Sunday 6 October 2019

திருவிளையாடல் புராணத்தில் தமிழும் தமிழ்நாடும்


திருவிளையாடற் புராணத்தில்  
'தமிழ், தமிழ்நாடு' என்ற சொற்கள்
இடம் பெற்றுள்ள பாடல்களின் தொகுப்பு


தமிழ் அமிழ்தம் போன்றது.
நாம் நம் குழந்தைகளுக்குத் தமிழை ஊட்டி வளர்க்க வேண்டும்.
தமிழுண்ட குழந்தைகள் உடல்நலமுடனும் மனவளமுடனும் வாழ்வர்.

சங்கம் வளர்த்த தமிழ் மதுரைக்கு ஆலவாய் என்றும் கூடல் என்றும் பெயர்கள் உண்டு.  கீழடி அருகே தொன்மையான நகர நாகரிகத்தைத் தொல்லியலாளர்கள் தோண்டிக் கண்டறிந்துள்ளனர்.  இந்த நகரத்திற்குக் கூடல் மாநகரம் என்று பெயர்.   தென்மதுரை என்ற கபாடபுரத்தில் முதற் தமிழ்ச்சங்கமும்,  ஆலவாய் என்ற மதுரையில் இரண்டாம் தமிழ்ச்சங்கமும், கூடல் என்ற இந்நகரில் மூன்றாம் தமிழ்ச்சங்கமும் நடைபெற்றுள்ளதாகக் கருதவேண்டியுள்ளது.  சங்கம் வைத்துத் தமிழாய்ந்த சங்கப்புலவர்கள் இயற்றிய சங்கப்பாடல்களில் 16 பாடல்வரிகளில் தமிழ் என்ற சொல் இடம் பெற்றுள்ளது.

ஆலவாய் என்ற மதுரையானது சிவபெருமானது உலகு ஆகும்.  ஆலவாய்நகர் தவிர்த்து உலகில் உள்ள மற்றைய நகரகள் எல்லாம் பிரமனால் படைக்கப் பெற்ற திருமாலின் உலகு ஆகும்” என்கிறது திருவிளையாடற் புராணம்.  திருவிளையாடற் புராணத்தில் 68 பாடல்களில் தமிழ் என்ற சொல் இடம் பெற்றுள்ளது.

அன்னையரே, அன்னையரே,
தமிழன்னையரே,
நாம் நம் குழந்தைகளுக்கு அமிழ்தினும் இனிய தமிழை ஓதுவோம், தமிழன்னையரே.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
மேனாள் துணைப்பதிவாளர் , அழகப்பா பல்கலைக்கழகம்.
ஆராய்ச்சி அமைப்பாளர், திருவிளையாடல் ஆராய்ச்சிமையம், மதுரை.
புரட்டாசி 24 (11.10.2019) வெள்ளி கிழமை.

தமிழ்ச் சங்கப்பாடல்களில் தமிழ்
தமிழ் நிலைபெற்ற தாங்கு அரு மரபின் - சிறு 66
கொண்டி மிகைபட தண் தமிழ் செறித்து - பதி 63/9
தமிழ் வையை தண்ணம் புனல் - பரி 6/60
தள்ளா பொருள் இயல்பின் தண் தமிழ் ஆய்வந்திலார் - பரி 9/25
தெரி மாண் தமிழ் மும்மை தென்னம்பொருப்பன் - பரி 26/1
தாதின் அனையர் தண் தமிழ் குடிகள் - பரி 30/5
தண் தமிழ் வேலி தமிழ்நாட்டு_அகம் எல்லாம் - பரி 31/1
தமிழ் கெழு மூவர் காக்கும் - அகம் 31/14
தமிழ் அகப்படுத்த இமிழ் இசை முரசின் - அகம் 227/14
தமிழ் தலைமயங்கிய தலையாலம்கானத்து - புறம் 19/2
மண் திணி கிடக்கை தண் தமிழ் கிழவர் - புறம் 35/3
அதூஉம் சாலும் நல் தமிழ் முழுது அறிதல் - புறம் 50/10
தண் தமிழ் பொது என பொறாஅன் போர் எதிர்ந்து - புறம் 51/5
தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே - புறம் 58/13
வையக வரைப்பில் தமிழகம் கேட்ப - புறம் 168/18
தண் தமிழ் வரைப்பு_அகம் கொண்டி ஆக - புறம் 198/12

திருவிளையாடல் புராணப் பாடல்களில் தமிழ்
64.         
பின் எவன் உரைப்பது அந்தப் பெரும் தமிழ் நாடு ஆம் கன்னி
தன் இடை ஊர்கள் என்னும் அவயவம் தாங்கச் செய்த
பொன் இயல் கலனே கோயில் மடம் அறப்புற நீர்ச்சாலை
இன் அமுது அருத்துசாலை என உருத் திரிந்தது அம்மா
74.         
அவம் மிகும் புலப் பகை கடந்து உயிர்க்கு எலாம் அன்பாம்
நவமிகும் குடை நிழற்றி மெய்ச் செய்ய கோல் நடத்தி
சிவ மிகும் பரஞான மெய்த் திருவொடும் பொலிந்து
தவம் இருந்து அரசு ஆள்வது தண் தமிழ்ப் பொதியம்.        
81.         
மாயவன் வடிவாய் அது வைய மால் உந்திச்
சேய பங்கயமாய் அது தென்னன் ஆடலர் மேல்
போய மெல் பொகுட்டு ஆயது பொதியம் அப் பொகுட்டின்
மேய நான்முகன் அகத்தியன் முத்தமிழ் வேதம்.     
83.         
சிறந்த தண் தமிழ் ஆலவாய் சிவன் உலகு ஆனால்
புறம் தயங்கிய நகர் எலாம் புரந்தரன் பிரமன்
மறம் தயங்கிய நேமியோன் ஆதிய வானோர்
அறம் தயங்கிய உலகு உருவானதே ஆகும்
86.         
கடுக் கவின் பெறு கண்டனும் தென் திசை நோக்கி
அடுக்க வந்து வந்து ஆடுவான் ஆடலின் இளைப்பு
விடுக்க வார மென் கால் திரு முகத்து இடை வீசி
மடுக்கவும் தமிழ் திருச் செவி மாந்தவும் அன்றோ.
89.         
தொண்டர் நாதனைத் தூது இடை விடுத்ததும் முதலை
உண்ட பாலனை அழைத்தது எலும்பு பெண் உருவாகக்
கண்டதும் மறைக் கதவினைத் திறந்ததும் கன்னித்
தண் தமிழ்ச் சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்.     
108.       
குமிழ் அலர்ந்த செந்தாமரைக் கொடி முகிழ் கோங்கின்
உமிழ் தரும் பா ஞானம் உண்டு உமிழ்ந்த வாய் வேதத்
தமிழ் அறிந்து வைதிகம் உடன் சைவமும் நிறுத்தும்
அமிழ்த வெண் திரை வைகையும் ஒரு புறத்து அகழ் ஆம்.
146.       
வரு விருந்து எதிர் கொண்டு ஏற்று நயன் உரை வழங்கும் ஓசை
அருகிருந்து அடிசில் ஊட்டி முகமனன் அறையும் ஓசை
உரை பெறு தமிழ் பாராட்டு ஓசை கேட்டு உவகை துள்ள
இருநிதி அளிக்கும் ஓசை எழுகடல் அடைக்கும் ஓசை.
228.       
மால் அய மாதவனை அடைந்து கைதொழுது வாழ்த்தி வாதாவி வில்வலனைக்
கொலை புரி தரும மூர்த்தியே விந்தக் குன்று அடக்கிய தவக் குன்றெ
அலைகடல் குடித்த அருள் பெரும் கடலே அரும் தமிழ்க் கொண்டலே தென்பார்
துலை பெற நிறுத்த களைகணே என்று சுருதி ஆயிரம் எனத் துதித்தார்.
340.       
சுந்தரன் என்று எழுதிய கூர் அம்பு எய்து செம்பியன் போர் தொலைத்தவாறும்
செந்தமிழோர்க் இயற்பலகை அருளியதும் தருமிக்குச் செம் பொன் பாடித்
தந்ததுவும் மாறுபடு கீரற்குக் கரை ஏற்றம் தந்தவாறும்
விந்தம் அடக்கிய முனியால் கீரன் இயல் தமிழ் தெளிய விடுத்த வாறும்.        
520.       
மனு அறம் உவந்து தன் வழிச் செல நடத்தும்
புனிதன் மலயத் துவசன் வென்றி புனை பூணான்
கனி அமுதம் அன்ன கருணைக்கு உறையும் காட்சிக்கு
இனியன் வட சொல் கடல் தமிழ்க் கடல் இகந்தோன்.         
532.       
மாந்தர் பயின் மூவறு சொல் மாநில வரைப்பில்
தீம் தமிழ் வழங்கு திரு நாடது சிறப்ப
ஆய்ந்த தமிழ் நாட அரசளித்து முறை செய்யும்
வேந்தர்களின் மீனவர் விழுத்தகைமை எய்த.           
569.       
செந்தமிழ் வடநூல் எல்லை தெரிந்தவர் மறைநூல் ஆதி
அந்தம் இல் எண் எண் கேள்வி அளந்தவர் சமயம் ஆறும்
வந்தவர் துறந்தோர் சைவ மாதவர் போதம் ஆண்ட
சிந்தனை உணர்வான் மாயை வலி கெடச் செற்ற வீரர்.  
599.       
சிவ பரம் பரையும் அதற்கு நேர்ந்து அருள்வாள் தென்னவர் மன்னனாய் மலயத்
துவசன் என்று ஒருவன் வரும் அவன் கற்பின் துணைவியாய் வருதி அப்போது உன்
தவ மகவாக வருவல் என்று அன்பு தந்தனள் வந்த வாறு இது என்று
உவமையில் பொதியத் தமிழ் முனி முனிவர்க்குஓதினான் உள்ளவாறு உணர்ந்தார்.              
716.       
தமிழ் முதல் பதினெண் தேத்து மகளிரும் தாரு நாட்டின்
அமிழ்த மன்னவரும் முல்லை அம்புயம் குமுதம் நீலம்
குமிழ் நறும் கோங்கு காந்தள் கோழ் இணர் அசோகம் வாசம்
உமிழ் தர மலர்ந்த நந்த வனம் என ஒருங்கு மொய்த்தார்.             
822.       
எந்தையிருத் திருக்கூத்தென் றுமிந்நிலைநின் றியார்க்கும்
பந்தவெம் பாசநீங்கப் பரித்தருள் செய்தி யென்னச்
செந்தமிழ்க் கன்னி நாடுசெய்தமா தவப்பே றெய்தத்
தந்தன மென்றான் வேந்தலை தடுமாறநின்றான்.
869.       
ஆரொடு மடல் அவிழ் பனை யொடும் அர நிகர் இலை நிம்பத்
தாரொடு புலியொடு சிலையொடு தகு கயலொடு தழுவாப்
பாரொடு திசை பரவிய தமிழ் பயில் அரசர்கள் குழுமிச்
சீரொடு பல திரு வொடு வரு செயல் அனையது நதியே.  
1054.    
கோமகன் நிகழும் நாளில்கோள் நிலை பிழைத்துக் கொண்மூ
மா மழை மறுப்பப் பைங்கூழ் வறந்து புல் தலைகள் தீந்து
காமரு நாடு மூன்றும் கை அறவு எய்த மன்னர்
தாம் அது தீர்வு நோக்கித் தமிழ் முனி இருக்கை சார்ந்தார்.
1127.    
தென் கடல் வடபால் நோக்கிச் செல்வது போலத் தென்னன்
தன் கடல் அணிகம் கன்னித் தண் தமிழ் நாடு நீந்தி
வன் கட நெறிக் கொண்டு ஏகி வளவர் கோன் எதிர் கொண்டு ஆற்றும்
நன் கடன் முகமன் ஏற்று நளிர் புனல் நாடு நீந்தி.
1146.    
மாத்திமர் விராட மன்னர் மாளவர் தெலுங்க தேயப்
பார்த்திபர் பிறரும் தத்தம் பதிதொறும் வரவு நோக்கித்
தேர்த்திகழ் அனிகத் தோடும் சென்று எதிர் முகமன் செய்யத்
தார்த் திரு மார்பன் கன்னித் தண் தமிழ் நாடு சார்ந்தான்.            
1602.    
நிலை நிலையாப் பொருள் உணர்ந்து பற்று இகந்து  கரணம் ஒரு நெறியே செல்லப்
புலன் நெறி நீத்து அருள் வழி போய்ப் போதம் ஆம் தன் வலியைப் பொத்தி நின்ற
மலவலி விட்டு அகல அரா உமிழ்ந்த மதி போல் விளங்கி மாறி ஆடும்
தலைவன் அடி நிழல் பிரியாப் பேரின்பக் கதி அடைந்தான் தமிழ்ர் கோமான்.
1603.    
செம் கண் மால் விடை மேல் விடங்கர் செருக்களத்து இடை வாள் எடுத்து
அங்கம் வெட்டிய சேவகத்தை அறைந்தனம் தமிழ் மாறன் மேல்
சங்கை இட் அமனிசரார் ஆற்றிய தறு கண் வேள்வி முளைத்து ஓர்
வெம் கண் வாள் அரவைத் துணித்து விளித்தவாறும் விளம்புவாம்.
1606.    
நாயினும் கடை ஆன மாசுடன் இருள் புரை நெஞ்சு அரண்
ஆயினும் சமண் வேடர் அன்ன தறிந்து கொண்டு வெகுண்டு அழற்று
 இரும்பு என மான வெம் கனல் சுட்டிடத்தரியார் களாய்
மாயிரும் தமிழ் மாறனைத் தெற வஞ்ச வேள்வி இயற்றுவார்.
1616.    
அனுமதி கொடு தொழுது இறை பாத மகமதி கொடு புறன் அடைகின்ற
பனிமதி வழி வரு தமிழ் மாறன் பகழி யொடு அடுசிலை யினன் ஏகிக்
குனி மதி தவழ் தரு மதி நீடும் கொடி அணி குட கடை குறுகா முன்
தனிவரை என நிகர் தரு கோபத்தழல் விழி அரவினை எதிர் கண்டான்.          
1857.    
பரும் கை மால்வரைப் பூமியன் பைந்தமிழ் நாட்டின்
இரங்கு தெண் திரைக் கரங்களால் ஈர்ம் புனல் வைகை
மருங்கில் நந்தனம் மலர்ந்த பன் மலர் தூ உய்ப் பணியப்
புரம் கடந்தவன் இருப்பது பூவண நகரம்.
1968.    
கனவட்டத்து அடி இடறப் பொறி விட்டுப் புலன் அவியக்
                           கரணத் உட்பொதி உயிர் விட்டவன் ஆகம்
தனை ஒக்கல் பவனர் எடுத்தனர் கிட்டிக் குரிசில் கடைத்
                           தலை இட்டத் திறம் மொழியத் தமிழ் மாறன்
இனை உற்றுப் பனவர் கையில் கனகக் குப்பைகள் நிறை
                        வித்து எமதிக் உற்றவனை எடுத்து எரிமாலை
புனைவித்த அக் கடன் முடிவித்தனன் மற்றப் பழி படரின்
                            புதையப் பற்றியது இடைவிட்டு அகலாதே.
2129.    
பின்னே ஏழ் அடி சேண் சென்று பெருமை சான்ற வரிசையினால்
தன் நேரிசையான் தனை விடுத்து மீண்டான் ஆகத் தமிழ் மதுரை
மின்னேர் சடையார் இசைத் தொண்டன் தானும் மீண்டு வெயில் விரிக்கும்
பொன்னேர் மௌலி நிதிக்கிழவன் போல மதுரை நகர் புக்கான்.          
2244.    
என்று கூறிய அரும் தமிழ்க்கு இறைவனை நோக்கித்
துன்று மாதவர் அறிவிலாச் சூகர உருவக்
குன்றின் மீது இருந்தவர் எலாம் கோதற நோற்று
நின்ற காரணம் யாது எனக் குறு முனி நிகழ்த்தும்.
2279.    
இருந்தவன் சிலரை நோக்கி இயம்புவான் எர்க்கும் பேறு
தரும் தலம் தீர்த்தம் மூர்த்தித் தன்மையில் சிறந்த அன்பு
அரும் தமிழ் மதுரை பொன் தாமரைத் தடம் சுந்தரேசப்
பெரும் தகை என்று சான்றோர் பேசுவார் ஆதலாலே.
2333.    
வெள்ளநீர் வறப்ப ஆதி வேதியன் ஞாலம் முன்போல்
உள்ளவாறு உதிப்ப நல்கி உம்பரோடு இம்பர் ஏனைப்
புள்ளொடு விலங்கு நல்கிக் கதிர் உடல் புத்தேள் மூவர்
தள்ளரு மரபின் முன் போல் தமிழ் வேந்தர் தமையும் தந்தான்.
2402.    
அத் தகு வருணம் எல்லாம் ஏறி நின்று அவற்றின்
மெய்த்தகு தன்மை எய்தி வேறு வேறு இயக்கம் தோன்ற
உய்த்திடும் அகாரத்திற்கு முதன்மையாய் ஒழுகும் நாதர்
முத்தமிழ் ஆலவாய் எம் முதல்வர் அம் முறையான் மன்னோ.
2409.    
தனி வரு புலவர் நீவிர் தண் தமிழ் ஆலவாய் எம்
நனி வரு கருணை மூர்த்தி கனைகழல் இறைஞ்சல் வேண்டும்
இனி வருகென்ன நீரே எங்களுக்கு அளவு இல் கோடி
துனி வரு வினைகள் தீர்க்கும் சுந்தரக் கடவுள் என்றார்.
2414.    
வண் தமிழ் நாவினார்க்கு மன்னவன் வரிசை நல்கக்
கண்டு உளம் புழுங்கி முன்னைப் புலவர் அக் கழகத் தோரை
மண்டினர் மூண்டு மூண்டு வாது செய் ஆற்றன் முட்டிப்
பண்டைய புலனும் தோற்றுப் படர் உழந்து எய்த்துப் போனார்.
2431.    
நதி அணிந்தவர் தம் மொடு நாற்பத்து ஒன்
பதின்மர் என்னப் படும் புலவோர் எலாம்
முதிய வான் தமிழ் பின்னு முறை முறை
மதி விளங்கத் தொடுத்து அவண் வாழும் நாள்.
2520.    
தென்னவன் குல தெய்வம் ஆகிய
மன்னர் கொங்கு தேர் வாழ்க்கை இன் தமிழ்
சொல் நலம் பெறச் சொல்லி நல்கினார்
இன்னல் தீர்ந்து அவன் இறைஞ்சி வாங்கினான்.    
2524.
உணர்ந்த கேள்வியார் இரரோடு ஒல்லை போய்ப்
புணர்ந்த ஆயிரம் பொன்னும் இன் தமிழ்
கொணர்ந்த வேதியன் கொள்க இன்று என
மணந்த தாரினான் மகிழ்ந்து நல்கினான்.   
2531.    
கண்டிகை மதாணி ஆழி கதிர்முடி வயிரம் வேய்ந்த
குண்டலம் குடி கொண்டு அகத்து அழகு எலாம் கொள்ளைக் கொள்ளத்
தண் தமிழ் மூன்றும் வல்லோன் தான் எனக் குறி இட்டு ஆங்கே
புண்டர நுதலில் பூத்துப் பொய் இருள் கிழித்துத் தள்ள.
2566.    
சம்பக மாறன் என்னும் தமிழ்நர் தம் பெருமான் கூடல்
அம்பகல் நுதலினானை அங்கயல் கண்ணி னாளை
வம் பக நிறைந்த செந்தா மரை அடி வந்து தாழ்ந்து
நம்பக நிறைந்த அன்பால் பல் பணி நடாத்தி வைகும்.     
2567.    
கொன்றை அம் தெரியல் வேய்ந்த கூடல் எம் பெருமான் செம்பொன்
மன்றல் அம் கமலத்து ஆழ்ந்து வழிபடு நாவலோனை
அன்று அகன் கரை ஏறிட்ட அருள் உரை செய்தேம் இப்பால்
தென் தமிழ் அனையான் தேறத் தெருட்டிய திறனும் சொல்வாம்.
2577.    
விடை கொடு போவான் ஒன்றை வேண்டினான் ஏகும் தேயம்
தொடை பெறு தமிழ் நாடு என்று சொல்லுப வந்த நாட்டின்
இடை பயில் மனித்தர் எல்லாம் இன் தமிழ் ஆய்ந்து கேள்வி
உடையவர் என்ப கேட்டார்க்கு உத்தரம் உரைத்தல் வேண்டும்.
2578.    
சித்தம் மாசு அகல அந்தச் செம் தமிழ் இயல் நூல் தன்னை
அத்தனே அருளிச் செய்தி என்றனன் அனையான் தேற
வைத்தனை முதல் நூல் தன்னை மற்று அது தெளிந்த பின்னும்
நித்தனும் அடியேன் என்று நின் அடி காண்பேன் என்றான்.
2584.    
இருந்த மாதவச் செல்வனை எதிர் வர நோக்கி
அருந்த வாவிற்கு இயல் தமிழ் அமைந்தில எம்பால்
தெரிந்த நீ அதை அரி தபத் தெருட்டு எனப் பிணியும்
மருந்தும் ஆகிய பெருந்தகை செய்யவாய் மலர்ந்தான்.
2598.    
அந்தம் இல் கேள்வி ஓர் எண் அறுவரும் வேறு வேறு
செந்தமிழ் செய்து தம்மில் செருக்குறு பெருமை கூறித்
தந்தமின் மாறாய்த் தத்தந் தராதரம் அளக்க வல்ல
முந்தை நூல் மொழிந்த ஆசான் முன்னர் வந்து எய்தினாரே.
2602.    
ஓயா விறல் மதனுக்கு இணை ஒப்பான் அவன் ஊமச்
சேய் ஆம் அவன் இடை நீர் உரை செய்யுள் கவி எல்லாம்
போய் ஆடுமின் அனையானது புந்திக்கு இசைந்தால் நன்று
யாவரும் மதிக்கும் தமிழ் அதுவே என அறைந்தான்.
2605.    
பின் பாவலர் எலாம் பெரு வணிகக் குல மணியை
அன்பால் அழைத்து ஏகித் தமது அவையத்து இடை இருந்தா
நன் பால் மலர் நறும் சாந்து கொண்டு அருச்சித்தனார் நயந்தே
முன்பால் இருந்து அரும் தீம் தமிழ் மொழிந்தார் அவை கேளா.
2607.    
இத் தன்மையன் ஆகிக் கலை வல்லோர் தமிழ் எல்லாம்
சித்தம் கொடு தெருட்டும் சிறு வணிகன் தெருள் கீரன்
முத் தண் தமிழ் கபிலன் தமிழ் பரணன் தமிழ் மூன்றும்
அத் தன் மையன் அறியும் தொறும் அறியும் தொறும் எல்லாம்.
2610.    
உலகினுட் பெருகி அந்த ஒண் தமிழ் மூன்றும் பாடல்
திலகமாய்ச் சிறந்த வாய்ந்த தெய்வ நாவலரும் தங்கள்
கலகமா நவையில் தீர்ந்து காசு அறு பனுவல் ஆய்ந்து
புலம் மிகு கோட்டி செய்து பொலிந்தனர் இருந்தார் போலும்.
2618.    
சந்நிதியில் வீழ்ந்து எழுந்து தமிழ் அறியும் பெருமானே தன்னைச் சார்ந்தோர்
நல் நிதியே திரு ஆலவாய் உடைய நாயகனே நகுதார் வேம்பன்
பொன் நிதி போல் அளவு இறந்த கல்வியும் மிக்கு உளன் என்று புகலக் கேட்டுச்
சொல் நிறையும் கவி தொடுத்தேன் அவமதித்தான் சிறிது முடி துளக்கான் ஆகி.
2622.    
சங்கவான் தமிழ்த் தெய்வப் புலவரோடும் உடன் எழுந்து சைல வேந்தன்
மங்கை நாயகன் போன வழிபோய் அங்கு இருந்தார் அவ் வழி நாள் வைகல்
கங்குல்வாய் புலரவரும் வை கறையில் பள்ளி உணர் காலாத்து எய்தி
அங்கண் நாயகன் அடியார் சேவிப்பார் இலிங்க உரு அங்குக் காணார்.
2630.    
அல்லதை என்று அமரால் என் பகைஞரால் கள்வரால் அரிய கானத்து
எல்லை விலங்கு ஆதிகளால் இடையூறு இன் தமிழ் நாட்டில் எய்திற்றலோ
தொல்லை மறையவர் ஒழுக்கம் குன்றினரோ தவம் தருமம் சுருங்கிற்றாலோ
இல்லறனும் துறவறனும் பிழைத்தனவோ யான் அறியேன் எந்தாய் எந்தாய்.
2674.    
பிள்ளை இன்மை யெற்கு இரங்கி எம் பிரான் தமிழ்க் கூடல்
வள்ளல் நல்கிய மகவு இதுவே என வலத்தோள்
துள்ள அன்பு கூர் தொடுத்து திருத் தோள் உறப் புல்லித்
தள்ளரும் தகைக் கற்பினாள் தனது கைக் கொடுத்தான்.
2949.    
கரியின் ஓசையும் பல்லிய ஓசையும் கடும் தேர்ப்
பரியின் ஓசையும் இன் தமிழ் ஓசையும் பாணர்
வரியின் ஓசையும் நிரம்பிய மணி நகர் எங்கும்
நரியின் ஓசையாய்க் கிடந்தது விழித்தது நகரம்.
3090.    
பின்னும் அவர் கனவின் கண் மன்றுள் நடம் பிரியாத பெருமான் வந்து
முன்னவனைப் பெருந்துறையில் குருந்தடியில் ஆட் கொண்ட முறையினாலும்
இன் இசை வண் தமிழ் மணி போல் பாடும் காரணத்தாலும் யாம் அன்று இட்ட
மன்னிய பேர் மாணிக்க வாசகன் என்று அழை மின்கள் வருவான் என்றார்.
3118.    
அரும் தமிழ்ப் பாண்டி வேந்தற்கு உறுதி ஆக்கம் செய்யும்
மருந்தினில் சிறந்த கற்பின் மங்கையர்க்கு அரசி யாரும்
பெருந்தகை அமைச்சு நீரில் குழைத்து அன்றி பிறங்கப் பேறு
தரும் திரு நீறு இடாராய் சிவ அடிச் சார்பில் நின்றார்.      
3133.    
வெம் குரு வேந்தர் அடி பணிந்து அடியேன் குலச் சிறை விளம்பும் விண்ணப்பம்
இங்கு எழுந்து அருளிச் சமண் இருள் ஒதுக்கி எம் இறை மகற்கு நீறு அளித்துப்
பொங்கி வரும் பணை சூழ் தென் தமிழ் நாட்டைப் பூதி சாதன வழி நிறுத்தி
எங்களைக் காக்க என்ற பாசுரம் கேட்டு எழுந்தனர் கவுணியர்க்கு இறைவர்.
3147.    
வைதிகத்து தனி இளம் சிறு மடங்கலேறு அடைந்த
செய்தியைத் தெரிந்து அயன் மலை இடங்களில் திரண்ட
கை தவத்த எண்ணாயிரம் கயவரும் ஒருங்கே
எய்தி முத்தமிழ் விரகர் மேல் பழித்தல் இழைத்தார்.           
3150.    
சிட்டர் நோக்கி அத் தீயினை தென் தமிழ்க் கூடல்
அட்ட மூர்த்தியை அங்கு இருந்து அரு மறைப் பதிகம்
துட்டர் பொய் உரை மேற் கொண்டு தொல் முறை துறந்து
விட்ட வேந்தனைப் பற்று எனப் பாடினார் விடுத்தார்.       
3157.    
அழைமின் ஈண்டு என அரசனும் இசைந்தனன் ஆர்வம்
தழையும் மந்திரத் தலை மகன் தனி நகர் எங்கும்
விழவு தூங்க நல் மங்கல வினைகளால் விளக்கி
மழலை இன் தமிழ் விரகர் தம் மடாத்தில் வந்து எய்தா.    
3250.    
வட புலது உள்ள ஈசன் பதிகளும் வணங்கிப் பாடக்
கடவம் என்று எழுந்து கூடல் கண் நுதல் பெருமான் தன்னை
இடன் உறை கயல் கண்ணாளை இறைஞ்சிப் பல்வரனும் பெற்று
விடை கொடு தமிழ் நாடு எங்கும் பணிந்தனர் மீண்டு போவார்.
3251.    
தன் பெரும் கற்பினாளும் அமைச்சனும் தமிழ் நர் கோனும்
பின்பு முனம் தண் காழிப் பிரான் அடி பிரிவு ஆற்றார் ஆய்
அன்பு தந்தவர் பால் நட்ட அன்று தொட்டு ஆனாக் கேண்மை
இன்பமும் துன்பம் ஆகி விளைந்து முன் ஈர்ப்பப் போனார்.
3258.    
அத்தன வணிகற்கு உரிய நன் மருகன் அவன் முதற் கடிமணம் முடித்தோன்
முத்தமிழ் மதுரைப் பதி உளான் அவற்கே முறையினால் நோற்று நான் பயந்த
வித்தக மயிலைக் கொடுப்பல் என்று அனைய இயற் குல வணிகர் கோன் தன்னோடு
ஒத்த பல் கிளைஞர் யாவரும் அறிய உணர்த்தினான் சில பகல் ஒழிய.
3309.    
என்று தென் மலை மேல் இருந்த மாதவத் தோன் இன் அருள் குருபரன் தனையும்
அன்று அவன் திருவாய் மலர்ந்த வாசகமும் அருள் கனிந்து ஒழுக உள்ளடக்கித்
தென்தமிழ் ஆலவாய்த் தனிப் பதியைச் சென்னிமேல் பன்னிரண்டு உம்பர்
ஒன்ற வைத்து இமையா அம் கயல் கண்ணி உடன் உறை ஒருவனை நினைந்தான்
3338.    
இந் நதி வெண் முத்து ஆரம் எனக் கிடந்து இலங்கும் சென்னி
மன்னவன் நாடு ஈது என்ப தமிழ் அறி வைகைப் பேர்யாறு
அந்நதி துறக்க மண்மேல் வழுக்கி வீழ்ந்தாங்குத் தோற்றித்
தென்னவன் நாடு சேய்த்தாத் தெரிவதே காண்மின் என்றான்

நன்றி - சங்கப்பாடல் தொகுப்பு = http://tamilconcordance.in/
நன்றி - திருவிளையாடல் பாடல் பதிவு = தமிழ்இணையப் பல்கலைக்கழகம்

திருவிளையடல் பாடல் தொகுப்பு - காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
புரட்டாசி 20 (07.10.2019) திங்கள் கிழமை

No comments:

Post a Comment