Tuesday 18 August 2020

கிடைக்காது கிடைக்காது, கீழடியில் கிடைக்கவே கிடைக்காது.

கிடைக்காது கிடைக்காது, 
கீழடியில் வழிபாட்டுப் பொருட்கள் 
கிடைக்கவே கிடைக்காது. 




கீழடியில் கிடைத்துள்ள பொருட்களில் 3 பொருட்கள் முக்கியமானவை. ஒன்று சுடுமண்ணால் செய்யபெற்ற, (1) “கோரைப் பற்களுடன் காதுகள்வரை அகண்ட வாயை உடைய உருவபொம்மை”.  (2) “கழுத்தில் மாலையணிந்த மாட்டின் தலை”, (3) “பன்றியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ள பவளம்”.




இந்த மூன்று பொருட்களும் வழிபாட்டில் இருந்தவையா? என்பதை உறுதியாகச் சொல்ல இயவில்லை என்கின்றனர்.

    இந்தக் கருத்தினை அடிப்படையாகக் கொண்டு, “இங்கு வாழ்ந்த இயற்கையை வழிபட்டுள்ளனர். இவர்களுக்கு மதங்கள் கிடையாது” என்றெல்லாம் விளக்கம் கொடுக்கின்றனர்.  

    பன்றி உருவம் பொறிக்கப்பட்ட பவளத்தைச் “சூது”பவளம் என்று குறிப்பிடுகின்றனர்.   

மேற்கண்ட கருத்துகளின் அடிப்படையில் கீழ்க்கண்ட ஐயங்கள் எழுகின்றன.
1) கோரைப்பற்களுடன் காதுகள்வரை வாய் அகன்ற உருவம் எதைக் குறிக்கிறது? இயற்கையில் இப்படியொரு உருவம் உள்ளதா? இந்த உருவத்திற்கும் இயற்கை வழிபாட்டிற்கும் என்ன தொடர்பு?   
    இது மதுரையின் காவல்தெய்வமான “மதுராபதித் தெய்வம்” போன்றது இல்லையா?

2) பவளத்தில் பொறிக்கப்பட்டுள்ள பன்றியின் உருவத்திற்கும் “சூது”க்கும் என்ன தொடர்பு? மதுரையில் சிவபெருமான் பன்றி அவதாரம் எடுத்துத் திருவிளையாடல் செய்தார் என்ற புராணக் கதைக்கும் தொடர்பு இல்லையா?

3) கழுத்தில் மாலையணிந்த மாட்டின் உருவம் நந்திவழிபாட்டுடன் தொடர்புடையது இல்லையா? அல்லது தமிழரின் “ஏறு தழுவுதல்” மற்றும் சல்லிக்கட்டு விளையாட்டுடன் தொடர்புடைய இல்லையா?

இந்தக் கேள்விகளுக்கு விடை தெரிந்தால்தானே கீழடியில் வழிபாட்டுப் பொருட்களே கிடைக்கவில்லை என்று உறுதியாகச் சொல்ல இயலும்?

கீழடியில் கிடைக்கவே கிடைக்காது.
கீழடிக்குக் கீழே எங்கு தோண்டித்தோண்டிப் பார்த்தாலும், சல்லடைபோட்டுச் சலித்துப் பார்த்தாலும், வழிபாடு தொடர்பான பொருட்கள் ஏதும் கிடைக்காது கிடைக்காது, கிடைக்கவே கிடைக்காது.  கீழடியில் வழிபாடு தொடர்பான பொருட்கள் ஏதும் கிடைக்க வாய்ப்பே இல்லை.  ஏனென்றால் இந்தத் தொன்மையான நகரமானது அங்கு வசித்த மக்களால் கைவிடப்பட்ட நகரமாகும்.  இங்கு வாழ்ந்த மக்கள் இப்போதிருக்கும் மதுரைக்குக் குடி பெயர்ந்து சென்றுள்ளனர்.

மணவூரிலிருந்து மதுரைக்கு -- 
தொல்லியல் ஆய்வுகள் நடைபெறும் இடத்திற்கு அருகே மணலூர் உள்ளது.  
மணலூர் மிகவும் தொன்மையான ஊராகும். மணலுரைப் பெருமணலூர் என்றும் மணவூர்புரம் என்றும் மகாபாரதம் குறிப்பிடுகிறது. இந்த ஊரை மணலூர் என்று பெரும்பற்றப் புலியூர் நம்பியின் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது. இந்த ஊரின் பழைய பெயர் மணவூர் என்கிறது பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணம்.  இந்த ஊரில் பிறந்த வளர்ந்த காந்திமதி என்ற பெண்ணை உக்கிரபாண்டியன் திருமணம் செய்து கொண்ட காரணத்தினால் மணலூருக்கு மணவூர் என்ற காரணப் பெயர் உண்டானது.  

 மணவூரைத் தலைநகராக் கொண்டு குலசேகரபாண்டியன் அரசாண்டு வந்துள்ளான்.  அவனது ஆட்சிக் காலத்தில் தனஞ்சயன் என்னும் வணிகன் ஒருவன் இருந்தான்.  அவன் ஒருநாள் மேற்கே சென்று வணிகம் முடித்து இரவு மணவூருக்குத் திரும்பும் போது, கடம்பவனத்தின் ஊடே இருந்த சொக்கலிங்கப் பெருமானை (சிவலிங்கம்) கண்டு வழிபட்டான்.  அந்தச் சிவலிங்கத்தைத் தேவர்கள் வந்து பூசைகள் செய்து வழிபடுவதையும் கண்டான்.  விடிந்ததும் குலசேகரபாண்டியனிடத்தில் சென்று மணவூருக்கு மேற்கே உள்ள கடம்பவனத்தில் அவன் கண்ட அதிசயங்களைக் கூறினான்.  குலசேகர பாண்டியனும், மந்திரிகளுடன்  கடம்பவனத்திற்குள்  சென்று அந்தச் சிவலிங்கத்தைக் கண்டு வணங்கி நின்றான். அப்போது பாண்டியன் முன் சித்தர் ஒருவர் தோன்றி, இந்தக் காட்டை அழிந்து நகரமாக்கு என்று கூறினார்.  சித்தர் கூறியபடியே அந்தக் கடம்பமரங்கள் நிறைந்த காட்டை அழித்து, கோயிலைக் கட்டி, நகரத்தை உருவாக்கினான் குலசேகர பாண்டியன் என்கிறது திருவிளையாடற் புராணம் திருநகரங் கண்ட படலம்.

கைவிடப்பட்ட நகரம் - 
மணவூரில் குடியிருந்த மக்களெல்லாம் மணலூரைக் காலிசெய்து விட்டு, புலம்பெயர்ந்து சென்று புதிதாக உருவாக்கப் பெற்ற மதுரையில் குடியேறியுள்ளனர். இதனால் மணவூர் என்பது ஓர் கைவிடப்பட்ட நகரம் ஆகும்.  காலிசெய்யப்பட்ட நகரம் ஆகும்.
    மணவூரில் இருந்த மக்கள் இப்போதிருக்கும் மதுரை நகருக்குக் குடிபெயர்ந்து செல்லும் போது, அவர்கள் அன்றாடம் பயன்படுத்திக் கொண்டிருந்த பொருட்களை எல்லாம் எடுத்துச் சென்றிருப்பர்.  அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் வழிபாட்டுப் பொருட்களே தலையானவை ஆகும். எனவே வழிபாட்டில் உள்ள பொருட்களையே முதலாவதாகத் தலையில் தூக்கிவைத்து எடுத்துச் சென்றிருப்பார்கள்.  
    கீழடியருகே கண்டறியப்பட்டுள்ள மணவூர் நகரமானது ஓர் கைவிடப்பட்ட நகரம் என்பதால், இங்கு அகழாய்வில் அன்றைய மனிதர்கள் பயன்படுத்திக் கொண்டிருந்த எந்தவொரு பொருளும் கிடைக்க வாய்ப்பே இல்லை.

தொலைந்தது போனவை தோண்டி எடுக்கப்படுகின்றன -
கீழயில் மக்கள் வாழ்ந்த காலத்தில், அவர்களால் தொலைக்கப்பட்ட, அல்லது கைவிடப்பட்ட பொருட்களே தொல்லியலாளர்களால் தோண்டிக் கண்டறியப்பட்டு வருகின்றன.  வழிபாட்டுப் பொருட்கள் தொலைந்து போயிருந்தால், அவற்றை அந்த மக்கள் அப்போதே தேடிக் கண்டுபிடித்து எடுத்திருப்பார்கள்.  

மணவூரைப் பற்றிய குறிப்புகள் திருவிளையாடற் புராணத்தில் கீழ்க்கண்ட மூன்று பாடல்களில் உள்ளன.

1) திருவிளையாடல் புராணம் பாடல் எண் 473

இன் நரம்பு உளர் ஏழிசை எழான் மிடற்று அளிகள்
கின்னரம் பயில் கடம்பமா வனத்தினின் கீழ் சார்த்
தென்னகர் சேகரன் எனும் குலசேகரன் உலக
மன்னர் சேகரன் அரசு செய்து இருப்பது மணவூர்.

(பொருள் - இனிய நரம்புகளைத் தடவுதலினால் உண்டாகின்ற  ஏழிசை போன்று, கண்டத்திலிருந்து உண்டாகும் ஓசையினையுடைய வண்டுகள், கின்னரம் என்ற இசைபாடுகின்ற பறவையும், பெரிய கடம்பவனத்தின் கிழக்குப் பகுதியைச் சார்ந்த இடத்தில், உலகின்கண் உள்ள மன்னர்களுக்கு முடிபோல்பவனும், பாண்டிய மரபிற்கு மகுடம் என்று சொல்லப் படுபவனுமாகிய, குலசேகரபாண்டியன் ஆட்சி புரிந்து இருப்பதற்கு இடமாக உள்ளது மணவூராகும்.)

2) திருவிளையாடல் புராணம் பாடல் எண் 969

தீம் தண் புனல் சூழ் வடபுலத்து மணவூர் என்னும் திருநகர்க்கு
வேந்தன் பரிதி திரு மரபின் விளங்கும் சோம சேகரன் என்று
ஆய்ந்த கேள்வி அவனிடத்துத் திருமாது என்ன அவதரித்த
காந்திமதியை மணம் பேச இருந்தார் அற்றைக் கனை இருள்வாய்.

(பொருள் - இனிய தண்ணீரால் சூழப்பட்ட வடக்கே (வடதிசையில்) உள்ள மணவூர் (மணம் -- திருமணம் -- கல்யாணம்) என்னும் அழகிய நகரத்துக்கு, சூரியனது திருக் குலத்தில் வந்து விளங்கா நின்ற சோமசேகரன்  அரசனாவான் என்று கருதி, ஆராய்ந்த கேள்வியினையுடைய அம்மன்னனிடத்து, திருமகளைப் போல அவதரித்திருந்த காந்திமதியை மணம் பேசக் கருதியிருந்தார்கள்; அன்று செறிந்த இருளை யுடைய நள்ளிரவில் .....)

3) திருவிளையாடல் புராணம் பாடல் எண் 974

நென்னல் எல்லை மணம் பேச நினைந்தவாறே அமைச்சர் மதி
மன்னர் பெருமான் தமரோடு மணவூர் நோக்கி வழி வருவார்
அன்ன வேந்தன் தனைக் கண்டார் அடல் வேல் குமரன் அனையான் எம்
தென்னர் பெருமான் குமரனுக்கு உன் திருவைத் தருதி என அனையான்.

(பொருள் -  நேற்றைப் பொழுதில் மணவினை பேசுதற்கு நினைந்த வண்ணமே, சந்திர மரபில் வந்த அரசர் பெருமானாகிய சுந்தரபாண்டியன் தன்னுடைய அமைச்சரோடும் சுற்றத்தாரோடும்,  மணவூரை நோக்கி வழி வருகின்றார்கள்.  மணவூருக்கு மன்னனான சோமசேகரனைக் கண்டார்.  வெற்றி பொருந்திய வேலை யேந்திய முருகக் கடவுளை ஒத்தவனாகிய,  எங்களது பாண்டிய மன்னர் பெருமானின் திருப்புதல்வனாகிய உக்கிரவழுதிக்கு, உன் புதல்வியைத் தருவாய் என்று கூற,  அம் மன்னன் .....)

சந்திர குலத்தில் தோன்றிய  சுந்தரபாண்டியன்.  இவனது மகன் உக்கிரப்பெருவழுதி.  இவர்களது தலைநகருக்கு வடக்கே மணவூர் உள்ளது.
மணவூரைச் சூரியகுலத்தில் தோன்றிய சோமசேகரன் என்ற மன்னன் ஆண்டு வருகிறான்.  இவனது மகளாகிய காந்திமதியை உக்கிரப் பெருவழுதிக்குப் பெண்கேட்டுத் திருமணம் செய்து வைத்தனர் என்ற செய்தியை இந்தப் பாடல்களின் வழியா அறிய முடிகிறது.  மேலும் இங்கே குறிப்பிடப்படும் மணவூரானது பாண்டியர்களது தலைநகருக்கு வடக்கே உள்ளது என்ற செய்தியையும் அறிய முடிகிறது.
 இந்நாளிலும் இந்த ஊரானது மணலூர் என்றே அழைக்கப்படுகிறது.   இந்தப் பாடல்களின் வழியாகப் பாண்டியர் தலைநருக்கு வடக்கே மணலூர் என்ற மணவூர் இருந்துள்ளதை அறிய முடிகிறது.  

தற்போது தொல்லியலாளர்கள் தோண்டிக் கண்டறிந்துள்ள நகருக்கு அருகே மணலூர் உள்ளது.  எனவே தொல்லியலாளர்கள் தோண்டிக் கண்டறிந்துள்ள நகர நாகரிகமானது சுந்தரபாண்டியனால் ஆளப்பட்ட தொன்மையான கூடல் என்ற மதுரை யாகும் என்பது தெளிவாகிறது.  

கீழடி யருகே தொல்லியலாளர்கள் தோண்டிக் கண்டறிந்துள்ள நகரின் பெயர் கூடல் என்ற மதுரையாகும்.  இந்நகரைத் தலைநகராகக் கொண்டே சுந்தரபாண்டியனும், அவனது மகன் உக்கிரபாண்டியனும் அரசாண்டுள்ளனர் என்ற செய்தியை திருவிளையாடற் புராணப் பாடல்களின் வழியாக அறிந்து கொள்ள முடிகிறது.

தொல்லியல் ஆய்வுகள் நடைபெறும் வரை புராணக்கருத்துகளைப் பலரும் புனைக்கதைகள் என்றே கூறிவந்துள்ளனர்.  புராணத்தில் கூறப்பட்டுள்ள கதைகளில் தமிழரின் தொன்மையான வரலாறும் புதைந்துள்ளன.  மணவூரின் தொன்மையையும் புராணக் கதைகளின் உண்மையையும் உலகறியச் செய்வோம்.


அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
ஆராய்ச்சி அமைப்பாளர்
திருவிளையாடற் புராண ஆராய்ச்சி மையம்.

----------------------------------------------------
கற்றவை - 

No comments:

Post a Comment