Wednesday 19 January 2022

127 சோகாப்பர் நாகாக்க

 


கி. காளைராசன் to thiruppuvanam

13 Mar 2019, 18:32:44


“நாக்குல சனி” என்பார்கள்.  நாவைக் காக்காவிட்டால் சோகத்தைக் காப்பார்கள் என்கிறார் திருவள்ளுவர்.

அறிந்தோ அறியாமலோ, தெரிந்தோ தெரியாமலோ குற்றமுடைய சொற்களைச் சொல்லி அதனால் துன்பப்படுகின்றனர்.

“யாகாவா ராயினும் நாகாக்க; காவாக்காற் 

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு ”

என்கிறது திருக்குறள் (127).  

ஒருமுறை குறள்வடிவில் இருந்த ஒரு முனிவரை ஏளனம் செய்த காரணத்தினால் , மூன்று தேவியருள்  ஒருவரான மகாலெட்சுமி  நேர்ந்த இழுக்குப் பற்றியும், அந்த இழுக்கு எவ்வாறு நீங்கியது என்பது பற்றியும் திருப்பூவணப் புராணத்தில் ஒரு கதை உள்ளது.

வைகுண்டத்திலே, பொன்மண்டபத்தில் சிங்காசனத்திலே, இலக்குமியுடன் திருமால் வீற்றிருக்கிறார்.  அவர் திருமுன்பு வித்தியாதரர் பாடினார். அரம்பை முதலாயினோர் ஆடினார். தேவர் முதலாயினோர் துதித்தனர்.

அதன்பின்னர், இலெட்சுமிதேவி திருவடிப் பணிவிடை செய்யத் திருமால் நித்திரை புரிந்தார். அப் பொழுது,  ஒன்னேமுக்கால் அடி உயரமுடைய வாலகில்லி என்ற குள்ளமான முனிவர் திருமாலைப் பார்க்க வந்தார்.

வந்தரை வாயில்காப்போர் எதிர்சென்று வணங்கி உபசரித்து ஆசனத்தில் அமரச் செய்தனர்.   வைகுண்டத்தின் உள்ளே போய்ச் சேடியர்களை அழைத்து முனிவர்கள் வரவைத் திருமாலுக்கு விண்ணப்பம் செய்தனர்.

அதனைச் சேடியர்கள் இலெட்சுமிதேவியிடம் தெரிவித்தனர்.  மலைபோன்ற தோள்களை உடைய மாபெரும் திருமேனியை உடைய திருமாலையே அனுதினமும் கண்பவள் இலெட்சுமிதேவி. 

மிகவும் குள்ள உருவமாய் இருந்த வாலகில்லி முனிவரின் உருவத்தைப் பார்த்ததும் இலக்குமிதேவி பெரிதும் நகையாடினள்.  இதனால் முனிவர் பெரிதும் வருந்தித் திருமாலைச் சந்திக்காமலேயே திரும்பிச் சென்றுவிட்டார்.

திருமால் நித்திரைநீங்கி எழுந்து நிகழ்ந்தவைகளை உணர்ந்து கொண்டார்.  இலக்குமியைப் பார்த்து, நீ முனிவரை அவமரியாதை செய்துவிட்டாய் என்று கூறிச் சபித்து விலக்கினர். 

திருமாலின் இந்தச் சாபத்தை எப்படி நீங்குவது எனப் பலவாறும் ஆராய்ந்து பார்த்தார்.  முனிவரின் உருவம் குள்ளமாய் இருப்பதைக் கேலி செய்தது, அறிந்து செய்த பாவம் ஆகும்.

அறிந்து செய்த பாவத்தை நீக்கக்கூடிய திருத்தலம் திருப்பூவணம் ஆகும்.  எனவே இலக்குமிதேவி திருப்பூவண்ம் சேர்ந்து தவஞ் செய்தாள்.

இலக்குமியை விலக்கிய பின்பு திருமால் பயந்து விரைந்து சென்று வாலகில்லி முனிவரைச் சந்தித்து “இலக்குமி செய்த தவறை மறந்து கருணை புரிய வேண்டும்” என்று வேண்டினார்.

அதற்கு முனிவரும் மனமிரங்கி, திருமாலே, 12 ஆண்டுகள் திருமகள் திருப்பூவணத்திலே தவம் செய்து முடித்தவுடன் அவளது பாவம் நீங்கிவிடும். நீ சென்று அவளை அழைத்து வந்து முன்போல் வைகுண்டத்தில் வாழ்வாயாக என்று அருளினார்கள். 

உடனே திருமால் மகிழ்ந்து, "முனிவரே, நீங்கள் என்னைக் காண வைகுண்டம் வந்த காரண யாது?" என்று கேட்டார்.

அதற்கு அம் முனிவர், முனிவர்களாகிய நாங்கள் செய்யும் வேள்வியைத் திருமாலாகிய நீங்கள் காத்தல் வேண்டும் என்றனர். 

அங்ஙனமே முனிவர்கள் வேள்வியைக் காத்து அருளினார்.

12 வருடங்கள் நடைபெற்ற வேள்வியும் திருமாலின் திருவருளாலே சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

வேள்வி முடிந்த பின்பு திருமாலும் திருப்பூவணம் சேர்ந்து இலக்குமி தேவியுடன் சேர்ந்து சென்று சிவலிங்கத்தைப் பூசித்தார்.  இதனால் திருப்பூவணத்தில் சுயம்புலிங்கத்தின் நெற்றியில் திருநாமம் போன்ற அடையாளம் காணப்படும்.  இதனை திரிசூல அடையாளம் என்று அப்பர் பெருமான் பாடியுள்ளார்.  இந்த அடையாளத்தை இன்றும் சிவலிங்கத்தில் காணலாம்.

திருப்பூவணத்தில் உள்ள சுயம்புலிங்கத்தைப் பூசித்ததனால் இலக்குமி அறிந்து செய்த பாவமும் அதனால் உண்டான சாபமும் நீங்கின.  

திருமாலும் இலக்குமிதேவியும் வைகுண்டஞ் சார்ந்து வாழ்ந்தனர். 

திருப்பூவணநாதருக்கு மேற்குத் திசையிலே, இரண்டம்பு செல்லுந்தூரத்திலே, திருமால் தம் பெயராலே ஒரு சிவலிங்கப் பிரதிட்டை செய்தனர். ஒரு தீர்த்தமுண்டாக்கினர். சித்திரை மாதத்திலே, ஆதிவாரத்திலே, அத்தீர்த்தத்திலே மூழ்கி விஷ்ணுலிங்கத்தை வழிபட்டோர் பாவநீங்கிப் பதமுத்தி பெறுவர்.

குற்றமில்லாத சொற்களைச் சொல்லிடவும், குற்றமுடைய  நமது சொற்களால் நமக்கு உண்டாகும் தீமைகளில் இருந்து விடுபடவும் திருப்பூவணம் சென்று நாமும் வழிபடுவோம்.  நல்வாழ்வு வாழ்வோம்.

https://thiruppuvanam-kalairajan.blogspot.com/2012/03/blog-post_8258.html  

அன்பன்

கி. காளைராசன்

குறள் 134 ஓத்து என்றால் என்ன பொருள்

 கி. காளைராசன் to mintamil

17 Mar 2019, 21:36:14


“மறப்பினும் ஓத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்

பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்”

(அதிகாரம்:ஒழுக்கமுடைமை குறள் எண்:134)


ஓத்து என்றால் ஓதுதல் அல்லது படித்தல் என்று பொருள்.

நினைவாற்றல் குறைவாக இருந்து மறந்துவிட்டாலும் பரவாயில்லை ஓத்துக் (படித்துக்) கொள்ளலாம்.  ஆனால் பிறப்பு ஒழுக்கம் குறைந்தால் பிறப்பு கெட்டுவிடும் என்கிறார் திருவள்ளுவர்.


“மறப்பினும் படித்துக் கொள்ளலாகும், பார்ப்பான்

பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்”

ஞாபகமறதியாகித் தேர்வைச் சரியாக எழுதமுடியாவிட்டாலும் பரவாயில்லை. மீண்டும் படித்துக் கொள்ளலாம்.

ஆனால் ஒழுக்கம் தவறிப் “பிட்“ அடித்தால் debar ஆகி மாணவனின் மாண்பு கெட்டு விடும் என்பது போன்ற அறிவுரையை இந்தக் குறள் வழங்குகிறது.

அன்பன்

கி. காளைராசன்

திருக்குறள் ஓலைச்சுவடி இணையத் தமிழ்ப்பல்கலைக்கழக நூலகத்தில் வாசிக்கக் கிடைக்கிறது.

http://www.tamilvu.org/library/suvadi/s210/html/s2100052.htm

---------------------------------------------------------

On Sun, 17 Mar 2019 at 20:56, செல்வன் <hol...@gmail.com> wrote:

ஓதாமல் ஒரு நாளும் இருக்கவேண்டாம்-> தேவாரம், திருவாசகம் முதலான நூல்களை ஓதுபவர்களை ஓதுவார் என அழைக்கும் வழக்கம் உண்டு.


ஓதுதல் என்பது பொதுவாக ஆன்மிகநூல்களை தினமும் கடவுள் முன் பாராயணம் செய்வதையே குறிக்கும்.


படிப்பதை குறிக்க "கற்றல், கற்பது" எனும் வார்த்தைகள் உன்டு


ஓதாமல் ஒரு நாளும் இருக்கவேண்டாம் என்பது தினமும் இறைநூல்களை ஓதுக, வழிபாடு செய்க எனும் பொருளில் வரும்.


அன்பன்

கி. காளைராசன்

Tuesday 18 January 2022

ஊழி குறித்த திருவிளையாடல் புராணம்

ஞாலம் முடித்த ஊழி

(ஊழி குறித்த திருவிளையாடல் புராணம் 19 பாடல்களின் தொகுப்பு இது)


ஊழ் குறித்து ஓர் அதிகாரமே இருந்தாலும், ஊழி குறித்து ஒரேயொரு குறள் மட்டுமே உள்ளது. 

“ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு

ஆழி யெனப்படு வார் “

என்று ஊழியையும் ஆழியையும் தொடர்பு படுத்திக் குறள் கூறுகிறது.  திருக்குறள் போன்றே திருவிளையாடல் புராணமும் ஊழியையும் ஆழியையும் சேர்த்தே பாடுகிறது.


ஊழி குறித்த திருவிளையாடல் புராணம் 19 பாடல்களின் தொகுப்பு இது.

1) 202.

புரந்தர் ஆதி வானவர் பதம் போதுறை புத்தேள்

பரந்த வான் பதம் சக்கரப் படை உடைப் பகவன்

வரந்த வாதுவாழ் பதம் எலாம் நிலை கெட வரு நாள்

உரம் தவாது நின்று ஊழி தோறும் ஓங்கு அவ் ஓங்கல்.


2) 265.

அவ்வழிப் புறம்பு சூழ்ந்து கிடந்த ஆழி ஊழிப்

பௌவ நீர் என்ன ஓங்கப் பாணியால் அமைத்து வேணித்

தெய்வ நல் நீரைத் தூவிக் கலந்து மா தீர்த்தம்  ஆக்கிக்

கை வரை கபாலி நந்தி கணத்தினை நோக்கிக் கூறும்.


3) 625.

சலிக்கும் புரவித் தம் தேர் உடைத் தம் பிராட்டி

கலிக்கும் பல தூரியம் கைவரை தெய்வத் திண்தேர்

வலிக்கும் பரி மள்ளர் வழங்கு ஒலி வாங்கி நேரே

ஒலிக்கும் படி கிட்டினள் ஊழிதோர் ஓங்கு ஓங்கல்.


4) 630.

சூலம் கண் மழுப் படை தோமரம் நேமி பிண்டி

பாலங்கள் கழுக் கடை வாள் படை தண்டம் நாஞ்சில்

ஆலம் கவிழ் கின்ற அயில் படை வீசி ஊழிக்

காலம் கலிக்கும் கடல் போன்ற களமர் ஆர்ப்பு.


5) 709.

இடிக்கும் வான் உரு மேறுயர் நெடும் கொடி எகின  வெண் கொடி ஞாலம்

முடிக்கும் ஊழி நாள் உளர் கடும் கால் என மூச் செறி விடநாகம்

துடிக்க வாய் விடு முவண வண் கொடி முதல் சூழ்ந்து  சேவகம் செய்யும்

கொடிக் குழாத்தின் உள் கொடி அரசாய் விடைக் கொடி புடை பெயர்ந்து ஆட.


6) 1037.

பொரும் கடல் வேந்தனைக் கூவிப் பொன் என

இரும் கடல் உடுத்த பார் ஏழும் ஊழிநாள்

ஒருங்கு அடு வெள்ளம் ஒத்து உருத்துப் போய் வளைந்து

அரும் கடி மதுரையை அழித்தியால் என்றான்.


7) 1039.

கொதித்தலைக் கரங்கள் அண்ட கூடம் எங்கும் ஊடு போய்

அதிர்த்து அலைக்க ஊழி நாளில் ஆர்த்து அலைக்கும் நீத்தம் ஆய்

மதித் தலத்தை எட்டி முட்டி வரும் ஓர் அஞ்சனப் பொருப்பு

உதித்தல் ஒத்து மண்ணும் விண்ணும் உட்க வந்தது உத்தியே.


8) 1154.

ஐம் பெரும் பூத நிலை திரிந்து ஈர் ஏழ் அடுக்கிய உலகொடு மயன் மால்

உம்பர் வான் பதமும் உதித்தவாறு ஒடுங்க உருத்தது  ஓர் ஊழி வந்து எய்தச்

செம் பொருள் மறையும் ஒடுங்கிய வழி நாள் செம் சுடர் கடவுள் முன் மலரும்

வம்பு அவிழ் கமலம் என அரன் திருமுன் மலர்ந்ததால் அகிலமும் மாதோ.


9) 1301.

சூலமோடு அழல் ஏந்தும் சொக்கர் திரு விளையாட்டின்

சீலமோ நாம் இழைத்த தீ வினையின் திறம் இது வோ

ஆலமோ உலகம் எலாம் அழிய வரும் பேர் ஊழிக்

காலமோ எனக் கலங்கிக் கடி நகரம் பனிப்பு எய்த.


10) 1313.

ஊழிநாள் வெடிக்கும் அண்ட கடாகத்தின் ஒலிபோல் ஆர்த்துப்

பாழிவான் உருமு வீழப் பணாடவி மணிகள் சிந்தி

ஆழி நீர் ஞாலம் தாங்கும் அரா உடல் நெளிய திக்கில்

சூழி மால் யானை நின்ற நிலை கெடத் துணுக்கம் கொள்ள.


11) 1608.

அத்து அழன்று எரி குண்டம் நின்றும் அகன் பிலத்து எழுவான் என

பத்து துஞ்சிருள் வாயும் வாய் இருபாலும் வலிய பகிர் மதிக்கு

ஒத்தும் நஞ்சு இனம் ஒழுகு பற்களும் ஊழி ஆரல்  விழிகளும்

வைத்து அசைந்து ஒரு வெற்பு வந்து என வந்துளான் ஒரு தானவன்.


12) 1761.

மின் அலங்கள் வாகை வேல் விழுப் பெரும் குலத்தினில்

தென்னவன் தன் ஆணை நேமி திசை எலாம் உருட்டும் நாள்

முன்னை வைகல் ஊழி தோறும் ஒங்கும் மொய்வரைக்கணே

மன்னு தண் பராரை ஆல நிழல் மருங்கு மறை முதல்.


13) 1844.

விளை மத ஊற்று மாறி வெகுளியும் செருக்கும் மாறித்

துளை உடைக் கைமான் தூங்கு நடைய வாய்ச் சாம்பிச் சோர்ந்த

உளர் தரு ஊழிக் காலினோடும் ஆம் புரவி எய்த்துத்

தளர் நடை உடைய வாகித் தைவரும் தென்றல் போன்ற.


14) 2074.

வாழிய உலகின் வானோர் மனிதர் புள் விலங்கு மற்றும்

ஆழிய கரணம் எல்லாம் அசைவு அற அடங்க ஐயன்

ஏழ் இசை மயமே ஆகி இருந்தன உணர்ந்தோர் உள்ளம்

ஊழியில் ஒருவன் தாள் புக்கு ஒடுங்கிய தன்மை ஒத்த.


15) 2637.

அறைந்தவித் தெய்வத்து ஆன அனைத்தும் ஓர் ஊழிக் காலத்து

இறந்த நம் தோழன் கண்ட இலிங்கமாம் அதனால் இங்கே

உறைந்தனம் உறைதலாலே உத்தர ஆலவாய் ஆய்ச்

சிறந்திடத் தகுவது இன்று முதல் இந்தத் தெய்வத் தானம்.


16) 2977.

கங்கைப் புனல் வடிவாகிய கவ்வைத் திரை வைகைச்

சங்கச்சரி அறல் ஆம் மலர்த் தார் ஓதியை நோக்கா

வங்கக் கடல் பேர் ஊழியில் வருமாறு என எவரும்

இங்கு அற்புதம் அடையப் பெருக என்றான் அருள் குன்றான்.


17) 3082.

வழுதியால் விடுக்கப் பட்ட வாதவூர் முனிகள் தம்மைப்

பழுது இலாப் பாடல் கொள்வார் பதி பல பணிந்து போந்து

முழுது உணர் மறையோர் வேள்விப் புகை அண்ட முடி கீண்டு ஊழி

எழு வட வரை போல் தோன்றும் எழில் தில்லை மூதூர் சேர்ந்தார்.


18) 3123.

ஏழ் இசை மறை வல்லாளர் சிவபாத இதயர் என்னக்

காழியில் ஒருவர் உள்ளார் கார் அமண் கங்குல சீப்ப

ஆழியில் இரவி என்ன ஒரு மகவு அளித்தி என்னா

ஊழியில் ஒருவன் தாளை உள்கி நோற்று ஒழுகி நின்றார்.


19) 3325.

அடி முடி விலங்கும் புள்ளும் அளந்திடாது அண்டம் கீண்டு

நெடுகிய நெருப்பு நின்ற நிலை இது முள்வாய்க் கங்க

வடிவு எடுத்து இருவர் நோற்கும் மலை இது பல்வேறு ஊழி

இடை உற முன்னும் பின்னும் இருக்கும் இக் குன்றைக் காண்மின்.


‘ஊழிற் பெருவலி யாவுள‘ :)

அன்பன்

காசிஸ்ரீ நா.ரா.கி. காளைராசன்

சித்திரை 31 (14.05.2017) ஞாயிற்றுக் கிழமை.