Thursday 21 July 2022

திருவிளையால் புராணத்தில் கண்ணகியின்கதை இல்லையே?

திருவிளையால் புராணத்தில் 

கண்ணகியின்கதை இல்லையே?

என்னிடம் கேட்டால்(ர்)!

சிவனடியார் ஒருவரைச் சந்தித்தேன்.  சிவ சிந்தனைகள் நிறைந்திருந்தன.  தேவார திருவாசகப் பாடல்களை யெல்லாம் தெளிவான உச்சரிப்பில் பொருள் விளங்கும்படி அருமையாகப் பாடினார்.  மனதிற்கு நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.  தொடர்ந்து, பேச்சின் நடுவே திருவிளையாடற் புராணம் பற்றிக் கூறினேன்.   அவ்வளதுதான் அவரது முகம் சிறிது வாட்டம் கண்டது.  திருமுறைகளே உண்மை, புராணங்கள் எல்லாம் பொய்-ஆரிய பார்ப்பனர்களின் கட்டுக்கதை என்றார்.   இது கேட்ட எனது முகமும் சிறிது வாட்டம் கண்டது.
    திருவிளையாடற் புராணத்தில் என்ன பிழை கண்டுள்ளீர்கள் ? என்று கேட்டேன்.  

        திருமுறைகள் 7ஆம் நூற்றாண்டு, திருவிளையாடற் புராணம் 13ஆம் நூற்றாண்டு என்றார்.   “கண்ணகி தமிழ்ப் பெண்” என்ற காரணத்தினால் திருவிளையாடல் புராணத்தில் கண்ணகியைப் பார்ப்பனர்கள் எழுதாமல் விட்டுவிட்டனர் என்றார்.

எனக்குத் தெரிந்த பதிலைக் கூறலாமா? என்று கேட்டுவிட்டுச் சொன்னேன்.

1) எந்தவொரு தமிழ் நூலும் எந்தக்காலத்தில் எழுதப்பட்டிருந்தால் என்ன? 
நேற்று எழுதினாலும் சரி, 2000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதியது என்றாலும் சரி,  அதில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் தானே நமக்கு முக்கியம்.  அந்த நூலின் காலக் கணிப்பினால் நமக்கு (மனிதர்களுக்கு) ஆகப்போகவது ஏதுமில்லையே.  இன்னம் ஒருபடி மேலே சொல்வது என்றால்,  அந்த நூலின் ஆசிரியர் யார்? என்பது கூடத் தேவையற்றதே ஆகும்.  இவ்வாறான சிந்தனையால்தான் தமிழ்ப்புலவர் பலரும் தம் பெயரையோ காலத்தையோ எழுதிடவில்லை போலும் என்றேன்.  மேலும்

2) திருவிளையாடற் புராணத்தைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதிய பரஞ்சோதி முனிவரின் காலம் வேண்டுமானால் 13ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.   ஆனால் திருவிளையாடற் புராணத்திற்கான மூலநூல் எது?

18 புராணங்களில் ஒன்றான “காந்தத் தீச சங்கிதை” என்ற புராணம் ஆகும்.  இந்தப் புராணம் எழுதப்பெற்ற காலம் மிகவும் புராதனமானது. இன்ன காலம் என்று கணித்தல் அரிதாக உள்ளது.

எனவே திருவிளையாடற் புராணம் பிற்காலத்தில் எழுதப்பெற்றது என்பது தவறாகும்.  இது எப்படி யெனில், திருக்குறள் அச்சடிக்கப்பட்ட காலத்தைத் திருக்குறள் தோன்றிய காலம் என்பது போல் ஆகிவிடும்.

3) திருவிளையாடற் புராணத்தில் கதையாகச் சொல்லப்பட்டுள்ளன அனைத்தும் மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவரரின் திருவிளையாடல் ஆகும்.   அவரை வணங்கிய அடியார்களுக்கு அவர் அருள்புரிந்த நிகழ்வுகளின் தொகுப்பு ஆகும்.
மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவரைக் கண்ணகியோ கோவலனோ வழிபாட்டதாக சொல்லப்படவில்லை.   மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவரரை வழிபட்டுப் பலன் அடைந்தவர்களின் பட்டியலில், வழிபடாதவரை எங்ஙனம் சேர்க்க இயலும்?

இந்தக் காரணத்தினால்தான் கண்ணகி கோவலன் கதை திருவிளையாடற் புராணத்தில் இடம் பெறாமல் ஆகியிருக்கலாம் என்றேன்..

திருவிளையாடற் புராணம் முழுக்கமுழுக்க மதுரையின் அண்ணலான அருள்மிகு சோமசுந்தரரேசுவரரின் திருவிளையாடல்களையும், மற்றும் மதுரை வாழ் தமிழ் மக்களின் சிறப்புகளையுமே கூறுகிறது.    இப்படியிருக்கக் கண்ணகி ஓர் தமிழ்ப் பெண் என்ற காரணத்தினால் திருவிளையாடற் புராணத்தில் இடம்பெறவில்லை என்ற கற்பனைக் கருத்தை எப்படி ஏற்க இயலும் என்றேன்.

நீண்ட நேரம் மௌனம் காத்தார் எனது நண்பர்.  எனது இந்தக் கருத்துகளை  அவர் ஒத்துக் கொண்டதாகவும் தெரியவில்லை, மறுத்ததாகவும் தெரியவில்லை.

எனது கருத்துகள் சரியானவையா?  உங்களுக்கு ஏற்புடையதாக உள்ளனவா?

அன்பன்

காசிசீர், முனைவர், நா. ரா. கி. காளைராசன்

ஆடி 5 (21.07.2022) வியாழக்கிழமை. 

--------------------------------------------------------
கண்ணகி எரித்த கூடலும் - இன்றைய மதுரை மாநகரமும்

கண்ணகி எரித்த கூடல் மதுரை மாநகர் அழிந்துபட்டது.   இன்றிருக்கும் மதுரை மாநகரமானது குலசேகரபாண்டியனால் புதிதாகத் தோற்றுவிக்கப் பெற்றதாகும்..  கூடலில் வாழ்ந்த மக்கள் எல்லாம் குடிபெயர்ந்து இன்றைய மதுரைக்கு வந்து விட்டனர்.  எனவே கூடல் என்ற நகரம் வைவிடப்பட்ட நகரமானது,  கடல்கோளால் புதையுண்டு போனது.  அந்த க் கூடல் மாநகரத்தைத்தான் இன்றைய நாளில் தொல்லியலாளர்கள் கீழடி அருகே தோண்டிக் கண்டறிந்துள்ளனர் என்று கருதி அதற்கான சான்றுகளை யெல்லாம் தொகுத்து எழுதியுள்ளேன்.

நேரம் கிடைக்கும்போது அன்பர்கள் கீழடி தொடர்பான அந்தக் கட்டுரைகளையும் கண்ணுற்றுக் கருத்துக் கூறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

--------------------------------------------------------

Monday 11 July 2022

ஆடி மாதம் அட்டமி திதியில்

ஆடிமாதம் 5ஆம் நாள், (21.07.2022), அசுபதி நட்சத்திரம், அட்டமி திதி, வியாழக்கிழமை 

ஆடி மாதம், தேய்பிறை,  கார்த்திகை நட்சத்திரம்,  அட்டமி திதி,  வெள்ளிக்கிழமை சேர்ந்த நாளில் மதுரை மாநகரம் தீக்கிரையாகும் என்று ஓர் சாபம் மதுரைக்கு இருந்துள்ளது.  அன்றைய தினத்தில் கண்ணகி மதுரையை எரித்தாள்.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு. ( குறள் எண் : 204 )

கோவலன் முற்பிறவியில் செய்த பாவம் மறுபிறவியில் அவன் கொலைக்கலன் பட்டான் என்கிறது சிலப்பதிகாரம்.

கட்டுரை காதை

ஆடித் திங்கள் பேரிருட் பக்கத்து
அழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று
வெள்ளி வாரத்து ஒள்ளெரி யுண்ண 135 
உரைசால் மதுரையோடு அரைசுகே டுறுமெனும்
உரையு முண்டே நிரைதொடி யோயே என்று பாண்டிய நெடுஞ் செழியன் முறை பிறண்டு நீதி செய்ததற்கான காரணத்தை மதுராபதித் தெய்வம் கண்ணகியிடம் கூறுகிறது. 

Sunday 10 July 2022

சிலப்பதிகாரத்தில் மதுரை நீலி

சிலப்பதிகாரத்தில் மதுரை நீலி

 

கம்பராமாயணத்தில்  54 பாடல்வரிகளில் நீலன் 

சிலப்பதிகாரத்தில் 2 இடங்களில் நீலன், 3 இடங்களில் நீலி

நீலன் (2)

நீலன் முதலிய கஞ்சுக மாக்கள் - வஞ்சி:28/80

நீள்_மொழி எல்லாம் நீலன் கூற - வஞ்சி:28/109

 

நீலி (3)

சூலி நீலி மால்-அவற்கு இளம் கிளை - மது:12/68

சங்கரி அந்தரி நீலி சடாமுடி - மது:12/154

நிலைக்களம் காணாள் நீலி என்போள் - மது:23/159

------------------------------------------------------------

 நீலன் முதலிய கஞ்சுக மாக்கள்        80

மாடல மறையோன்-தன்னொடும் தோன்றி

வாயிலாளரின் மன்னவற்கு இசைத்த பின்

கோயில் மாக்களின் கொற்றவன் தொழுது

தும்பை வெம்போர் சூழ் கழல் வேந்தே

செம்பியன் மூதூர் சென்று புக்கு ஆங்கு        85

வச்சிரம் அவந்தி மகதமொடு குழீஇய

சித்திர மண்டபத்து இருக்க வேந்தன்

அமர் அகத்து உடைந்த ஆரிய மன்னரொடு

தமரின் சென்று தகை அடி வணங்க

 

சயந்தன் வடிவின் தலைக்கோல் ஆங்கு        100

கயம் தலை யானையின் கவிகையின் காட்டி

இமைய சிமயத்து இரும் குயிலாலுவத்து

உமை_ஒரு_பாகத்து_ஒருவனை வணங்கி

அமர்க்களம் அரசனது ஆக துறந்து

தவ பெரும் கோலம் கொண்டோர்-தம் மேல்        105

கொதி அழல் சீற்றம் கொண்டோன் கொற்றம்

புதுவது என்றனன் போர் வேல் செழியன் என்று

ஏனை மன்னர் இருவரும் கூறிய

நீள்_மொழி எல்லாம் நீலன் கூற

------------------------------------------------------------

 

வளை உடை கையில் சூலம் ஏந்தி        60

கரியின் உரிவை போர்த்து அணங்கு ஆகிய

அரியின் உரிவை மேகலை_ஆட்டி

சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி

வலம் படு கொற்றத்து வாய் வாள் கொற்றவை

இரண்டு வேறு உருவின் திரண்ட தோள் அவுணன்        65

தலை மிசை நின்ற தையல் பலர் தொழும்

அமரி குமரி கவுரி சமரி

சூலி நீலி மால்-அவற்கு இளம் கிளை

ஐயை செய்யவள் வெய்ய வாள் தடக்கை

 

அடு புலி அனையவர் குமரி நின் அடி தொடு        150

படு கடன் இது உகு பலி முக மடையே

வம்பலர் பல்கி வழியும் வளம் பட

அம்பு உடை வல் வில் எயின் கடன் உண்குவாய்

சங்கரி அந்தரி நீலி சடாமுடி

செம் கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய்        155

துண் என் துடியொடு துஞ்சு ஊர் எறிதரு

கண் இல் எயினர் இடு கடன் உண்குவாய்

விண்ணோர் அமுது உண்டும் சாவ ஒருவரும்

உண்ணாத நஞ்சு உண்டு இருந்து அருள் செய்குவாய்

 

அங்காடி பட்டு அரும்_கலன் பகரும்        150

சங்கமன் என்னும் வாணிகன்-தன்னை

முந்தை பிறப்பில் பைம்_தொடி கணவன்

வெம் திறல் வேந்தற்கு கோ_தொழில் செய்வோன்

பரதன் என்னும் பெயரன் கோவலன்

விரதம் நீங்கிய வெறுப்பினன் ஆதலின்        155

ஒற்றன் இவன் என பற்றினன் கொண்டு

வெற்றி வேல் மன்னற்கு காட்டி கொல்வுழி

கொலை_கள பட்ட சங்கமன் மனைவி

நிலைக்களம் காணாள் நீலி என்போள்

 

பாடல் தொகுப்பு உதவி - http://tamilconcordance.in/