Monday 28 January 2019

மதுரை நகரின் எல்லைகள்


மதுரைக்கு எல்லைக் கோடு.

சீறா நாகம், கறவா பசு, பிளிறா யானை, முட்டா காளை, ஓடா மான், வாடா மலை,காயா பாறை, பாடா குயில்

இவை அனைத்தும் மதுரை நகரின் அந்தக்காலத்து எட்டு திசைகளைக் குறிக்கும் எல்கை ஊர்கள்.

சீறா நாகம் - நாகமலை
கறவா பசு - பசுமலை
பிளிறா யானை - யானைமலை
முட்டா காளை - திருப்பாலை
ஓடா மான் - சிலைமான்
வாடா மலை - அழகர்மலை
காயா பாறை - வாடிப்பட்டி
பாடா குயில் - குயில்குடி

இது முகநூல் நண்பர் ஒருவர் அனுப்பியது.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்.

Friday 25 January 2019

இந்துஸ்தான் என்றால் பாண்டியநாடு என்று பொருள்


இந்துஸ்தான்
பாண்டியநாடு என்று பொருள்


இந்தியாவின் பண்டைய பெயர் இந்துஸ்தான் என்பதாகும்.  இந்தியாவிற்கு அருகே, பாக்கிஸ்தான் கிர்கிஸ்தான் கசகஸ்தான் அசர்பைஸ்தான் துர்க்மெனிஸ்தான் ஆப்கானிஸ்தான் உஷ்பெக்கிஸ்தான் பலுக்கிஸ்தான்  என்று பெயரில் நாடுகள் உள்ளன.  "ஸ்தானம்" என்றால் வடமொழியில் இடம் என்று பொருள். "ஸ்தான்" என்ற சொல் நாட்டைக் குறிக்கிறது.
இந்து என்றால் சந்திரன்,  இந்துஸ்தான் என்றால் சந்திரர் தேசம், பாண்டியர் நாடு என்று பொருள்.  சந்திர வம்சத்திரரான பாண்டியர்கள், வடக்கே இமயமலையை எல்லையாகவும், தெற்கே குமரியை எல்லையாகவும் கொண்டு பாரததேசம் முழுவதையும் பலகாலம் ஆண்டுள்ளனர்.   இதற்கு ஏராளமான சங்க இலக்கியச் சான்றுகள் உள்ளன.  
சேரர்கள் அக்னி வம்சத்தினர், சோழர்கள் சூரிய வம்சத்தினர், பாண்டியர்கள் சந்திர வம்சத்தினர் என்கிறது திருவிளையாடல் புராணம்.   பரஞ்சோதி முனிவர் தமிழில் மொழிபெயர்த்துப் பாடியுள்ள திருவிளையாடல் புராணத்தில் இந்து என்ற சொல் இடம் பெற்றுள்ள பல பாடல்கள் உள்ளன.  இந்து என்றால் சந்திரன் என்று நாவலர், பண்டித . மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் உரை யெழுதியுள்ளார்கள்.
இந்து என்றால் சந்திரன் என்பதையும், இந்துஸ்தான் என்றால் பண்டைத் தமிழப் பாண்டியர்களது நாடு என்பதை அறிவோம்.   பண்டைய பாரதத்தைத் தமிழர் அரசாண்டது போன்று இன்றைய இந்தியாவைத் தமிழர் ஆள வேண்டும்.

திருமங்கையாழ்வார் தமது பெரிய திருமொழியில் " இந்து வார்சடை யீசனைப் பயந்தநான் முகனைத்தன் னெழிலாரும் " என்பார். 
தேவார பதிகத்திலும் ' இந்து வார்சடை யெம்மி றையே ' என்பார் திருஞான சம்மந்தர்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்


திருவிளையாடல் புராணத்தில்
'இந்து' என்ற சொல் உள்ள பாடல்களின் தொகுப்பு

திருவிளையாடல் புராணம் பாடல் எண் 212

அந்த வேலையி லச்சிவ தீர்த்தத்தில்
வந்து மூழ்கியம் மண்டபத் தேறியே
சந்தி யாதி தவமுடித் தீறிலா
இந்து சேகரன் றாணினைந் தேத்தியே.
   
இந்தப் பாடலுக்கு,
நாவலர், பண்டிதர், . மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் உரை
அந்த வேலையில் - அப்பொழுதில்,
அச்சிவ தீர்த்தத்தில் வந்து மூழ்கி - வந்து அத் தீர்த்தத்தின்கண் நீராடி,
அம்மண்டபத்து ஏறியே - அந்தமண்டபத்திலேறி,
சந்தி ஆதி தவம் முடித்து - சந்தியா வந்தனம் முதலிய தவங்களை முடித்து, (சந்தியிற் செய்யப்படுவதனைச் சந்தி யென்றார், தவம் - செய்கடன்)
ஈறு இலா இந்து சேகரன் - அழிவில்லாத சந்திர சேகரனாகிய இறைவனுடைய,
தாள் நினைந்து ஏத்தி - திருவடிகளைத் தியானித்துத் துதித்து

285.       
பொரு அரிய தகர்த் திங்கள் துலாத் திங்கள் இவை உதிக்கும் போது மூழ்கின்
ஒரு பதினாயிர மடங்காம் சுறவு கவைத் தாள் அலவ உதிப்பின் மூழ்கின்
இருபதினாயிர மடங்காம் இந்து ரவியிடத்து ஒடுங்கு இந்து வாரம்
வருவது அறிந்து ஆடி மனு ஓதல் செயின் அனந்த மடங்கு உண்டாகும்.             
  
300.       
மனிதரில் உயர்ந்தோர் ஆதி மறையவர் தேவர் தம்மில்
பனிதரு திங்கள் வேணிப் பகவனே உயர்ந்தோள் வேட்டோர்க்கு
இனிது அருள் விரதம் தம்முள் அதிகம் ஆம் இந்து வாரம்
புனித மந்திரங்கள் தம்முள் போத ஐந்து எழுத்து மேலாம்.

542.       
மகவு இன்றிப் பல பகல்யான் வருந்தி அரும் தவம் புரிந்தேன் மைந்தன் பேறு
தக இந்த மகம் செய்தேன் அதுவும் ஒரு பெண் மகவைத் தந்தது அந்தோ
முக இந்து நிலவு ஒழுக வரு பெண்ணு முலை மூன்றாய் முகிழ்த்து மாற்றார்
நக வந்தது என்னேயோ என்று வகை இலனாகி நலியும் எல்லை.            

692.       
விரவு வானவர் நெருக்கு அற ஒதுக்குவான் வேத்திரப் படை ஓச்சி
அரவு வார் சடை நந்தி எம் பிரான் அவர் அணிமணி முடி தாக்கப்
பரவு தூளியில் புதைபடு கயிலை அம் பருப்பதம் பகல் காலும்
இரவி மண்டலத்து ஒடுங்கும் நாள் ஒடுங்கிய இந்து மண்டலம் மானும்.            

932.       
மாசு அறத் துறந்தோர் உள்ளம் ஆன வான் களங்கம் நீங்க
ஈசர் தம் கிழமை என்னும் இந்து ஆதிரை நாள் செய்த
பூசையின் பயன் தான் எய்த எரி பசும் பொன் கோள்வந்து
தேசு ஒடு கேந்திரத்தில் சிறந்த நல் ஓரை வாய்ப்ப.

946.       
இன்னணம் களிப்ப மூதூர் இந்து ஆதிரை நல் நாளில்
பொன்னவன் கேந்திரித்த புனித லக்கினத்தில் போந்த
தென்னவர் பெருமான் சேய்க்குச் சாதகச் செய்தி ஆதி
மன்னவர்க்கு இயன்ற வேத மரபினால் வயங்க ஆற்றி.    

1106.    
இந்து இரண்டு அனைய கூர்அம்பல் இருள் வரை நெஞ்சு போழ்ந்த
மைந்தனின் வலிய காளை வரைந்து எறி நேமி சென்னி
சிந்திடாது ஆகி அம் பொன் மணி முடி சிதறச் சோம
சுந்தர நாதன் பூசைத் தொழில் பயன் அளித்தது என்னா.

1321.    
வந்து நான் மாடம் ஆகி வளைந்து நால் திசையும் சூழ்ந்து
சந்து வாய் தெரியாது ஒன்றித் தாம் ஒரு குடிலாய் மாடப்
பந்தி கோபுரம் செய் குன்றம் கால்கள் போல் பரிப்பப் போர்த்த
இந்து வார் சடையோன் ஏய எழிலிமா நகரம் எங்கும்.       

1789.    
சந்து சூழ் மலயச் சிலம்பர் தவம் புரிந்த இயக்கி மார்க்
அந்த நால் இரு சித்தி தந்தது அறைந்தனன் அடி தொழா
வந்து மீன் வளவன் பொருட்டு வடாது வாயில் திறந்து அழைத்து
இந்து சேகரன் விடை இலச்சினை இட்டவாறு விளம்புவாம்.

1964.    
இய மானன் இந்து ரவி எரி வான் இலஞ்சல் இல எறிகால் எனும் பகுதி இரு நால்
மயமான சுந்தரனை மனம் வாய் மெய் அன்பின் இறை வழிபாடு அடைந்து வர குணனாய்ச்
சய வேளை வென்ற வடிவினன் ஈறு இல் வென்றி பெறு சத வேள்வி இந்திரனை நிகர்வோன்
இயன் மேனி கொண்ட ஒளியினில் ஏழ் பசும் புரவி இனன் தேசு வென்ற வர குணனே.

2130.    
வந்து மதுரைப் பெருமானை வணங்கிக் கொணர்ந்த நிதி எல்லாம்
இந்து மருமான் நகர் உள்ளார் யாவும் அறிய யாவர்க்கும்
முந்தை வேத முதல்வர்க்கும் புலவோர் தமக்கு முறை நல்கிச்
சந்த யாழின் இசைப்பாணர் தருமம் அனையான் வைகினான்.

2453.    
கலையினால் நிறைந்த இந்து காந்த மண்டபத்தும் செய்த
மலையினும் எழுது மாட மருங்கினும் நெருங்கு சோலைத்
தலையினும் கமல வாவித் தடத்தினும் தண் முத்து ஆரம்
முலையினும் அன்றிக் கோடை முடிவிடம் காணார் மைந்தர்.

2691.    
நந்தி நாதனும் இனையனாய் அம் கயல் நாட்டத்து
இந்து வாண் நுதலாளும் அங்கு அனையளாய் இருப்பத்
தந்தி நால் இரண்டு ஏந்திய தபனிய விமானத்து
உந்து நீர்ச் சடையார் மணம் உன்னினார் மன்னோ.

2801.    
சிந்துர நுதன் மால் யானைச் செல்வப் பரிக்கு வேறு
மந்துறை அகன்ற ஆக வகுக்க சூழ் தண்ணீர் ஊட்ட
நந்து உறை தடங்கள் வேறு தொடுக நீள் நகரம் எங்கும்
இந்து உறை மாடம் எல்லாம் அழகு செய்திடுக என்றார்.

படிக்கப்பெற்றது -
Ref: 2
Mukherjee, The Foreign Names of the Indian Subcontinent (1989), p. 46: "They used the name Hindustan for India Intra Gangem or taking the latter expression rather loosely for the Indian subcontinent proper. The term Hindustan, which in the "Naqsh-i-Rustam" inscription of Shapur I denoted India on the lower Indus, and which later gradually began to denote more or less the whole of the subcontinent, was used by some of the European authors concerned as a part of bigger India. Hindustan was of course a well-known name for the subcontinent used in India and outside in medieval times." 

நன்றி -   ‘தமிழ் இணையப் பல்கலைக்கழகம்’ பதிவு செய்துள்ள திருவிளையாடல் புராணப் பாடல்கள் பயன்படுத்தப் பெற்றுள்ளன.  tamilvu.org/library/libindex.htm பதிவுகளுக்கு நன்றி.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
தை 11 (25.01.2019) வெள்ளிக்கிழமை

Friday 18 January 2019

தமிழருடைய தமிழ் வருடப் பிறப்பு எது?

தமிழரது புதுவருடம்
வானியல் அடிப்படையில் 
சித்திரை முதல்நாளே  ஆகும்


உலகமெங்கும் எத்தனையோ மொழிகள் இருந்தாலும் சங்கம் வைத்துத் தமிழாய்ந்தது மதுரையில் மட்டுமே.  முதற்சங்கத்திற்குச் சிவபெருமானே தலைமை ஏற்றுத் தமிழாராய்ந்துள்ளார்.  சிவபெருமானை எந்நாட்டவர்க்கும் இறைவன் என்று சொன்னாலும், சிவபெருமான் திருவிளையாடல் செய்தருளியது மதுரையில் மட்டுமே ஆகும்.   

பரஞ்சோதிமுனிவர் மொழிபெயர்த்துப் பாடியுள்ள இந்தத் திருவிளையாடல் புராணத்தில் சித்திரை முதல்நாளே தமிழருடைய வருடப் பிறப்பு என்று தெளிவாகக் கூறப்பெற்றுள்ளது.  சித்திரை முதல் அடுத்த சித்திரை வரை 365 நாட்கள் என்றும் பாடப் பெற்றுள்ளது.

திருவிளையாடல் புராணம் பாடல் எண் 437. 
இருதுவில் சிறந்த வேனிலும் மதி ஆறு இரண்டில் சிறந்த வான் தகரும்
பொருவிறார் அகையில் சிறந்த சித்திரையும் திதியினில் சிறந்த பூரணையும்
மருவு சித்திரையில் சித்திரை தோறும் வந்து வந்து அருச்சித்தோர் வருடம் 
தெரியும் நாள் முந்நூற்று அறுபதும் ஐந்தும் செய்த அர்ச்சனைப் பயன் எய்தும்.



தைமுதல் நாள் பொங்கல் திருநாளைத்  தமிழரின் புத்தாண்டு என்று சொல்லி இரண்டு விழாக்களை ஒரே நாளில் மாற்றுகின்றனர். தமிழர்களது பொங்கல் திருநாளில் புத்தாண்டைக் கொண்டாடச் சொல்வது அன்னிய அரசியல் சதி என்பதைத் தமிழர் உணர வேண்டும்.  சமசுக்கிருதம் தமிழரால் உருவாக்கப்பட்ட மொழி.  தமிழரது வரலாறுகள் எல்லாம் தமிழரால் சமசுக்கிரதத்திலும் பாடப் பெற்றுள்ளன.  தமிழரது நூல்கள் பெரும்பகுதியும் கடல்கோளில் அழிந்து                 விட்டன.  சமசுக்கிருத்தில் நமது முன்னோர்கள் பதிவு செய்துள்ள நமது பண்டைய தமிழரின் பாரம்பரியங்களை மீட்பது நமது கடமை ஆகும்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

Saturday 5 January 2019

மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள்

மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள்
(திருவிளையாடல் புராணத்தில் உள்ளபடி)



பரஞ்சோதி முனிவர் தமிழில் மொழி பெயர்த்து எழுதிய திருவிளையாடற் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாண்டிய மன்னர் பெயர்களை இங்கே பட்டியலிட்டுள்ளேன்.

எத்தனையாவது திருவிளையாடற்புராணத்தில் பெயர்கள் இடம்பெற்றுள்ளன எளிதில் அறிந்து கொள்ள வசதியாகத் திருவிளையாடல் புராணப் படலத்தின் வரிசை எண்ணும் கொடுத்துள்ளேன்.


பிரளயத்தில் தோன்றிய கடல்கோள்களும் 
(ஆழிப்பேரலை என்ற சுனாமியும் )
மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களும்

(படலம் 3) குலசேகர பாண்டியன் - மதுரை நகரை மீண்டும் புனர்நிர்மாணம் செய்த பாண்டிய மன்னன்.

(படலம் 4) மலையத்துவசன் - பாண்டி மன்னன் 
காஞ்சனமாலை - மலையத்துவசனின் மனைவி, அருள்மிகு சோமசுந்தரேசுவரரின் மாமியார், இவள் நீராடும்பொருட்டு சிவபெருமான் அழைத்ததனால் ஏழு கடல்களும் மதுரைக்கு வந்தன.

தடாதகை - மலையத்துவனின் மகள், அருள்மிகு சோமசுந்தரேசுவரரின் மனைவியான அன்னை மீனாட்சி.
சுந்தர பாண்டியன் - அருள்மிகு சோமசுந்தரேசுவரர்

(படலம் 11) உக்கிர குமாரன் - சுந்தர பாண்டியனின் (சோமசுந்தரேசுவரரின்) மகன், மதுரைக்கு வந்தஆழிப்பேரலை(சுனாமி)யை வேல் எறிந்து தடுத்து நிறுத்திய மன்னன்.
காந்திமதி -  உக்கிர குமாரன் என்ற சுந்தர பாண்டியனின் மனைவி

(படலம் 17) வீரபாண்டியன் - உக்கிர பாண்டியனின் மகன்
அபிடேக பாண்டியன். அபிடேகபாண்டியனது ஆட்சிக்காலத்தில் பேரூழி ஏற்பட்டு கடல் பொங்கி(சுனாமி) மதுரையை அழிக்க வந்ததது. அதனை வற்றச் செய்த மன்னன்.

விக்கிரம பாண்டியன் - அபிடேக பாண்டியனின் மகன்

(படலம் 24) இராச சேகரன் - விக்கிரம பாண்டியனின் மகன்

(படலம் 25) குலோத்துங்கன் - இராசசேகர பாண்டியனின் மகன்

(படலம் 28)அனந்தகுணன் - குலோத்துங்கனின் மகன்.
பசுமலை, இடபமலைகள் இவன் காலத்தில் உண்டாகின. இராமபிரான் இம்மலைகளில் தங்கி அகத்தியரிடம் உபதேசம் பெற்றார்.

(படலம் 30) குலபூடணன் -  அனந்தகுணனின் மகன்

(படலம் 34) இராசேந்திரன் - குலபூடணனின் மகன்

(படலம் 37) இராசேசன் - இராசேந்திரனின் மகன்
இராசகம்பீரன் - இராசேசனின் மகன்
பாண்டி வமிச தீபன் - இராசகம்பீரனின் மகன்
புரந்தரசித்து - பாண்டி வமிச தீபனின் மகன்
பாண்டிவமிச பதாகன் - புரந்தரசித்துவின் மகன்
சுந்தரேசபாத சேகரன் - பாண்டி வமிச பாதகனின் மகன்

(படலம் 40) வரகுணன் - சுந்தரேசபாத சேகரனின் மகன்

(படலம் 44) இராசராச பாண்டியன் - வரகுணனின் மகன்/பன்றிமலை இனது ஆட்சிக்காலத்தில் உருவானது

(படலம் 49) சுகுணன் - இராச இராச பாண்டியனின் மகன்.
சுகுணனுக்குப் பிறகு சித்திரரதன் முதல் அதுலகீர்த்திவரை 22 பாண்டிய மன்னர்கள் வழி வழி வந்து ஆட்சி செய்தனர்.  (அதுல = ஒப்பிலாத,  அதுலம் = இலட்சங் கோடாகோடி கோடாகோடி)

1) சித்திரரதன்
2) சித்திரபூடணன்
3) சித்திரத்துவசன்
4) சித்திரவருமன்
5) சித்திரசேனன்
6) சித்திரவிக்கிரமன்
7) இராசமார்த்தாண்டன்
8) இராச சூடாமணி
9) இராச சார்த்தூலன்
10) துவிசராச குலோத்தமன்
11) ஆயோதனப் பிரவீணன்
12) இராச குஞ்சரன்
13) பரவிராச பயங்கரன்
14) உக்கிரசேனன்
15) சத்ருஞ்சயன் வீமரதன்
16) வீம பராக்கிரமன்
17) பிரதாப மார்த்தாண்டன்
18) விக்கிரம கஞ்சனன்
19) சமர கோலாகலன்
(20, 21.....??)
22) அதுல கீர்த்தி


கீர்த்திவீடணன் - அதுல கீர்த்தியின் மகன்.
இவனது ஆட்சிக் காலத்தில் பிரளயம்  ஏற்பட்டு ஏழுகடல்களும் பொங்கி எழுந்து (ஆழிப்பேரலை,சுனாமி) உலகை அழித்தன.
பிரளயத்திற்கு (ஆழிப்பேரலை,,சுனாமி)க்குப் பின்னர்.

சந்திர குலத்தில் பாண்டியர் தோன்றினர்.
சூரியன் மற்றம் அக்னி குலத்தில் மற்ற இரு தமிழ் மன்னர் (சோழ சேரர்) தோன்றினர்.

வங்கியசேகர பாண்டியன் - சந்திரகுலத்தில் தோன்றி பாண்டிய மன்னன்.
இன்றைய மதுரை நகரை பண்டைப் பெருமை விளங்கம் வகையில் உருவாக்கியவன்

(படலம் 51) வங்கிய சூடாமணி (சண்பக பாண்டியன்) - வங்கிய சேகரனின் மகன்.

(படலம் 58) சண்பக பாண்டியனுக்குப் பின் குலேச பாண்டியன் வரை  15 பாண்டிய மன்னர்கள் வழி வழி வந்து ஆட்சி செய்தனர்.
1) பிரதாப சூரியன்
2) வங்கிசத் துவசன்
3) இரிபுமருத்தனன்
4) சேரவங்கி சாந்தகன்
5) பாண்டி வங்கி சேசன்
6) வங்கிச்சிரோன்மணி
7) பாண்டீச்சுரன்
8) குலத்துவசன்
9) வங்கிச வீபூடணன்
10)சோம சூடாமணி
11) குல சூடாமணி
12) இராச சூடாமணி
13) பூப சூடாமணி
14)....?
15) குலேசன்

(படலம் 58) அரிமர்த்தன பாண்டியன் - மாணிக்கவாசகரை அமைச்சராகக் கொண்ட மன்னன்.

(படலம் 62) அரிமர்த்தன பாண்டியனுக்குப் பின் பல மன்னர்கள் பாண்டிய நாட்டை ஆண்டனர்.

கூன்பாண்டியன் (சுந்தர பாண்டியன்) - சோழன் மகள் மங்கையர்க்கரசியாரை மணந்தவன்.
திருஞானசம்பந்தரால் சைவத்திற்குத் திரும்பியவர்.

மல்குக வேத வேள்வி வழங்குக சுரந்து வானம்
பல்குக வளங்கள் எங்கம் பரவுக அறங்கள் இன்பம்
நல்குக உயிர்கட் கெல்லாம் நான்மறைச் சைவம் ஒங்கி
புல்குக உலக மெல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

இதையும் படிக்கவும் - 

Friday 4 January 2019

பிரிட்டிஷ் அதிகாரிக்கு காட்சி அளித்த மதுரை மீனாட்சி அம்மன்.. உண்மை சம்பவம்

தொடரும் திருவிளையாடல்கள்

தொடரும் திருவிளையாடல்கள்



கடந்த மாசிமாதம் 25ஆம் நாள் (9.மார்ச்.2014) ஞாயிற்றுக்கிழமை மாலை தேவகோட்டை தியாகிகள் சாலையில் உள்ள ‘இராம ஏகம்மை‘ திருமண மண்டபத்தில் ‘ஞானதான சபை‘யின் பத்தாம் ஆண்டுவிழா நடைபெற்றது.

விழாவிற்குச் சபையின் நிறுவுனர் தலைவர் திரு.சுப.செட்டியப்பன் அவர்கள் (80)ஆசியுரை வழங்கினார்.  கயிலைமணி பேராசிரியர்இராம.திண்ணப்பன் (திருப்பூவணம் ஸ்ரீ பொன்னனையாள் அன்னதான அறக்கட்டளையின் தலைவர்) அவர்கள் தலைமை ஏற்றார்.  

1) தேவகோட்டை இலக்கியமேகம் ந.சீனிவாசன் அவர்களது  “பெருங்கருணைப்பேராறு“ என்ற தலைப்பிலான சிறப்புரையாற்றினார்.  கண்ணப்பநாயனாருக்கு மட்டுமே சிவலிங்கத்தில் கண் தெரிந்தது, மதுரையை ஆண்ட ராஜசேகரபாண்டியனுக்கு மட்டுமே நடராசனின் கால்வலிக்குமே என்ற உணர்வு தோன்றியது முதலான சில கருணைப் பேறுகளை எடுத்து விரித்துரைத்தார்.  அளவு பெரியதாக இருப்பதால் இவரது உரையின் ஒலிப்பதிவை இணைக்க இயலவில்லை.

2) சொல்லோவியர் பொற்கிழிக்கவிஞர் திரு.சொ.சொ.மீ.சுந்தரம் அவர்களது “திருவாகத் தேன்“ என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.  ஆங்கிலேய ஆட்சியருக்கு அன்னைமீனாட்சி அருளியதை வரலாற்றைக் கூறித் ”தேனில் எப்பக்கம் சுவை இருக்கிறது என்று கேட்டால் எப்படி?” என்று கேட்டுச் சிறப்பானதொரு உரையை யாற்றினார்.  இவரது உரை மீண்டும் மீண்டும் கேட்கும்படியாக அமைந்துள்ளது.   அளவு மிகப் பெரியதாக இருப்பதால் இவரது உரையையும் இணைக்க இயலவில்லை.

3) சிறப்பு விருந்தினராக மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தக்கார் உயர்திரு.கருமுத்து தி.கண்ணன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.  மதுரையம் பதியிலே இன்றும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருவிளையாடல்கள் தொடர்ந்து நாளும் நடைபெற்றுக் கொண்டேதான் உள்ளன என்றார்.  கோயிலில் சிதலமடைந்த கற்தூண்களை அகற்றிப் புதியன பதித்த பணியிலும், குடமுழுக்குநாள் குறித்துச் சர்ச்சைகள் உண்டானபோதும், குடமுழுக்கு நாளன்று தனக்கு இறைவன் இறைவியர் வழங்கிய கருணையையும் எடுத்துக் கூறினார்.   இவரது உரையின் ஒலிப்பதிவும் மிகப் பெரியதாக இருப்பதால் இணைக்க இயலவில்லை.  

இம்மூவரது உரைகளும் தேவாமிர்தம் போன்றிருந்தன என்றால் அது மிகையல்ல.  
இப்போதைக்கு உயர்திரு.கருமுத்து தி.கண்ணன் அவர்கள் வழங்கிய இரண்டு நிகழ்ச்சிகளை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

அன்னையின் அருட்காட்சி
மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில் கும்பஅபிஷேகத்திற்கு நாள் குறித்துப் பணிகள் எல்லாம் நடைபெற்று முடியும் தருவாய்க்கு வந்து விட்டன.   ஆனால், அந்தக் குறிப்பிட்ட நாளில் சில காரணகாரியங்களால் குடமுழுக்கு நடத்தக் கூடாது என்று சில ஸ்தானிகங்கள் (பரம்பரை பரம்பரையாகக் கோயிலில் பூசைகள் செய்வோர்) தடுத்தனர்.  வேறுசில ஸ்தானிகங்கள் அந்தக் குறிப்பிட்ட நாளில் உள்ள நல்லனவற்றை எடுத்துக்கூறி நடத்தலாம் என்றனர்.  

ஒட்டுமொத்தமாக ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்காக ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.  ஆனால், கூட்டம் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.  மாறாக இரண்டு கருத்துக்களைக் கொண்டவர்களும் குழுவாகக் கூடிக் கொண்டு ஒருவருக்கொருவர் எதிர்த்துக் கொண்டனர்.  அவர்களுக்குள் இருந்த மாறுபட்ட கருத்துகளின் அடிப்படையில் ஒரு வலுவான சண்டை உருவாகிக் கொண்டிருந்து. 

ஒருநாள் ஒரு கூட்டத்தைக் கூட்டி எப்படியாகிலும் இரண்டில் ஒன்றை முடிவெடுத்தே தீர்வது என்று தீர்மானித்துக் கொண்டேன்.   ஆனால் நான் எதிர்பார்த்தபடி அன்றைய தினமும் கூட்டத்தினர் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து கொண்டு தங்களுக்குள் சண்டையிடத் துவங்கிவிட்டனர்.  
நான் அமைதியாக உட்கார்ந்திருந்தேன்.  

என் மனதுக்குள் ஏதோ ஒன்று ”நீ பேசு, நீ பேசு“ என்று சொல்லிக் கொண்டே இருந்தது!  நாம் எழுந்து பேசினால், பிரச்சனை தீர்வதற்கான வழியே இல்லை. எந்தப் பக்கம் பேசினாலும், மாற்றுக் கருத்துடையோர் எனது கருத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் பிரச்சனை மேலும் பெரிதாகும் என்று எனது அறிவு சொன்னது....

ஆனாலும், 
ஏதோ ஒன்று ” நீ பேசு, நீ பேசு“ என்று சொல்லிக் கொண்டே இருந்தது!
என்னால் எனது அந்த உள்ளுணர்வை அடக்க முடிய வில்லை.  
ஆனால் என்ன பேசுவது? 
என் மனதில் குழப்பமே மேலோங்கி நின்றது. 
இருப்பினும் இன்று இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டே ஆகவேண்டும் என்ற நிலையிலும் எழுந்து நின்றேன்.  
சிறிது நேரத்தில் எல்லோரும் அமைதியாகினர்.  
நான் அவர்களிடம், “இந்தத் திருவிழா அன்னை மீனாட்சியுடன் தொடர்புடையது, எனவே நாம் அனைவரும் அன்னையிடம் சென்று கேட்போம்“ என்று கூறி அழைத்துச் சென்றேன்.

ஆமாம், சரி.
இல்லை. வேண்டாம்.
என இரண்டு சீட்டு எழுதினேன்.   
இரண்டு சீட்டுக்களையும் அன்னை மீனாட்சியின் பாதங்களில் வைத்து எடுத்து வரச் சொன்னேன்.  அவ்வாறே அன்னை மீனாட்சியின் பாதங்களில் வைத்து எடுத்து வந்து ஒரு தாம்பாளத்தில் வைத்தனர்.
அன்னையின் சந்நிதிவாயிலில் பெரும் பக்தர்கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது.   மெய்யன்பர்கள் வரிசையாக வந்து வழிபட்டுச் சென்று கொண்டிருந்தனர்.  
இரண்டு சீட்டுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கு ஓர் ஆளைத் தேடினேன்.  

அப்போது ஒரு சிறுமி வரிசையில் வந்தாள்.  
அந்தச் சிறுமியை அழைத்து, ஒரு சீட்டை எடுத்துக் கொடுக்குமாறு கேட்டேன்.  
அவளும் எடுத்துக் கொடுத்தாள்.   
பிரித்துப் பார்த்தோம். 
ஆமாம், சரி என்று இருந்தது.  

என்னுடைய மனதிற்குள் மட்டட்ற மகிழ்ச்சி.  
அம்மா உனது பெயர் என்ன? என்று கேட்டேன்.  
“என் பெயர் மீனாட்சி“ என்றாள் அந்தச் சிறுமி.
அங்கிருந்த அனைவரும் அப்படியே உறைந்து போனோம்.

என்னையையும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு, அன்னை மீனாட்சி அருட்காட்சி வழங்கியதை எண்ணியெண்ணி என்னுள்ளம் என்றும் பூரிப்படைந்தேன்.

இப்போது யாரும் யாருடனும் குடமுழுக்குநாள் குறித்துத் தர்க்கம் செய்து கொள்ளவில்லை.  
குறிப்பிட்ட தேதியன்று குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது.

குடமுழுக்குநாளான்று மீண்டும் ஒரு அற்புதம் நடைபெற்றது.
அந்த அற்புதத்தை என்னவென்று எடுத்துரைப்பது.,.,

திரு.கருமுத்து தி.கண்ணன் அவர்களின் அனுபவங்கள் தொடரும்,,,,

64 திருவிளையாடல்களுக்குப் பின்னர் இன்றும் தொடர்ந்து திருவிளையாடல்கள் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளன.
அவற்றில் திருமலைநாயக்கர் மடியில் வந்து அமர்ந்து மீனாட்சி பிள்ளைத்தமிழ் கேட்டது.
பீட்டர் பாண்டியன் என்ற வெள்ளைக்கார அதிகாரிக்கு அருள்வழங்கியது, எனச் சில பதிவாகி உள்ளன.  https://youtu.be/WVoFI9OsGuk

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்