமகுண்ட தீர்த்தம் முதலியவை சிறப்புடையன. இவற்றுள்ளும் கோடி தீர்த்தம் மிக்க சிறப்புடையது.

இத்தலவரலாறு வருமாறு-
இலங்கை வேந்தன் இராவணன் கயிலைமலை சென்று சிவபிரானை நோக்கிக் கடுந்தவம் புரிந்தான். சிவபிரான் உமையம்மையோடு காட்சியளித்து வேண்டும் வரம் யாதென வினவனரிர். இராவணன் இலங்கை அழியாதிருக்க அருளவேண்டும் என்றான். அதற்கிசைந்த பெருமான் இராவணன் கையில் பிராண லிங்கத்தைக் கொடுத்து இதனை இலங்கைக்கு எடுத்துச் சென்று பிரதிட்டை செய்து வழிபட்டு வந்தால் இலங்கை அழியாது. இச்சிவலிங்கத்தை தலையில் சுமந்து செல்ல வேண்டும். வழியில் இதனைக் கீழே வைத்தால் எடுக்கவாராது என அருளி மறைந்தார். இராவணன் பிராணலிங்கத்தைச் சிரசில் சுமந்து இலங்கை நோக்கிச் சென்றான்.
நாரதர் மூலம் இதனை அறிந்த இந்திரன் பிராண லிங்கத்தை இராவணன் எடுத்துக்கொண்டு சென்று பிரதிட்டை செய்தால் இராவணன் அழியான், தேவர்கள் துயர்நீங்காது என எண்ணித் தேவர்கள் புடைசூழக் கயிலைமலை சென்று விநாயகரை வேண்டினான். இந்திரனின் வேண்டுகோளை ஏற்ற விநாயகர் இராவணன் கோகரணத்தை அடையும் வேளையில் அவன் வயிற்றில் நீர்சுரக்குமாறு செய்ய வருணனை ஏவினார். அந்தணச் சிறுவன் போல அவன் முன் தோன்றி நின்றார்.
இராவணன் வந்த அந்தச் சிறுவனை நோக்கிச் சிவலிங்கத்தை அச்சிறுவன் கையில் கொடுத்துச் சிறுநீர் கழித்து வருமளவும் அதனைக் கையில் வைத்துக்கொண்டு நிற்குமாறு வேண்டினான். சிறுவனாக வந்த விநாயகர் இராவணனை நோக்கி என்னால் சுமைபொறுக்க இயலாத நேரத்தில் மூன்றுமறை உன்னை அழைப்பேன் அதற்குள் வராவிட்டால் நிலத்தில் வைத்து விடுவேன் என அருளினார். இராவணனும் இசைந்து சென்றான். நெடுநேரம் ஆகியும் அவன் வராததால் மூன்றுமறை, அழைத்து சிவலிங்கத்தைப் பமூ ¤யில் வைத்து விட்டார். இராவணன் வந்து சிவலிங்கத்தை இருபது கரங்களாலும் எடுக்க முயன்றான். பெருமான் பசுவின் காதுபோலக் குழைந்து காட்டினார். இராவணன், மகாபலம் உடையவர் இவ்விறைவர் எனக் கூறி அந்தணச்சிறுவன் செய்த தவறுக்காக மூன்று முறை அவனது தலையில் குட்டினான். சிறுவனாக வந்த விநாயகர் தம் உண்மை வடிவை அவனுக்குக் காட்டிப் பந்து போல அவனைத் தூக்கி எறிந்து விளையாடினார். இராவணன் பிழைபொறுக்க வேண்டினான். விநாயகர் உன் தலையில் இவ்வாறே மூன்றுமுறை குட்டிக்கொள் என்று கூறினார். இராவணன் தான் செய்த பிழைக்கு வருந்திக் குருதிசோரத் தலையில் குட்டிக்கொண்டு அவரை வழிபட்டு அருள் பெற்றான். விநாயகர் சினம் தணிந்து தலையில் குட்டிக்கொண்டு வழிபடுவோர்க்கு வேண்டும் வரங்கள் தருவதாகக் கூறி இராவணனின் பிழைகளைப் பொறுத்து அவனுக்கு நல்வரங்கள் தந்தருளினார்.

இத்தலத்திற்கு வருவோர் முதலில் கோடி தீர்த்தத்தில் நீராடி, பின்பு கடல் நீராடி, பிண்டதர்ப்பணம் செய்து, மீண்டும் நீராடி பிறகு மகாபலேஸ்வரரை வழிபடவேண்டும். அமாவாசை நாள் கடல் நீராட்டுக்கு விசேஷமானது இத்தலம், பாஸ்கரத்தலங்களுள் ஒன்றாகும். ஏனையவை - காசி, புஷ்பகிரி, காஞ்சிபுரம், ஸ்ரீ சைலம், சேது, கேதாரம் முதலியன. சிவராத்திரி விழா சிறப்பானது.

பேதை மங்கையரு பங்கிட மிகுத்திடப் மேறியமரர்
வாதைபட வண்கடலெ ழுந்தவிட முண்டசிவன் வாழுமிடமாம்
மாதரொடும் ஆடவர்கள் வந்தடி யிறைஞ்சிநிற மாமலர்கள்தூய்க்
கோதைவரி வண்டிசைகொள் கீதமுரல் கின்றவளர் கோகரணமே. (சம்பந்தர்)

சந்திரனுந் தண்புனலுஞ் சந்தித் தான்காண்
தாழ்சடையான்காண் சார்ந்தார்க் கமுதா னான்காண்
அந்தரத்தி லசுரர்புரம் மூன்றட் டான்காண்
அவ்வுருவி லவ்வுருவ மாயி னான்காண்
பந்தரத்து நான்மறைகள் பாடி னான்காண்
பலபலவும் பாணி பயில்கின் றான்காண்
மந்திரத்து மறைப்பொருளு மாயி னான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே. (அப்பர்)

க்ஷேத்திரக்ககோவைபிள்ளைத்தமிழ் -
ஏகநா யகன்கயிலை இமையவர்கள் தம்பிரான் இராவண னுள்ளமகிழ
ஈந்துசிவ லிங்மொ றீதுதரை வையா திலங்கையில் கொடுபோவெனச்
சாகரத் தின்கரையில் வரும்வேளை யருபிரம சாரியாய் வாங்கியதனைக்
தரைவைக்க அதுசத்த பாதாளம் வேருறச் சமர்செயுமி ராவணன்றன்
ஆகமொரு பந்தென வெடுத்தண்ட கூடமுற அம்மானை ஆடிவிளையா
டதிபலப ராக்கிரம விநாயகன் மகிழ்தம்பி அம்பரவை ஏத்தினாகரச்
சீகரம் வந்துலவு கோகரணம் வாழ்முருக சிறுதே ருருட்டியருளே
சிவன்மகா லிங்பெல லிங்கமூர்த் தியருள்குக சிறுதே ருருட்டி யருளே.

கோகர்ண ஸ்தல ஸ்துதி சுலோகம் -
கோகர்ணம் ஸா மஹா காசீ, விசுவ நாதோ மஹாபல
கோடி தீர்த்தஸ் தத்ர கங்கா ஸமுத்ரோயம் விசிஷ்யதே.
குஞ்சா மாத்ரா திகம் காசியா கோகர்ண மபிதீயதே
கோகர்ண ஸத்ருசம் க்ஷேத்ரம் நாஸ்தி ஜகத்ரயே.
ஸர்வேஷாம் சிவலிங்காநம் ஸார்வபௌமோ மஹாபல
மஹாபல ஸமலிங்கம் நபூதோ நபவிஷ்யதி.
கங்காதி ஸரிதோ யஸ்மாத் ஸாகரம் ப்ரவிசந்தி
தஸ்மாத் ஸமுத்ரேஹ்யதிகோ கோகர்ண தத் விசிஷ்யதே
ஆத்யம் பசுபதே ஸ்தாநம் தர்சநாத்ஏவ முத்கிதம்
யத்ர பாபோபி மநுஜ ப்ராப்நோத்ய பயதம் பதம்.
பச்சிமாம்புதி தீரஸ்தம் கோகர்ணக்ஷேத்ர முத்தமம்
மஹாபல ஸமம் லிங்கம் நாஸ்தி ப்ரஹ மாண்ட கோளகே
பூர்வே ஸித்தேச்வரோ நாம, தக்ஷிணத் யக நாசிநீ,
உத்தரே சால்மலீ கங்கா, பச்சிமே லவணாம் விதி

பொருள் -
1) கோகர்ணமே மஹாகாசி, மஹாபலரே விசுவநாதர், கோடி தீர்த்தமே கங்கை, சமுத்திரம் கூட இருப்பதால் பின்னும் விசேஷம். 2) காசியிலும் ஒரு பங்கு அதிகம் கோகர்ணம், அதற்கு இணையான தலம் மூவுலகிலும் இல்லை. 3) எல்லாச் சிவலிங்கங்களுக்கும் மஹாபலரே சக்ரவர்த்தி, அவருக்கு இணை இன்றும் இல்லை, என்றும் இராது. 4) கங்கை முதலான சகல தீர்த்தங்களும் இங்கு கடலிற் சேர்கின்றபடியால் கோகர்ணத்தில் உள்ள சமுத்திரதீர்த்தம் பெருமைவாய்ந்தது. 5) மஹாபலேசுவரர் ஆதிமூர்த்தி, தரிசித்த மாத்திரத்தில் அவர் முத்தியளிப்பவர், பாபியான மனிதனுக்கும் அவர் அபயம் அளிப்பார். 6) மேற்குக்கரையில் உத்தம கோகர்ணம் அமைந்துள்ளது, பிரம்மாண்ட கோளத்தில் மஹாபல லிங்கத்துக்கு இணையில்லை. 7) கிழக்கில் சித்தேசுரர், தெற்கே அகநாசினி, வடக்கில் சால்மலி கங்கை, மேற்கே உப்புக்கடல்.
"கோபலத்திற்காண்பரிய கோகரணம் கோயில் கொண்ட மாபலத்து மாபலமா மாபலமே". (அருட்பா)

அஞ்சல் முகவரி -
அருள்மிகு. மகாபலேஸ்வரர் திருக்கோயில்
திருக்கோகர்ணம் - அஞ்சல் - 576 234
(கர்நாடகா)

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா. கி. காளைராசன்
கார்த்திகை 9 (25.11.2019) திங்கள் கிழமை.
(கார்த்திகை சோமவாரம்)

Sunday 17 November 2019

திருவிளையாடல் புராணத்தில் 'ஊழி'

திருவிளையாடல் புராணத்தில் 'ஊழி' என்ற சொல் உள்ள பாடல்கள்


திருக்கைலாயச் சிறப்பு
202.
புரந்தர் ஆதி வானவர் பதம் போதுறை புத்தேள்
பரந்த வான் பதம் சக்கரப் படை உடைப் பகவன்
வரந்த வாதுவாழ் பதம் எலாம் நிலை கெட வரு நாள்
உரம் தவாது நின்று ஊழி தோறும் ஓங்கு அவ் ஓங்கல்.

தீர்த்த விசேடம்
265.
அவ்வழிப் புறம்பு சூழ்ந்து கிடந்த ஆழி ஊழிப்
பௌவ நீர் என்ன ஓங்கப் பாணியால் அமைத்து  வேணித்
தெய்வ நல் நீரைத் தூவிக் கலந்து மா தீர்த்தம்  ஆக்கிக்
கை வரை கபாலி நந்தி கணத்தினை நோக்கிக் கூறும்.

இந்திரன் பழி தீர்த்த படலம்
395.
என்றவன் இடுக்கண் தீர்ப்பான் இகல் புரி புலன்கள் ஐந்தும்
வென்றவன் நெடியோன் தன்னை விடையவன் வடிவம்   ஆக்கி
நின்றவன் அறிவானந்த மெய்ம்மையாய் நிறைந்த வெள்ளி
மன்றவள் ஊழிச் செந்தீ வடிவினை மனத்துள் கொண்டான்.

திருமணப் படலம்
625.
சலிக்கும் புரவித் தம் தேர் உடைத் தம் பிராட்டி
கலிக்கும் பல தூரியம் கைவரை தெய்வத் திண்தேர்
வலிக்கும் பரி மள்ளர் வழங்கு ஒலி வாங்கி நேரே
ஒலிக்கும் படி கிட்டினள் ஊழிதோர் ஓங்கு ஓங்கல்.
630.
சூலம் கண் மழுப் படை தோமரம் நேமி பிண்டி
பாலங்கள் கழுக் கடை வாள் படை தண்டம் நாஞ்சில்
ஆலம் கவிழ் கின்ற அயில் படை வீசி ஊழிக்
காலம் கலிக்கும் கடல் போன்ற களமர் ஆர்ப்பு.
709.
இடிக்கும் வான் உரு மேறுயர் நெடும் கொடி எகின  வெண் கொடி ஞாலம்
முடிக்கும் ஊழி நாள் உளர் கடும் கால் என மூச் செறி விடநாகம்
துடிக்க வாய் விடு முவண வண் கொடி முதல் சூழ்ந்து சேவகம் செய்யும்
கொடிக் குழாத்தின் உள் கொடி அரசாய் விடைக் கொடி புடை பெயர்ந்து ஆட.
கடல் சுவற வேல் விட்ட படலம்
1037.
பொரும் கடல் வேந்தனைக் கூவிப் பொன் என
இரும் கடல் உடுத்த பார் ஏழும் ஊழிநாள்
ஒருங்கு அடு வெள்ளம் ஒத்து உருத்துப் போய்  வளைந்து
அரும் கடி மதுரையை அழித்தியால் என்றான்.
1039.
கொதித்தலைக் கரங்கள் அண்ட கூடம் எங்கும் ஊடு போய்
அதிர்த்து அலைக்க ஊழி நாளில் ஆர்த்து அலைக்கும் நீத்தம் ஆய்
மதித் தலத்தை எட்டி முட்டி வரும் ஓர் அஞ்சனப்  பொருப்பு
உதித்தல் ஒத்து மண்ணும் விண்ணும் உட்க வந்தது உத்தியே.

வேதத்துக்குப் பொருள்அருளிச் செய்த படலம்
1154.
ஐம் பெரும் பூத நிலை திரிந்து ஈர் ஏழ் அடுக்கிய உலகொடு மயன் மால்
உம்பர் வான் பதமும் உதித்தவாறு ஒடுங்க உருத்தது ஓர் ஊழி வந்து எய்தச்
செம் பொருள் மறையும் ஒடுங்கிய வழி நாள் செம் சுடர் கடவுள் முன் மலரும்
வம்பு அவிழ் கமலம் என அரன் திருமுன் மலர்ந்ததால் அகிலமும் மாதோ.

வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்
1301.
சூலமோடு அழல் ஏந்தும் சொக்கர் திரு விளையாட்டின்
சீலமோ நாம் இழைத்த தீ வினையின் திறம் இது வோ
ஆலமோ உலகம் எலாம் அழிய வரும் பேர் ஊழிக்
காலமோ எனக் கலங்கிக் கடி நகரம் பனிப்பு எய்த.

நான் மாடக் கூடலான படலம்
1313.
ஊழிநாள் வெடிக்கும் அண்ட கடாகத்தின் ஒலிபோல் ஆர்த்துப்
பாழிவான் உருமு வீழப் பணாடவி மணிகள் சிந்தி
ஆழி நீர் ஞாலம் தாங்கும் அரா உடல் நெளிய திக்கில்
சூழி மால் யானை நின்ற நிலை கெடத் துணுக்கம் கொள்ள.
1322.
அன்ன நான் மாடத்துள்ளும் நகர் உளார் அமைச்சர் வேந்தன்
அன்ன நால் கருவித் தானை சராசரம் பிறவும் தாழ்ந்து
முன்னை நாள் தனினும் இன்பம் மூழ்கி நன்கு இருந்தார் ஊழில்
பொன்ன நாள் பாகன் தாளில் புக்கு அமர்ந்து இருந்தார் ஒத்தார்.

நாகமெய்த படலம்
1608.
அத்து அழன்று எரி குண்டம் நின்றும் அகன் பிலத்து எழுவான் என
பத்து துஞ்சிருள் வாயும் வாய் இருபாலும் வலிய பகிர் மதிக்கு
ஒத்தும் நஞ்சு இனம் ஒழுகு பற்களும் ஊழி ஆரல் விழிகளும்
வைத்து அசைந்து ஒரு வெற்பு வந்து என வந்துளான் ஒரு தானவன்.

அட்டமா சித்தி உபதேசித்த படலம்
1761.
மின் அலங்கள் வாகை வேல் விழுப் பெரும் குலத்தினில்
தென்னவன் தன் ஆணை நேமி திசை எலாம் உருட்டும் நாள்
முன்னை வைகல் ஊழி தோறும் ஒங்கும் மொய்வரைக்கணே
மன்னு தண் பராரை ஆல நிழல் மருங்கு மறை முதல்.

தண்ணீர்ப் பந்தர் வைத்த படலம்
1844.
விளை மத ஊற்று மாறி வெகுளியும் செருக்கும் மாறித்
துளை உடைக் கைமான் தூங்கு நடைய வாய்ச் சாம்பிச் சோர்ந்த
உளர் தரு ஊழிக் காலினோடும் ஆம் புரவி எய்த்துத்
தளர் நடை உடைய வாகித் தைவரும் தென்றல் போன்ற.

விறகு விற்ற படலம்
2074.
வாழிய உலகின் வானோர் மனிதர் புள் விலங்கு மற்றும்
ஆழிய கரணம் எல்லாம் அசைவு அற அடங்க ஐயன்
ஏழ் இசை மயமே ஆகி இருந்தன உணர்ந்தோர் உள்ளம்
ஊழியில் ஒருவன் தாள் புக்கு ஒடுங்கிய தன்மை ஒத்த.

இடைக் காடன் பிணக்குத் தீர்த்த படலம்
2637.
அறைந்தவித் தெய்வத்து ஆன அனைத்தும் ஓர் ஊழிக்  காலத்து
இறந்த நம் தோழன் கண்ட இலிங்கமாம் அதனால் இங்கே
உறைந்தனம் உறைதலாலே உத்தர ஆலவாய் ஆய்ச்
சிறந்திடத் தகுவது இன்று முதல் இந்தத் தெய்வத் தானம்.

பரி நரியாக்கி வைகை அழைத்த படலம்
2977.
கங்கைப் புனல் வடிவாகிய கவ்வைத் திரை வைகைச்
சங்கச்சரி அறல் ஆம் மலர்த் தார் ஓதியை நோக்கா
வங்கக் கடல் பேர் ஊழியில் வருமாறு என எவரும்
இங்கு அற்புதம் அடையப் பெருக என்றான் அருள் குன்றான்.

மண் சுமந்த படலம்
3082.
வழுதியால் விடுக்கப் பட்ட வாதவூர் முனிகள் தம்மைப்
பழுது இலாப் பாடல் கொள்வார் பதி பல பணிந்து போந்து
முழுது உணர் மறையோர் வேள்விப் புகை அண்ட முடி கீண்டு ஊழி
எழு வட வரை போல் தோன்றும் எழில் தில்லை மூதூர் சேர்ந்தார்.

பாண்டியன் சுரம் தீர்த்த படலம்
3123.
ஏழ் இசை மறை வல்லாளர் சிவபாத இதயர் என்னக்
காழியில் ஒருவர் உள்ளார் கார் அமண் கங்குல சீப்ப
ஆழியில் இரவி என்ன ஒரு மகவு அளித்தி என்னா
ஊழியில் ஒருவன் தாளை உள்கி நோற்று ஒழுகி நின்றார்.

சமணரைக் கழுவேற்றிய படலம்
3220.
(ஊழி = பிரளயம்)
(ஊழின் = ஊழ்+இன் =  விதியின்)
(ஊழி வேறு ஊழ் வேறு)
ஊழின் வலியால் அமணர் அதற்கு உடன் பட்டார்கள் அஃது அறிந்து
சூழி யானைக் குலைச் சிறையும் தச்சர் பலரைத் தொகுவித்துக்
காழின் நெடிய பழு மரத்தில் சூல வடிவாய்க் கழு நிறுவிப்
பாழி நெடிய தோள் வேந்தன் முன்னே கொடு போய் பரப்பினார்.

அருச்சனைப் படலம்
3325.
அடி முடி விலங்கும் புள்ளும் அளந்திடாது அண்டம் கீண்டு
நெடுகிய நெருப்பு நின்ற நிலை இது முள்வாய்க் கங்க
வடிவு எடுத்து இருவர் நோற்கும் மலை இது பல்வேறு ஊழி
இடை உற முன்னும் பின்னும் இருக்கும் இக் குன்றைக் காண்மின்.

பாடல் தொகுப்பு உதவி - நன்றி - http://www.tamilvu.org/ta/library-l41d0-html-l41d0ind-139511

Monday 4 November 2019

கிருதுமாலில் தண்ணீர்

40 ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் அவலம்: 
கிருதுமாலில் தண்ணீர் 
ஓடுவது எப்போது?

தினகரன் செய்தி -  
மதுரை: மதுரையின் இரண்டாவது தொன்மையான கிருதுமால் நதி தண்ணீர் இன்றி, 40 ஆண்டுகளாக வறண்டுள்ளது. நகர் பகுதியின் நிலத்தடி நீராதாரமான இந்த நதியில் வைகை தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.


மதுரையில் வைகை நதிக்கு அடுத்து, பெரிய நதியாக கிருதுமால் நதி ஓடியுள்ளது. இந்த நதி தொன்மையான நதியாக இருந்துள்ளது. வைகை நதி மதுரையின் வடபகுதி மக்களுக்கும், விவசாயத்திற்கும் கைகொடுத்தது. கிருதுமால் நதி தென்பகுதி மக்களுக்காக உருவானது. இந்த நதி நாகமலை அருகே, துவரிமான் கண்மாயில் உற்பத்தியாகி  அச்சம்பத்து, விராட்டிபத்து, கொக்குளப்பி,  பொன்மேனி, எல்லீஸ் நகர், தெற்குவாசல், கீரைத்துறை, சிந்தாமணி வழியாக மதுரையை கடந்து, சிவகங்கை மாவட்டம் கரிசல்குளம், கொந்தகை கண்மாயை அடைந்து ராமநாதபுரம் மாவட்டம், கீழவலசை என்ற இடத்தில், குண்டாற்றில் கலக்கிறது.
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் 200 கிமீ தூரம் கிருதுமால் நதி செல்கிறது. இந்த நதி மூலம் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களில், 40 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வந்தது. இந்த நதிக்கு தேவையான தண்ணீர் நாகமலை மற்றும் வைகை ஆற்றில் இருந்து துவரிமான் கண்மாய்க்கு வந்து சேர்ந்தது. இதனால் இந்த நதி வற்றாத நதியாக முன்பு ஓடிக்கொண்டிருந்தது. வைகையில் வெள்ளம் வரும்போது, இந்த நதியிலும் வெள்ளம் ஓடியுள்ளது.
40 ஆண்டுகளுக்கு முன்பு வரை நிலத்தடி நீருக்கும், பாசனத்துக்கும் பயன்பெற்ற கிருதுமால் நதி, இப்போது சீரழிந்து கிடக்கிறது. மதுரை நகரில் மட்டும் இந்த நதி முன்பு 120 அடி அகலத்தில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் ஓடியுள்ளது. காலம் செல்லச்செல்ல நதியின் இரண்டு கரையும் ஆக்கிரமிப்பு ஏற்பட்டு, தற்போது குறுகி விட்டது. கிருதுமால் நதி முகப்பு பகுதியில் தண்ணீராகவும், மதுரை நகருக்குள் வரும்போது சாக்கடையாகவும் ஓடிக்கொண்டுள்ளது. மதுரை நகரில் உள்ள கழிவுகளை மாநகராட்சி இந்த நதியில் கலந்துவிடுகிறது. பைபாஸ் ரோடு, எல்லீஸ் நகர், அழகப்பன் நகர், கீரைத்துறை, சிந்தாமணி போன்ற பகுதிகளில் உள்ள, சிறு தொழிற்சாலைகளின் கழிவு, சாயப்பட்டறை, தோல் பட்டறை கழிவு, ஆடு, மாடு, கோழி, பன்றி போன்றவற்றின் இறைச்சிக்கழிவுகள் நேரடியாக கலக்கின்றன. இந்தநதி முன்பு மதுரை தென்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக இருந்தது. இதில் தண்ணீர் ஓடும் போது மதுரையின் மையப்பகுதியில் நிலத்தடி நீர் உயர்ந்த நிலையில் இருந்தது. இந்த நதியின் ஆக்கிரமிப்பை அகற்ற அரசும் முன்வரவில்லை. இதனால் மதுரை நகரின் நிலத்தடி  நீர் மட்டம் தற்போது 700 அடிக்கு கீழ் சென்றுள்ளது.
2004ல் இந்த நதியை மேம்படுத்த ரூ.25 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது. உலக வங்கி உதவியுடன் தமிழ்நாடு நீர்வள, நிலவள மேம்பாடு மூலம் ரூ.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இந்த நதியை சுத்தம் செய்கிறோம் என்றனர். அதேபோன்று, மாநகராட்சி சிறப்பு நிதியாக ரூ.250 கோடி ஒதுக்கியதாக  தெரிவித்தது.  இவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்தும், நதியை சுத்தம் செய்யவோ, ஆக்கிரமிப்பை அகற்றி, அதனை பராமரிக்கவோ அரசும், மாநகராட்சி நிர்வாகமும் மறுக்கிறது. காரணம் பாதாளச்சாக்கடை கழிவுநீரை மாநகராட்சி பல இடங்களில் கிருதுமால் நதியில் விட்டுள்ளது. கிருதுமால் நதி அசுத்தம் ஆவதற்கு மாநகாரட்சிதான் மிகப்பெரிய காரணம். தற்போது வடகிழக்கு பருவமழையால் அனைத்து கால்வாய்களிலும் தண்ணீர் செல்கிறது. ஆனால், தொன்மையான கிருதுமால் நதியில் தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் வழக்கறிஞர் கனகவேல்பாண்டியன், முத்துகருப்பன் ஆகியோர் கூறுகையில், ‘‘மதுரை நகர் பகுதியில் முன்பு நிலத்தடி நீராதாரமாக இருந்த கிருதுமால் நதி, தற்போது தண்ணீர் இன்றி வறண்டுள்ளது. வைகையில் தற்போது மழைநீர் வெள்ளம் போல் ஓடுகிறது. வீணாக ஆற்றில் செல்லும் நீரில் ஒரு பகுதியை கிருதுமால் நதியில் திருப்பிவிட்டால், நகரில் நிலத்தடிநீர் மட்டம் உயரும். இந்த நதியில் ஆண்டுக்கொரு முறை தண்ணீர் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் இந்த நதியில் உள்ள 3 மாவட்ட பாசன பகுதியிலும், பாசனம் நடைபெறும். இதுதொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

நன்றி - http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=538317
 2019-11-04@ 11:42:04

Sunday 20 October 2019

தெய்வம் தொழும் தமிழர்

தெய்வம் தொழும் தமிழர்


தூங்கி எழும்போது தெய்வத்தை வணங்காமல் கணவனை வணங்கி எழுகிறாள் - என்கிறார் திருவள்ளுவர். 
சங்கத் தமிழர் இயற்கையை வழிபட்டார்களா? தெய்வங்களையும் வழிபட்டார்களா?

கீழடி அருகே தொல்லியலாளர் தோண்டிக் கண்டறிந்துள்ள நகரநாகரிகம் 2600 ஆண்டுகளுக்கும் பழைமையானது.  இங்கே வழிபாட்டுப் பொருட்களோ, சமயம்சார்ந்த பொருட்களோ ஏதும் கிடைக்கவில்லை. எனவே “இந்த இடத்தில் நூற்பாலையோ தொழிற்சாலையோ இருந்திருக்கலாம், இங்கு வாழ்ந்த தமிழர் இயற்கையை வணங்கியுள்ளனர், கடவுளை வணங்கிட வில்லை” என்று பலரும் சொல்லியும் எழுதியும் வருகின்றனர்.
உண்மையில் சங்கத்தமிழர் இயற்கையை மட்டுமே வணங்கியவர்களா?  கடவுளை வணங்கவில்லையா? என்று தேடிப்பார்த்தால், வியப்பிலும் வியப்பாக உள்ளது.  எட்டுத்தொகை பத்துப்பாட்டில் மட்டுமே தெய்வம் என்ற சொல் 42  இடங்களில் இடம் பெற்றுள்ளது.

உலகில் தோன்றி வாழ்ந்துவரும் மாந்தர்களுள் தமிழர் தலைசிறந்தவர். 
தமிழர் மட்டுமே 2600 ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்துத் தமிழாய்ந்துள்ளனர்.  எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் தமிழ்ச் சங்க இலக்கிய நூல்களாகும்.  நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பன எட்டுத்தொகை நூல்களாகும்.

திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்பன பத்துப்பாட்டு நூல்களாகும்.

இதில் உள்ள சங்கப்பாடல்களில் மட்டுமே 42 இடங்களில் தெய்வம் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. கடவுள் என்ற சொல் 93 இடங்களில் இடம் பெற்றுள்ளது.

தெய்வங்களின் பெயர்களையும் தனித்தனியாகத் தேடிப்பார்த்தால் இந்த எண்ணிக்கை இன்னும் கூடுதலாகும் இருக்கும்.

கீழடி யருகே தொல்லியலாளர்களால் கண்டறியப் பெற்றுள்ள தொல்லியல்மேடானது சுமார் 100 ஏக்கர் பரப்பளவு உள்ளது. அதில் சுமார் 8 ஏக்கர் அளவே கண்டறியப்பட்டுள்ளது.  முழுவதையும் கண்டறியும் போதுதான் தமிழரின் தொன்மையும், வழிபாடும், நகரநாகரிகத்தின் வளமையும் முழுமையாகத் தெரியவரும்.

நாம் நமது முப்பாட்டன்கள் வழி நின்று நமது கடவுள்களையும் தெய்வங்களையும் வழிபடுவோம்.
சங்கத் தமிழரைப் போற்றுவோம்,
சங்கத் தமிழ் போற்றுவோம்,
தொல்லியலாளர் போற்றுவோம்.

தெய்வம் என்ற சொல் இடம் பெற்றுள்ள 42 பாடல்வரிகளும் இணைப்பில் உள்ளன. 
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
ஐப்பசி 2 (19.10.2019) சனிக் கிழமை.

நன்றி – தொடரடைவு   http://tamilconcordance.in
(குறிப்பு – எனது சொற்தேடலில் விடுபட்ட பாடல்கள் ஏதேனும் இருந்தால் அறிஞர் பெருமக்கள் அன்புள்ளம் கொண்டு அதைச் சுட்டிக்காட்டி உதவிடுமாறு வேண்டுகிறேன்)

---------------------------------------------------
எட்டுத்தொகை நூல்களில் 34 இடங்களில் தெய்வம் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. பாடல்களின் தொகுப்பு.

வழிபடு தெய்வம் கண் கண்டு ஆஅங்கு - நற் 9/2
தேன் உடை நெடு வரை தெய்வம் எழுதிய - நற் 185/10
தெய்வம் காக்கும் தீது தீர் நெடும் கோட்டு - நற் 201/6
ஈண்டு பெரும் தெய்வத்து யாண்டு பல கழிந்து என - நற் 315/1
எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி - நற் 351/4
உரு கெழு தெய்வமும் கரந்து உறையின்றே - நற் 398/1

கரும் கண் தெய்வம் குட வரை எழுதிய - குறு 89/5
வேற்று பெரும் தெய்வம் பல் உடன் வாழ்த்தி - குறு 263/4

அந்தர_மகளிர்க்கு தெய்வமும் போன்றே - ஐங் 76/4

அர வழங்கும் பெரும் தெய்வத்து/வளை ஞரலும் பனி பௌவத்து - பதி 51/13,14
தெய்வம் தரூஉ நெஞ்சத்து ஆன்றோர் - பதி 73/6
தெய்வமும் யாவதும் தவம் உடையோர்க்கு என - பதி 74/26
பகை பெருமையின் தெய்வம் செப்ப - பதி 82/1
மாற்று அரும் தெய்வத்து கூட்டம் முன்னிய - பதி 88/24

அரு நிலை உயர் தெய்வத்து அணங்கு சால் தலை காக்கும் - பரி 9/2
சிலவினும் சிறந்தன தெய்வம் பெட்பு_உறும் - பரி 15/8
தெய்வம் பேணி திசை தொழுதனிர் செல்-மின் - பரி 15/48
தெய்வ விழவும் திருந்து விருந்து அயர்வும் - பரி 17/42
தெய்வ பிரமம் செய்குவோரும் - பரி 19/40

தெய்வத்து திறன் நோக்கி தெருமரல் தே_மொழி - கலி 16/19
வரை உறை தெய்வம் உவப்ப உவந்து - கலி 39/28
தெய்வத்தான் கண்டீ தெளிக்கு - கலி 91/8
தெய்வத்தின் தேற்றி தெளிப்பேன் பெரிது என்னை - கலி 98/32
தேயா விழு புகழ் தெய்வம் பரவுதும் - கலி 103/76
தீது இன்று பொலிக என தெய்வ கடி அயர்-மார் - கலி 105/6
தெய்வ மால் காட்டிற்று இவட்கு என நின்னை அ - கலி 107/32
பிரிவு இல்லாய் போல நீ தெய்வத்தின் தெளித்த_கால் - கலி 124/18
பெரும் கடல் தெய்வம் நீர் நோக்கி தெளித்து என் - கலி 131/1
வழிபட்ட தெய்வம் தான் வலி என சார்ந்தார்_கண் - கலி 132/21

கொடும் சுழி புகாஅர் தெய்வம் நோக்கி - அகம் 110/4
உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம்/புனை இரும் கதுப்பின் நீ கடுத்தோள்_வயின் - அகம் 166/7,8
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில் - அகம் 309/4
வெருவரு கடும் திறல் இரு பெரும் தெய்வத்து/உரு உடன் இயைந்த தோற்றம் போல - அகம் 360/6,7

இரு பெரும் தெய்வமும் உடன் நின்று ஆஅங்கு - புறம் 58/16
----------------------------------------------

பத்துப் பாட்டில் 8 இடங்களில் தெய்வம் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. பாடல்களின் தொகுப்பு.

தெய்வ_உத்தியொடு வலம்புரி வயின் வைத்து - திரு 23
நால் பெரும் தெய்வத்து நன் நகர் நிலைஇய - திரு 160
தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின் - திரு 287
மணம் கமழ் தெய்வத்து இள நலம் காட்டி - திரு 290

திரு முகம் அவிழ்ந்த தெய்வ தாமரை - சிறு 73

தெய்வ மடையின் தேக்கு இலை குவைஇ நும் - பெரும் 104

தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி - நெடு 77
மை அறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய - பட் 159
----------------------------------------

சங்கத் தமிழர் இயற்கையை வழிபட்டார்களா? கடவுள்களையும் தெய்வங்களையும் வழிபட்டார்களா?

சங்கத் தமிழர் 
இயற்கையை வழிபட்டார்களா? கடவுள்களையும் தெய்வங்களையும் வழிபட்டார்களா?


சங்கப்பாடல்களில் கடவுளும் தெய்வங்களும்

கீழடி அருகே தொல்லியலாளர் தோண்டிக் கண்டறிந்துள்ள நகரநாகரிகம் 2600 ஆண்டுகளுக்கும் பழைமையானது.  இங்கே வழிபாட்டுப் பொருட்களோ, சமயம்சார்ந்த பொருட்களோ இதுவரை ஏதும் கிடைக்கவில்லை. எனவே “இந்த இடத்தில் நூற்பாலையோ தொழிற்சாலையோ இருந்திருக்கலாம், இங்கு வாழ்ந்த தமிழர் இயற்கையை வணங்கியுள்ளனர், கடவுளை வணங்கிடவில்லை” என்று பலரும் சொல்லியும் எழுதியும் வருகின்றனர்.
உண்மையில் சங்கத்தமிழர் இயற்கையை மட்டுமே வணங்கியவர்களா?  கடவுளை வணங்கவில்லையா? என்று தேடிப்பார்த்தால், வியப்பிலும் வியப்பாக உள்ளது.

சங்கத் தமிழ் நூல்களான எட்டுத்தொகை பத்துப்பாட்டில் மட்டுமே கடவுள் தெய்வம் என்ற சொற்கள் 135  இடங்களில் இடம் பெற்றுள்ளன.

உலகில் தோன்றி வாழ்ந்துவரும் மாந்தர்களுள் தமிழர் தலைசிறந்தவர்.
தமிழர் மட்டுமே 2600 ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்துத் தமிழாய்ந்துள்ளனர்.  எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் தமிழ்ச் சங்க இலக்கிய நூல்களாகும்.   நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பன எட்டுத்தொகை நூல்களாகும்.  திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்பன பத்துப்பாட்டு நூல்களாகும்.

இவற்றில் உள்ள சங்கப்பாடல்களில் மட்டுமே 93 இடங்களில் கடவுள் என்ற சொல் இடம் பெற்றுள்ளது.  42 இடங்களில் தெய்வம் என்ற சொல் இடம் பெற்றுள்ளது.  இன்னும் இறைவன் என்ற சொல்லையும் அந்தந்தத் தெய்வங்களின் பெயர்களையும் தனித்தனியாகத் தேடிப்பார்த்தால் இந்த எண்ணிக்கை மிகவும் கூடுதலாகும் வாய்ப்புகள் உள்ளன.

கீழடி யருகே தொல்லியலாளர்களால் கண்டறியப் பெற்றுள்ள தொல்லியல் மேடானது சுமார் 100 ஏக்கர் பரப்பளவு உள்ளது. அதில் சுமார் 8 ஏக்கர் அளவே கண்டறியப்பட்டுள்ளது.  முழுவதையும் கண்டறியும் போதுதான் தமிழரின் தொன்மையும், வழிபாடும், நகரநாகரிகத்தின் வளமையும் முழுமையாகத் தெரியவரும்.

நாம் நமது முப்பாட்டன்கள் வழி நின்று நமது கடவுள்களையும் தெய்வங்களையும் வழிபடுவோம்.
சங்கத் தமிழரைப் போற்றுவோம்,
சங்கத் தமிழ் போற்றுவோம்,
தொல்லியலாளர் போற்றுவோம்.

மேற்சொன்ன 135 பாடல்வரிகளும் இணைப்பில் உள்ளன.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
ஐப்பசி 2 (19.10.2019) சனிக் கிழமை.

நன்றி தொடரடைவு   http://tamilconcordance.in
(குறிப்பு – எனது சொற்தேடலில் விடுபட்ட பாடல்கள் ஏதேனும் இருந்தால் அறிஞர் பெருமக்கள் அன்புள்ளம் கொண்டு அதைச் சுட்டிக்காட்டி உதவிடுமாறு வேண்டுகிறேன்)
-------------------------------------------
கடவுள் + தெய்வம் என்ற சொற்கள் இடம் பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை.
நற்றிணையில் 10 + 6 = 16
குறுந்தொகையில் 4 +2 =6
ஐங்குறுநூற்றில் 4 +1 = 5
பதிற்றுப்பத்தில் 12 + 5 = 17
பரிபாடலில் 4 + 5 = 9
கலித்தொகையில் 12 + 10 = 22
அகநானூற்றில் 20 + 4 = 24
புறநானூற்றில் 10  +1 = 11
என எட்டுத்தொகை நூல்களில் 76 இடங்களில் கடவுள் என்ற சொல்லும்,
34 இடங்களில் தெய்வம் என்ற சொல்லுமாக ஆகமொத்தம் 110 இடங்களில் கடவுளும் தெய்வமும் பெற்றுள்ளன.

திருமுருகாற்றுப்படையில் 1 + 4 = 5
பொருநர் ஆற்றுப்படையில் 1 + 0 = 1
சிறுபாணாற்றுப்படையில் 1 + 1 = 2
பெரும்பாணாற்றுப்படையில் 2 + 1 = 3
மதுரைக்காஞ்சியில் 4,
குறிஞ்சிப் பாட்டில் 4,
மலைபடுகடாமில் 4
---------------------------------------
கடவுள் என்ற சொல் இடம் பெற்றுள்ள பாடல்களின் தொகுப்பு -
நற்றிணையில் 10
கடவுள் கல் சுனை அடை இறந்து அவிழ்ந்த - நற் 34/1
கடவுள் ஆயினும் ஆக - நற் 34/10
கடவுள் முது மரத்து உடன் உறை பழகிய - நற் 83/2
கடவுள் ஓங்கு வரை பேண்-மார் வேட்டு எழுந்து - நற் 165/4
தெறல் அரும் கடவுள் முன்னர் சீறியாழ் - நற் 189/3
எரி மருள் வேங்கை கடவுள் காக்கும் - நற் 216/6
பலி பெறு கடவுள் பேணி கலி சிறந்து - நற் 251/8
தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை - நற் 303/3
நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து - நற் 343/4
கணம் கெழு கடவுட்கு உயர் பலி தூஉய் - நற் 358/6

குறுந்தொகையில் 4
மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள்/கொடியோர் தெறூஉம் என்ப யாவதும் - குறு 87/1,2
கடி உண் கடவுட்கு இட்ட செழும் குரல் - குறு 105/2
கடவுள் நண்ணிய பாலோர் போல - குறு 203/4
கடவுள் கற்பின் அவன் எதிர் பேணி - குறு 252/4

ஐங்குறுநூற்றில் 4
அரும் திறல் கடவுள் அல்லன் - ஐங் 182/3
கறி வளர் சிலம்பின் கடவுள் பேணி - ஐங் 243/1
குன்ற குறவன் கடவுள் பேணி - ஐங் 257/1
மலை உறை கடவுள் குலமுதல் வழுத்தி - ஐங் 259/3

பதிற்றுப்பத்தில் 12
காடே கடவுள் மேன புறவே - பதி 13/20
உரு கெழு மரபின் கடவுள் பேணியர் - பதி 21/5
நிலை பெறு கடவுளும் விழை_தக பேணி - பதி 21/15
அரும் திறல் மரபின் கடவுள் பேணியர் - பதி 30/34
கடவுள் அஞ்சி வானத்து இழைத்த - பதி 31/18
கைவல் இளையர் கடவுள் பழிச்ச - பதி 41/6
கடவுள் நிலைய கல் ஓங்கு நெடு வரை - பதி 43/6
காமர் கடவுளும் ஆளும் கற்பின் - பதி 65/9
கடவுள் வாகை துய் வீ ஏய்ப்ப - பதி 66/15
வேள்வியில் கடவுள் அருத்தினை கேள்வி - பதி 70/18
கடவுள் அயிரையின் நிலைஇ - பதி 79/18
கடவுள் பெயரிய கானமொடு கல் உயர்ந்து - பதி 88/2

பரிபாடலில் 4
நூறு_ஆயிரம் கை ஆறு அறி கடவுள்/அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல் - பரி 3/43,44
நின்னில் சிறந்த நிறை கடவுளவை/அன்னோர் அல்லா வேறும் உள அவை - பரி 4/63,64
காஅய் கடவுள் சேஎய் செவ்வேள் - பரி 5/13
கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய - பரி 5/44

கலித்தொகையில் 12
நிலை உயர் கடவுட்கு கடம் பூண்டு தன் மாட்டு - கலி 46/16
கடவுள் கடி நகர்-தோறும் இவனை - கலி 84/6
கடவுளர் கண் தங்கினேன் - கலி 93/7
கடவுண்மை கொண்டு ஒழுகுவார் - கலி 93/9
அவருள் எ கடவுள் மற்று அ கடவுளை செப்பீ-மன் - கலி 93/10
அ கடவுள் மற்று அ கடவுள் அது ஒக்கும் - கலி 93/13
செறி முறை வந்த கடவுளை கண்டாயோ - கலி 93/20
பூ பலி விட்ட கடவுளை கண்டாயோ - கலி 93/24
மாரி இறுத்த கடவுளை கண்டாயோ - கலி 93/28
கண்ட கடவுளர் தம்முளும் நின்னை - கலி 93/29
நெட்டு இரும் கூந்தல் கடவுளர் எல்லார்க்கும் - கலி 93/35
படர் அணி அந்தி பசும்_கண்_கடவுள் - கலி 101/24

அகநானூற்றில் 20
தெறல் அரு மரபின் கடவுள் பேணி - அகம் 13/3
கடவுள் வாழ்த்தி பையுள் மெய் நிறுத்து - அகம் 14/16
அணங்கு அரும் கடவுள் அன்னோள் நின் - அகம் 16/18
வல் ஆண் பதுக்கை கடவுள் பேண்-மார் - அகம் 35/7
கடவுள் எழுதிய பாவையின் - அகம் 62/15
அரும் திறல் கடவுள் செல்லூர் குணாஅது - அகம் 90/9
கைதொழு மரபின் கடவுள் சான்ற - அகம் 125/14
கடி நகர் புனைந்து கடவுள் பேணி - அகம் 136/6
கடவுள் காந்தளுள்ளும் பல உடன் - அகம் 152/17
நிலை துறை கடவுட்கு உளப்பட ஓச்சி - அகம் 156/15
எழுது அணி கடவுள் போகலின் புல்லென்று - அகம் 167/15
கடவுள் கற்பொடு குடிக்கு விளக்கு ஆகிய - அகம் 184/1
நிலை பெறு கடவுள் ஆக்கிய - அகம் 209/16
கடவுள் மரத்த முள் மிடை குடம்பை - அகம் 270/12
இல் உறை கடவுட்கு ஓக்குதும் பலியே - அகம் 282/18
கடவுள் போகிய கரும் தாள் கந்தத்து - அகம் 307/12
கடவுள் கற்பின் மடவோள் கூற - அகம் 314/15
கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கி குறவர் - அகம் 348/8
அரும் தெறல் மரபின் கடவுள் காப்ப - அகம் 372/1
தெறல் அரும் கடவுள் முன்னர் தேற்றி - அகம் 396/7

புறநானூற்றில் 10
கலி கெழு கடவுள் கந்தம் கைவிட - புறம் 52/12
கடவுள் பேணேம் என்னா ஆங்கு - புறம் 106/3
கடவுள் பேணிய குறவர் மாக்கள் - புறம் 143/3
அரும் திறல் கடவுள் காக்கும் உயர் சிமை - புறம் 158/11
கடவுள் சான்ற கற்பின் சே இழை - புறம் 198/3
ஆல்_அமர்_கடவுள் அன்ன நின் செல்வம் - புறம் 198/9
கடவுள் ஆலத்து தடவு சினை பல் பழம் - புறம் 199/1
கள்ளி நீழல் கடவுள் வாழ்த்தி - புறம் 260/5
நெல் உகுத்து பரவும் கடவுளும் இலவே - புறம் 335/12
கடியும் உணவு என்ன கடவுட்கும் தொடேன் - புறம் 399/26

திருமுருகாற்றுப்படையில் 1
ஆல்_கெழு_கடவுள் புதல்வ மால் வரை - திரு 256

பொருநர் ஆற்றுப்படையில் 1
காடு உறை கடவுள் கடன் கழிப்பிய பின்றை - பொரு 52

சிறுபாணாற்றுப்படையில் 1
கடவுள் மால் வரை கண்விடுத்து அன்ன - சிறு 205

பெரும்பாணாற்றுப்படையில் 2
கடவுள் ஒண் பூ அடைதல் ஓம்பி - பெரும் 290
அரும் திறல் கடவுள் வாழ்த்தி சிறிது நும் - பெரும் 391

மதுரைக்காஞ்சியில் 4
தொன் முது கடவுள் பின்னர் மேய - மது 41
சிறந்து புறங்காக்கும் கடவுள் பள்ளியும் - மது 467
கடவுள் வழங்கும் கையறு கங்குலும் - மது 651
கடவுள் கயத்து அமன்ற சுடர் இதழ் தாமரை - மது 710

குறிஞ்சிப் பாட்டில் 2
வேறு பல் உருவின் கடவுள் பேணி - குறி 6
மீமிசை கடவுள் வாழ்த்தி கைதொழுது - குறி 209

மலைபடுகடாமில் 4
காரி உண்டி கடவுளது இயற்கையும் - மலை 83
பராவு அரு மரபின் கடவுள் காணின் - மலை 230
கடவுள் ஓங்கிய காடு ஏசு கவலை - மலை 396
அரும் திறல் கடவுள் பழிச்சிய பின்றை - மலை 538
---------------------------------------------------
எட்டுத்தொகை நூல்களில் 34 இடங்களில் தெய்வம் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. பாடல்களின் தொகுப்பு.

வழிபடு தெய்வம் கண் கண்டு ஆஅங்கு - நற் 9/2
தேன் உடை நெடு வரை தெய்வம் எழுதிய - நற் 185/10
தெய்வம் காக்கும் தீது தீர் நெடும் கோட்டு - நற் 201/6
ஈண்டு பெரும் தெய்வத்து யாண்டு பல கழிந்து என - நற் 315/1
எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி - நற் 351/4
உரு கெழு தெய்வமும் கரந்து உறையின்றே - நற் 398/1

கரும் கண் தெய்வம் குட வரை எழுதிய - குறு 89/5
வேற்று பெரும் தெய்வம் பல் உடன் வாழ்த்தி - குறு 263/4

அந்தர_மகளிர்க்கு தெய்வமும் போன்றே - ஐங் 76/4

அர வழங்கும் பெரும் தெய்வத்து/வளை ஞரலும் பனி பௌவத்து - பதி 51/13,14
தெய்வம் தரூஉ நெஞ்சத்து ஆன்றோர் - பதி 73/6
தெய்வமும் யாவதும் தவம் உடையோர்க்கு என - பதி 74/26
பகை பெருமையின் தெய்வம் செப்ப - பதி 82/1
மாற்று அரும் தெய்வத்து கூட்டம் முன்னிய - பதி 88/24

அரு நிலை உயர் தெய்வத்து அணங்கு சால் தலை காக்கும் - பரி 9/2
சிலவினும் சிறந்தன தெய்வம் பெட்பு_உறும் - பரி 15/8
தெய்வம் பேணி திசை தொழுதனிர் செல்-மின் - பரி 15/48
தெய்வ விழவும் திருந்து விருந்து அயர்வும் - பரி 17/42
தெய்வ பிரமம் செய்குவோரும் - பரி 19/40

தெய்வத்து திறன் நோக்கி தெருமரல் தே_மொழி - கலி 16/19
வரை உறை தெய்வம் உவப்ப உவந்து - கலி 39/28
தெய்வத்தான் கண்டீ தெளிக்கு - கலி 91/8
தெய்வத்தின் தேற்றி தெளிப்பேன் பெரிது என்னை - கலி 98/32
தேயா விழு புகழ் தெய்வம் பரவுதும் - கலி 103/76
தீது இன்று பொலிக என தெய்வ கடி அயர்-மார் - கலி 105/6
தெய்வ மால் காட்டிற்று இவட்கு என நின்னை அ - கலி 107/32
பிரிவு இல்லாய் போல நீ தெய்வத்தின் தெளித்த_கால் - கலி 124/18
பெரும் கடல் தெய்வம் நீர் நோக்கி தெளித்து என் - கலி 131/1
வழிபட்ட தெய்வம் தான் வலி என சார்ந்தார்_கண் - கலி 132/21

கொடும் சுழி புகாஅர் தெய்வம் நோக்கி - அகம் 110/4
உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம்/புனை இரும் கதுப்பின் நீ கடுத்தோள்_வயின் - அகம் 166/7,8
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில் - அகம் 309/4
வெருவரு கடும் திறல் இரு பெரும் தெய்வத்து/உரு உடன் இயைந்த தோற்றம் போல - அகம் 360/6,7

இரு பெரும் தெய்வமும் உடன் நின்று ஆஅங்கு - புறம் 58/16
----------------------------------------------

பத்துப் பாட்டில் 8 இடங்களில் தெய்வம் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. பாடல்களின் தொகுப்பு.

தெய்வ_உத்தியொடு வலம்புரி வயின் வைத்து - திரு 23
நால் பெரும் தெய்வத்து நன் நகர் நிலைஇய - திரு 160
தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின் - திரு 287
மணம் கமழ் தெய்வத்து இள நலம் காட்டி - திரு 290

திரு முகம் அவிழ்ந்த தெய்வ தாமரை - சிறு 73

தெய்வ மடையின் தேக்கு இலை குவைஇ நும் - பெரும் 104

தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி - நெடு 77
மை அறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய - பட் 159
----------------------------------------

Saturday 19 October 2019

சங்கத் தமிழரின் கடவுள் வழிபாடு

சங்கத் தமிழரின் கடவுள் வழிபாடு


கீழடி அருகே தொல்லியலாளர் தோண்டிக் கண்டறிந்துள்ள நகரநாகரிகம் 2600 ஆண்டுகளுக்கும் பழைமையானது.  இங்கே வழிபாட்டுப் பொருட்களோ, சமயம்சார்ந்த பொருட்களோ ஏதும் கிடைக்கவில்லை. எனவே “இந்த இடத்தில் நூற்பாலையோ தொழிற்சாலையோ இருந்திருக்கலாம், இங்கு வாழ்ந்த தமிழர் இயற்கையை வணங்கியுள்ளனர், கடவுளை வணங்கிடவில்லை” என்று பலரும் சொல்லியும் எழுதியும் வருகின்றனர்.

உண்மையில் சங்கத்தமிழர் இயற்கையை மட்டுமே வணங்கியவர்களா?  கடவுளை வணங்கவில்லையா? என்று தேடிப்பார்த்தால், வியப்பிலும் வியப்பாக உள்ளது. ஆம், சங்கப்பாடல்களான எட்டுத்தொகையிலும் பத்துப்பாட்டிலும் மட்டுமே 93 இடங்களில் கடவுள் பாடப்பெற்றுள்ளார்.  இன்னும் தெய்வம் இறைவன் என்ற சொற்களையும் சேர்த்துத் தேடிப்பார்த்தால் இந்த எண்ணிக்கை மிகவும் கூடுதலாகும் வாய்ப்புகள் உள்ளன.

உலகில் தோன்றி வாழ்ந்துவரும் மாந்தர்களுள் தமிழர் தலைசிறந்தவர்.  தமிழர் மட்டுமே 2600 ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்துத் தமிழாய்ந்துள்ளனர்.  எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் தமிழ்ச் சங்க இலக்கிய நூல்களாகும்.  நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பன எட்டுத்தொகை நூல்களாகும். திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்பன பத்துப்பாட்டு நூல்களாகும்.

நற்றிணையில் 10 , குறுந்தொகையில் 4 , ஐங்குறுநூற்றில் 4 , பதிற்றுப்பத்தில் 12 , பரிபாடலில் 4, கலித்தொகையில் 12, அகநானூற்றில் 20, புறநானூற்றில் 10 என எட்டுத்தொகை நூல்களில் 76 இடங்களில் கடவுள் என்ற சொல் இடம் பெற்றுள்ளது.

திருமுருகாற்றுப்படையில் 1, பொருநர் ஆற்றுப்படையில் 1, சிறுபாணாற்றுப்படையில் 1, பெரும்பாணாற்றுப்படையில் 2, மதுரைக்காஞ்சியில் 4, குறிஞ்சிப் பாட்டில் 4, மலைபடுகடாமில் 4 என பத்துப்பாட்டு நூல்களில் 17 இடங்களில் கடவுள் என்ற சொல் இடம் பெற்றுள்ளது.

ஆக மொத்தம் எட்டுத்தொகை பத்துப்பாட்டில் மட்டுமே 93 பாடல் வரிகளில் கடவுள் என்ற சொல் இடம் பெற்றுள்ளது.

கீழடி யருகே தொல்லியலாளர்களால் கண்டறியப் பெற்றுள்ள தொல்லியல்மேடானது சுமார் 100 ஏக்கர் பரப்பளவு உள்ளது. அதில் சுமார் 8 ஏக்கர் அளவே கண்டறியப்பட்டுள்ளது.  முழுவதையும் கண்டறியும் போதுதான் தமிழரின் தொன்மையும், வழிபாடும், நகரநாகரிகத்தின் வளமையும் முழுமையாகத் தெரியவரும். 

சங்கத் தமிழர் வழிநின்று நாம் நம் கடவுள்களை வாழ்த்துவோம்,
சங்கத் தமிழரைப் போற்றுவோம்,
சங்கத் தமிழ் போற்றுவோம்,
தொல்லியலாளர் போற்றுவோம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
ஐப்பசி 2 (19.10.2019) சனிக் கிழமை.

நன்றி – தொடரடைவு   http://tamilconcordance.in
(குறிப்பு – எனது சொற்தேடலில் விடுபட்ட பாடல்கள் ஏதேனும் இருந்தால் அறிஞர் பெருமக்கள் அன்புள்ளம் கொண்டு அதைச் சுட்டிக்காட்டி உதவிடுமாறு வேண்டுகிறேன்)

-------------------------------------------------------------------------------------------------
கடவுள் என்ற சொல் இடம் பெற்றுள்ள பாடல்களின் தொகுப்பு -
நற்றிணையில் 10
கடவுள் கல் சுனை அடை இறந்து அவிழ்ந்த - நற் 34/1
கடவுள் ஆயினும் ஆக - நற் 34/10
கடவுள் முது மரத்து உடன் உறை பழகிய - நற் 83/2
கடவுள் ஓங்கு வரை பேண்-மார் வேட்டு எழுந்து - நற் 165/4
தெறல் அரும் கடவுள் முன்னர் சீறியாழ் - நற் 189/3
எரி மருள் வேங்கை கடவுள் காக்கும் - நற் 216/6
பலி பெறு கடவுள் பேணி கலி சிறந்து - நற் 251/8
தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை - நற் 303/3
நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து - நற் 343/4
கணம் கெழு கடவுட்கு உயர் பலி தூஉய் - நற் 358/6
--------------------------------
குறுந்தொகையில் 4
மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள்/கொடியோர் தெறூஉம் என்ப யாவதும் - குறு 87/1,2
கடி உண் கடவுட்கு இட்ட செழும் குரல் - குறு 105/2
கடவுள் நண்ணிய பாலோர் போல - குறு 203/4
கடவுள் கற்பின் அவன் எதிர் பேணி - குறு 252/4
--------------------------------
ஐங்குறுநூற்றில் 4
அரும் திறல் கடவுள் அல்லன் - ஐங் 182/3
கறி வளர் சிலம்பின் கடவுள் பேணி - ஐங் 243/1
குன்ற குறவன் கடவுள் பேணி - ஐங் 257/1
மலை உறை கடவுள் குலமுதல் வழுத்தி - ஐங் 259/3
--------------------------------
பதிற்றுப்பத்தில் 12
காடே கடவுள் மேன புறவே - பதி 13/20
உரு கெழு மரபின் கடவுள் பேணியர் - பதி 21/5
நிலை பெறு கடவுளும் விழை_தக பேணி - பதி 21/15
அரும் திறல் மரபின் கடவுள் பேணியர் - பதி 30/34
கடவுள் அஞ்சி வானத்து இழைத்த - பதி 31/18
கைவல் இளையர் கடவுள் பழிச்ச - பதி 41/6
கடவுள் நிலைய கல் ஓங்கு நெடு வரை - பதி 43/6
காமர் கடவுளும் ஆளும் கற்பின் - பதி 65/9
கடவுள் வாகை துய் வீ ஏய்ப்ப - பதி 66/15
வேள்வியில் கடவுள் அருத்தினை கேள்வி - பதி 70/18
கடவுள் அயிரையின் நிலைஇ - பதி 79/18
கடவுள் பெயரிய கானமொடு கல் உயர்ந்து - பதி 88/2
--------------------------------
பரிபாடலில் 4
நூறு_ஆயிரம் கை ஆறு அறி கடவுள்/அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல் - பரி 3/43,44
நின்னில் சிறந்த நிறை கடவுளவை/அன்னோர் அல்லா வேறும் உள அவை - பரி 4/63,64
காஅய் கடவுள் சேஎய் செவ்வேள் - பரி 5/13
கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய - பரி 5/44
--------------------------------
கலித்தொகையில் 12
நிலை உயர் கடவுட்கு கடம் பூண்டு தன் மாட்டு - கலி 46/16
கடவுள் கடி நகர்-தோறும் இவனை - கலி 84/6
கடவுளர் கண் தங்கினேன் - கலி 93/7
கடவுண்மை கொண்டு ஒழுகுவார் - கலி 93/9
அவருள் எ கடவுள் மற்று அ கடவுளை செப்பீ-மன் - கலி 93/10
அ கடவுள் மற்று அ கடவுள் அது ஒக்கும் - கலி 93/13
செறி முறை வந்த கடவுளை கண்டாயோ - கலி 93/20
பூ பலி விட்ட கடவுளை கண்டாயோ - கலி 93/24
மாரி இறுத்த கடவுளை கண்டாயோ - கலி 93/28
கண்ட கடவுளர் தம்முளும் நின்னை - கலி 93/29
நெட்டு இரும் கூந்தல் கடவுளர் எல்லார்க்கும் - கலி 93/35
படர் அணி அந்தி பசும்_கண்_கடவுள் - கலி 101/24
--------------------------------
அகநானூற்றில் 20
தெறல் அரு மரபின் கடவுள் பேணி - அகம் 13/3
கடவுள் வாழ்த்தி பையுள் மெய் நிறுத்து - அகம் 14/16
அணங்கு அரும் கடவுள் அன்னோள் நின் - அகம் 16/18
வல் ஆண் பதுக்கை கடவுள் பேண்-மார் - அகம் 35/7
கடவுள் எழுதிய பாவையின் - அகம் 62/15
அரும் திறல் கடவுள் செல்லூர் குணாஅது - அகம் 90/9
கைதொழு மரபின் கடவுள் சான்ற - அகம் 125/14
கடி நகர் புனைந்து கடவுள் பேணி - அகம் 136/6
கடவுள் காந்தளுள்ளும் பல உடன் - அகம் 152/17
நிலை துறை கடவுட்கு உளப்பட ஓச்சி - அகம் 156/15
எழுது அணி கடவுள் போகலின் புல்லென்று - அகம் 167/15
கடவுள் கற்பொடு குடிக்கு விளக்கு ஆகிய - அகம் 184/1
நிலை பெறு கடவுள் ஆக்கிய - அகம் 209/16
கடவுள் மரத்த முள் மிடை குடம்பை - அகம் 270/12
இல் உறை கடவுட்கு ஓக்குதும் பலியே - அகம் 282/18
கடவுள் போகிய கரும் தாள் கந்தத்து - அகம் 307/12
கடவுள் கற்பின் மடவோள் கூற - அகம் 314/15
கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கி குறவர் - அகம் 348/8
அரும் தெறல் மரபின் கடவுள் காப்ப - அகம் 372/1
தெறல் அரும் கடவுள் முன்னர் தேற்றி - அகம் 396/7
--------------------------------
புறநானூற்றில் 10
கலி கெழு கடவுள் கந்தம் கைவிட - புறம் 52/12
கடவுள் பேணேம் என்னா ஆங்கு - புறம் 106/3
கடவுள் பேணிய குறவர் மாக்கள் - புறம் 143/3
அரும் திறல் கடவுள் காக்கும் உயர் சிமை - புறம் 158/11
கடவுள் சான்ற கற்பின் சே இழை - புறம் 198/3
ஆல்_அமர்_கடவுள் அன்ன நின் செல்வம் - புறம் 198/9
கடவுள் ஆலத்து தடவு சினை பல் பழம் - புறம் 199/1
கள்ளி நீழல் கடவுள் வாழ்த்தி - புறம் 260/5
நெல் உகுத்து பரவும் கடவுளும் இலவே - புறம் 335/12
கடியும் உணவு என்ன கடவுட்கும் தொடேன் - புறம் 399/26
--------------------------------
திருமுருகாற்றுப்படையில் 1
ஆல்_கெழு_கடவுள் புதல்வ மால் வரை - திரு 256
--------------------------------
பொருநர் ஆற்றுப்படையில் 1
காடு உறை கடவுள் கடன் கழிப்பிய பின்றை - பொரு 52
--------------------------------
சிறுபாணாற்றுப்படையில் 1
கடவுள் மால் வரை கண்விடுத்து அன்ன - சிறு 205
--------------------------------
பெரும்பாணாற்றுப்படையில் 2
கடவுள் ஒண் பூ அடைதல் ஓம்பி - பெரும் 290
அரும் திறல் கடவுள் வாழ்த்தி சிறிது நும் - பெரும் 391
--------------------------------
மதுரைக்காஞ்சியில் 4
தொன் முது கடவுள் பின்னர் மேய - மது 41
சிறந்து புறங்காக்கும் கடவுள் பள்ளியும் - மது 467
கடவுள் வழங்கும் கையறு கங்குலும் - மது 651
கடவுள் கயத்து அமன்ற சுடர் இதழ் தாமரை - மது 710
--------------------------------
குறிஞ்சிப் பாட்டில் 2
வேறு பல் உருவின் கடவுள் பேணி - குறி 6
மீமிசை கடவுள் வாழ்த்தி கைதொழுது - குறி 209
--------------------------------
மலைபடுகடாமில் 4
காரி உண்டி கடவுளது இயற்கையும் - மலை 83
பராவு அரு மரபின் கடவுள் காணின் - மலை 230
கடவுள் ஓங்கிய காடு ஏசு கவலை - மலை 396
அரும் திறல் கடவுள் பழிச்சிய பின்றை - மலை 538
--------------------------------

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

Tuesday 15 October 2019

கீழடி, சங்ககால மதுரையா ? குடியிருப்பா அல்லது தொழிற்கூடமா ?

கீழடி,  சங்ககால மதுரையா ?
கண்டியறியப்பட்டுள்ள இடம் 
குடியிருப்பா  அல்லது தொழிற்கூடமா ?


தொல்லியலாளர் திரு கி.அமர்நாத் அவர்கள் கீழடியைத் தோண்டிக் கண்டறிவதற்கு முன்பும்(1986), கண்டறிந்த போதும்(2015), இந்நாளிலும் (2019) தொடர்ந்து நேரில் பலமுறை சென்று முயன்று பார்த்து வருகிறேன்.

எனது பார்வையில்... கருத்தில் ....
தொல்லியலாளர் திரு கி. அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள்  கொண்டிருக்கும் கோணம் மிகவும் சரியானது என்பதே எனது கருத்து.
திரு அமர்நாத் அவர்களால் கீழடி யருகே கண்டறியப்பட்டுள்ள நகரமானது மதுரையல்ல என்றும், அந்த இடம் ஒரு தொழிற்கூடம் என்றும் சான்றில்லாத கருத்துக்களைச் சிலர் பரப்பி வருகின்றனர்.  இவை தவறான கருத்துகளாகும்.  இக்கருத்துக்களைக் கொண்டுள்ளோர் தமிழ்ச் சங்க இலக்கியங்களையும் தமிழில் உள்ள புராணங்களையும் படித்து அறிந்து கொள்ள வேண்டும்.  பலாப்பலத்தின் தோலை நீக்கிவிட்டு உள்ளேயுள்ள பலாச்சுளையைச் சாப்பிடுவது போன்று, சங்கத் தமிழ் இலக்கியங்களிலும் புராணங்களிலும் கூறப்பட்டுள்ள புனைவுகளை (பலாப் பழத்தின் தோலை ) நீங்கிவிட்டு, அதில் பொதிந்துள்ள கருத்துகளை அனைவரும் விருப்பு வெறுப்பின்றி (பலாச்சுளையை)க் கருத்திற் கொள்ள வேண்டும்.



கீழடிதான்  பண்டைய மதுரையா .... 
அகநானூறும் புறநானூறும் நக்கீரரும் திருப்பரங்குன்றத்திற்குக் கிழக்கே பாண்டியர்களின் தலைநகரான கூடல் என்ற மதுரை மாநகர் உள்ளது என்று பாடியுள்ளனர்.  ஆனால் இப்போதுள்ள மதுரை மாநகரமானது திருப்பரங்குன்றத்திற்கு வடக்கே உள்ளது.
திருப்பரங்குன்றத்திற்குக் கிழக்கே அவனியாபுரம் உள்ளது. அவனியாபுரம் அருகே கோவலன் பொட்டல் உள்ளது.   எனவே இப்போதுள்ள அவனியாபுரமே சங்ககாலத்து மதுரையாக இருக்க வேண்டும் எனத் தமிழ்அறிஞர்கள் பலரும் ஆராய்ந்து பார்த்துள்ளனர்.  இவர்களுள் பேராசிரியர் தெய்வத்திரு சங்கரராஜீலு அவர்களும் ஒருவர்.  இவர் அழகப்பா பல்கலைக்கழகத்தின் முதல் பதிவாளராகப் பணியாற்றினார்.   1986ஆம் ஆண்டில் அவனியாபுரம் மற்றும் புதூர் மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள இடங்களை எல்லாம் நேரில் சென்றுபார்த்துப் பெரிதும் முயன்று ஆராய்ந்தார். 
சங்கப்பாடலில் குறிப்பிடப்படும் கூடல்மாநகரின் பரப்பளவிற்குச் சமமான பரப்பளவு உள்ள தொல்லியல் மேடு எதையும் அவனியாபுரம் அருகே கண்டறிய முடியவில்லை. எனவே அவனியாபுரம் சங்ககாலக் கூடல் மாநகரமாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறினார்.  அதற்காக அவரைத் திராவிடர் என்றும் கூறி அவரது முடிபைப் புறந்தள்ளினர் சிலர்.
கீழடி அருகே தொல்லியலாளர் திரு அமர்நாத் அவர்கள் தோண்டிக் கண்டறிந்துள்ள நகரம் திருப்பரங்குன்றத்திற்கு நேர் கிழக்கே உள்ளது.  சுமார் 800 மீட்டர் நீளத்திற்குச் செங்கலாலான மதில்சுவர் இங்கே கண்டறியப்பட்டுள்ளது.  மேலு ஆற்றுமணல் திட்டுகளும் உள்ளன.  கூடல் நகரின் பல்வேறு சிறப்புக்களையும் இந்தப் புதையுண்டுள்ள நகரம் கொண்டுள்ளது.  எனவே நக்கீரரும் சங்கத்தமிழ்ப் புலவர் பலரும் பாடியுள்ள “கூடல்” மாநகர் இதுதான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.  ஐயந்திரிபற அறிவியல் அடிப்படையில் கூறிட வேண்டுமென்றால், தொல்லியலாளர்கள் தோண்டும் இடத்திற்கு அருகே சுமார் 500 மீட்டர் கிழக்கே தொன்மையான சிவலாயம் ஒன்று புதையுண்டுள்ளது.  அதைத் தோண்டிக் கண்டறிந்தால் அதில் சங்ககாலக் கல்வெட்டுகள் இருக்க வாய்ப்புகள் உண்டு.


இது  குடியிருப்பா  அல்லது தொழில் நகரமா ....  
இங்கே கண்டறிப்பட்டுள்ள கட்டுமானங்கள், நெசவுத்தொழிற் கூடமாக அல்லது குயவர்களின் பானைத் தொழிற்கூடமாக இருக்கலாம் எனப் பலரும் கூறிவருகின்றனர்.   ஆனால் இவர்கள்யாரும் இக்கருத்துகளுக்குச் சான்றுகள் எதையும் குறிப்பிடவில்லை. 
திரு அமர்நாத் அவர்கள், “இத் தொழில்கள் நடைபெற்றதற்கான எச்சங்கள் ஏதும் இங்கே கிடைக்கப்பெறவில்லை. எனவே இந்த இடம் தொழிற்கூடமாக இருக்க வாய்ப்பில்லை” என்று விளக்கம் அளித்துள்ளர்.
ஆனால் இந்தப் குறிப்பிட்ட கட்டுமானமானது குடியிருப்பும் அல்ல, தொழிற்சாலையும் அல்ல. இது ஒரு மாட்டுத் தொழும்,  மாட்டுப் பண்ணை என்பது எனது கருத்து.  இங்கே கண்டறிப்பட்டுள்ள அடுக்குப் பானைகள் மாடுகளுக்குத் தீவனமும் தண்ணீரும் வைக்கப் பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும்.

உறைகிணறு – சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை வைகை ஆற்றுப் படுகைகளில் வாழ்வோர், வைகையின் ஊற்றுநீரை உண்டே வாழ்ந்தனர்.   எனவே,  மாடுப்பண்ணை, மாட்டுத் தொழுவங்களுக்கு உறைகிணறு பயன்படுத்தப் பெற்றிருக்கலாம்.   இங்கே வாழ்ந்த பழந்தமிழர் வையை ஆற்றின் ஊற்றுநீரை உண்டு வாழ்ந்திருக்கலாம் எனவும் கருதவேண்டியுள்ளது.
வெள்ளைநிறத்தில் படிகம் போன்றுள்ள ஒரு பொருளை நாக்கில் தடவிப் பார்த்துவிட்டு அது உப்பாக உள்ளது என்று கூறுவது அறிவியல் அல்ல.  அந்தப் பொருளை ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பிவைத்து அவர்கள் இதைச் சோதனை செய்து, “இது உப்பு” என்று சொல்ல வேண்டும்.  இதுவே அறிவியல் ஆய்வு முடிவாக அமையும்.   எனவே இந்த இடத்தில் கண்டறியப்பெற்றுள்ள பானைகளின் உள்ளே இருந்த பொருட்கள் என்னென்ன என்ற ஆய்வு முடிவுகளை வெளியிட வேண்டும்.  அதுவே அறிவியல் அடிப்படையிலான சரியான முடிவாக இருக்கும்.  இந்த அறிவியல் ஆய்வு முடிவுகளே இங்கே இருந்தது குடியிருப்பா? தொழிற்கூடமா? அல்லது மாட்டுப் பண்ணையா? என்பதை உறுதி செய்யும்.

மேலும் சான்றுகள் கிடைக்கும் பொழுது முடிவுகள் தெளிவாகக் கூடும். 
இந்த தொல்லியல்மேடு சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
இப்போதுதான் சுமார் 5 ஏக்கர்வரை தோண்டிக் கண்டறிந்துள்ளனர்.
இன்னும் அகரம், மணலூர், கொந்தகை யெல்லாம் தோண்டிக் கண்டறியப்பெற வேண்டும்.


அகரம்  “கோட்டைக் கருப்பணசாமி”  உள்ள இடமே பண்டைய கூடல் மாநகரின் கோட்டைக் கிழக்குவாயிலாக இருக்க வேண்டும் என்பது எனது யூகம்.  இந்தக் கோயிலுக்கு மேற்கே சற்றொப்ப 50 மீட்டர் மேற்கே உள்ள மேடான பகுதியானது பாண்டின் செழியனின் அரண்மனையாக இருந்திருக்கலாம்.

சங்கத் தமிழ் போற்றுவோம்,
சங்கம் வளர்த்த கூடல் மாநகர் போற்றுவோம்,
தொல்லியலாளர் போற்றுவோம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா. கி. காளைராசன்
புரட்டாசி 28 (15.10.2019) செவ்வாய் கிழமை.