Showing posts with label tsunami. Show all posts
Showing posts with label tsunami. Show all posts

Tuesday, 3 March 2020

‘சுர்’ என்று வற்றிய சுனாமி (கடல்கோள்)

‘சுர்’ என்று வற்றிய சுனாமி


2004ஆம் வருடம் கடல் கரையைக் கடந்து, கடற்கரை ஓரம் வசித்த இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது.  இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் சுனாமி (கடல்கோள்) குறித்து அவ்வளவு விழிப்புணர்வு இல்லை. 
ஆனால் கடல்கோள் (சுனாமி) பற்றித் திருவிளையாடற் புராணம் வெகுவாக விவரித்துக் கூறுகிறது.  இதுபோன்றதொரு கடல்கோள் (சுனாமி) வர்ணனை  வேறுபிற இலக்கியங்களில் இல்லை.  இணையத்தில் பதிவுகள் ஏதும் பார்க்கக் கிடைக்கவில்லை.

நிலநடுக்கம் ஏற்பட்டு, கடல் கரையைக் கடந்து நிலத்திற்குள் புகுவதைச் “சுனாமி (Tsunami)” என்ற சப்பானியச் சொல்லாலும், “கடல்கோள், ஆழிப்பேரலை” என்ற தமிழ்ச் சொற்களாலும் குறிப்பிடுகின்றனர். 
திருவிளையாடற் புராணத்தில், சலதி பௌவம் முந்நீர் உததி என்ற சொற்களால் கடல் குறிப்பிடப்படுகிறது.  கடல்கோளை அல்லது கடல்வெள்ளத்தைச் (சுனாமியைச்) “சலதிவெள்ளம்” என்று திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.   பரஞ்சோதி முனிவர் ‘சங்கரசங்கிதை‘ என்ற வடமொழி நூலை மொழிபெயர்த்துத் தமிழிலில் திருவிளையாடல் புராணம் பாடியுள்ளார்.   திருவிளையாடற் புராணத்தில், சலதி என்ற சொல் 13 பாடல்களின் இடம் பெற்றுள்ளது . ஊழிக் காலத்தில் ஏழுகடல்களும் பொங்கி, ஏழு கண்டங்களும் கடலில் மூழ்கின என்று திருவிளையாடல் புராணம் குறிப்பிடுகிறது . 

மதுரையை அழித்திடு - 
கடலுக்கு அரசன் வருணன். வருணனுக்குத் தலைவன் இந்திரன்.  இந்திரன் வருணனை அழைத்து, நீ விரைந்து சென்று, பெரிய கடல் சூழ்ந்த ஏழு தீவுகளையும், சினந்து வளைந்து, அரிய காவலையுடைய “மதுரையை அழிப்பாயாக” என்று கூறி ஏவினான் (பாடல் எண் 1037).  கடலுக்கு அரசனாகிய வருணனும்,  பேயும் கண்ணுறங்கும் நடு இரவில், குருட்டிருளில் நேரத்தில், வளம் பொருந்திய கழனி சூழ்ந்த மதுரைப் பதியைச் சூழ்ந்து, விரைவாக அழிக்கக்  கருதினான்.

கொதித்துப் பொங்கி எழுந்த கடல் -
கடலானது,  கொதித்து பொங்கி, அலையாகிய கைகள், அண்டகூட முழுதும் ஊடுருவிச் சென்று, நடுக்க முண்டாக்கி வருத்த, ஊழிக்காலத்தில் ஆரவாரித்து அழிக்கும் வெள்ளமாய், சந்திர மண்டலத்தை எட்டிப் பொருந்தி, வருகின்ற ஒரு கரிய மலை தோன்னாற்போல, மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் அஞ்சுமாறு வந்தது(பாடல் எண் 1039). 


கப்பல்கள் செல்லும் கடல்நீரானது மதுரை மாளிகைகள் மீது செல்லுதல் -
மரக்கலங்கள் செல்லும் கடலின் வெள்ளமானது, மாடங்களையுடைய மதுரைப்பதியின் மீது வருகின்ற தன்மை, இரவினிடத்ததாகிய சந்திரன்மேல், நஞ்சு பொருந்திய வாயினையுடைய, கரிய உடலையும் வெவ்விய கண்களையும் உடைய கொடிய இராசு என்னும் பாம்பானது, அதனை விழுங்குதற்கு விரைந்து வருதலைப் போலும்(பாடல் எண் 1040);  இது மேகங்கள், மதுரையை மறைத்தற்கு வருதலைப் போன்று இருந்தது.  இப்படியில்லாமல் இதை வேறு எப்படிக் கூறுவது?

பாண்டியனுடன் போருக்கு வந்த கடல் -
மேலும், வட்டமாகிய ஆமைகள் கேடகங்களாக,  வாள்கள் எறிகின்ற வாளை மீன்கள் வாட் படைகளாக, சுறா மீன்கள் நெற்றிப் பட்டத்தையுடைய யானைகளாக,  பரந்த அலைக்கூட்டங்கள் தாவுகின்ற குதிரைக் கூட்டங்களாக, ஓடவிட்ட தோணிகள் தேர்களாக, இத் தன்மையன விரவிய சேனையோடு, கடலானது  எட்டுத் திசைகளிலும் சூழ்ந்து உக்கிர பாண்டியன்மேல் போருக்கு எழுந்ததைப் போன்று இருந்தது.

(Seaturtle.org - MTN 130:22-24 Marine Turtles Stranded by the Samoa Tsunami)

இங்ஙனம் எழுந்த கடலானது மதுரையை நெருங்கும் போது, முகில் உறங்கப் பெறும் மதில் சூழ்ந்த நல்ல அம்மதுரைப்பதியின், கிழக்குத் திக்கில் வந்து நெருங்கு மளவில், நடு இரவில், பாண்டி மன்னன் கனவில் கண், வெள்ளியம்பலவாணர்,ஒரு சித்த மூர்த்தியாய், முன்னே தோன்றி, அரும்புகின்ற புன்னகை தோன்ற மொழிகின்றார்.

உக்கிரப் பெரு வழுதிப் பாண்டியனே, உனது நகரத்தை அழிக்கும் பொருட்டு, கடலானது வருகின்றது (ஆதலால்), நீ விரைந்து எழுந்து, போய், வெற்றி பொருந்திய வேற்படையை விடுத்து வென்றி பெறுவாயாக என்று கூற, உலகினைப் பாதுகாத்தலை யுடைய உக்கிர வழுதி, கூப்பிய சிவந்த கைகளை யுடையனாய், துதிக்கின்ற நாவினை யுடையவான், எழுந்து, பேயும் உறங்குகின்ற நள்ளிரவில் தான் கண்ட கண வினை யுணர்ந்து,

கனவிலே தோன்றிய சித்தமூர்த்தி, நனவிலும் எழுந்தருளி வந்து, மன்னனது எண்ணத்தை உணர்ந்து, அப்பனே நீ காலந்தாழ்க்க நிற்பது என்னை, சினந்து கடல் வடிவாக வந்த பகைமை, அதனது மிக்க வலிகெட, கூரிய வேற்படையை எறிந்து (வென்று), உலகிற்கு வரும் அழிவை நீக்குவாய் என்று கூறினார்.

சுர் என வற்றிய சுனாமி - (உடனே) எடுத்த வேற்படையை வலமாகச் சுழற்றி வீசியபோது, வேலின் நுதியிற் பொருந்திய கடலானது, சுஃறென்னும் ஒலியுண்டாக நீர் வற்றி, மிக்க வலியானது அழிய, நெருங்கி, மணம் பொருந்திய வெற்றி மாலை இல்லையாகத் தோல்வியுற்று அடிகளில் வணங்கும் பகைவரைப் போன்று, அந்த வேற்போரில் வல்ல உக்கிரவழுதியின் கணைக்காலின் அளவில் ஆயிற்று.

எடுத்த வேல் வலம் திரித்து எறிந்த வேலை (உடனே) எடுத்த வேற்படையை வலமாகச் சுழற்றி வீசியபோது, வேலின் நுதியிற் பொருந்திய கடலானது, சுஃறென்னும் ஒலியுண்டாக நீர் வற்றி, மிக்க வலியானது அழிய, நெருங்கி, மணம் பொருந்திய வெற்றி மாலை இல்லையாகத் தோல்வியுற்று அடிகளில் வணங்கும் பகைவரைப் போன்று, அந்த வேற்போரில் வல்ல உக்கிரவழுதியின் கணைக்காலின் அளவில் ஆயிற்று,

பண் அமைந்த வேதத்திற் கூறிய வேள்வியைத் தடுப்பதல்லாமல், உலகனைத்தும் அழியுமாறு பிறிது சூழ்ச்சி செய்த, தேவேந்திரனின் ஏவலினால், பெருகிவந்த கடலானது வலி யழிந்தது; வஞ்சனையுடைய தீயோர்க்கு உதவி செய்து அதனால் இந்தக் கடலானது தன் வலிமையை இழப்பது எக்காலத்தும் உள்ள தொரு செயலே போலும்,

பகைவருடலில் நுழைந்த வேலினால், கடலைப் புறங்கொடுக்கச் செய்த உக்கிர பாண்டியன் முன்னர், நிலத்தின்கண் நின்றருளிய சித்தமூர்த்தி, விசும்பிலே மறைந்து (பின்), ஞானக்கண்ணிலே நிறைந்து தோன்றும் தனது திருவருளினால்,  திருவுருவந் தாங்கி, உமை யம்மையாரொடும், வானின்கண், இடப ஊர்தியில் வெளிப்பட்டு நின்றருளினார் 

மூன்று கண்களையும் நான்கு திருத்தோள்களையும், குழவித் திங்களைக் கண்ணியாக அணிந்த சிவந்த அழகிய சடையையும், நீலகண்டத்தையும், பாண்டியன் தரிசித்து, அப்பக்கத்தையே நோக்கி வணங்கி எழுந்து, விரிந்த பெரிய அன்பும் தானுமாக, விதிப்படி அஞ்சலி செய்து துதித்து, புவியின்மேல் நடந்து செல்கின்றான்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
திருவிளையாடற் புராணம் ஆராய்ச்சியாளர்,
திருப்பூவணப் புராணம் ஆராய்ச்சியாளர்,
காளையார்கோயில் புராணம் ஆராய்ச்சியாளர்.
----------------------------------------------------------------------------

கடல்கோள் குறித்த திருவிளையாடற் பாடல்கள் -

பொருங்கடல் வேந்தனைக் கூவிப் பொள்ளென
இருங்கட லுடுத்தபா ரேமு மூழிநாள்
ஒருங்கடுவெள்ளமொத் துருத்துப் போய்வளைந்
தருங்கடி மதுரையை யழித்தியா லென்றான்.(1037)

விளைவது தெரிகிலேன் வேலை வேந்தனும்
வளவயன் மதுரையை வளைந்திட் டிம்மெனக்
களைவது கருதினான் பேயுங் கண்படை
கொளவரு நனந்தலைக் குருட்டுக் கங்குல்வாய்.(1038)

கொதித்த லைக்க ரங்க ளண்ட கூட மெங்கு மூடுபோய்
அதிர்த்த லைக்க வூழி நாளி லார்த்த லைக்கு நீத்தமாய்
மதித்த லத்தை யெட்டி முட்டி வருமொ ரஞ்ச னப்பொருப்
புதித்த தொத்து மண்ணும் விண்ணு முட்க வந்த துததியே.(1039)

வங்க வேள் வெள்ள மாட மதுரை மீது வருசெயல்
கங்குல் வாய திங்கண் மீது காரி வாய காருடல்
வெங்கண் வாள ராவி ழுங்க வீழ்வ தொக்கு மலதுகார்
அங்கண்மூட வருவ தொக்கு மல்ல தேது சொல்வதே.(1040)

வட்ட யாமை பலகை வீசு வாளை வாள்கள் மகரமே
பட்ட யானை பாய்தி ரைப்ப ரப்பு வாம்ப ரித்திரள்
விட்ட தோணி யிரத மின்ன விரவு தானை யொடுகடல்
அட்ட மாக வழுதி மேல மர்க்கெ ழுந்த தொக்குமே.(1041)

இன்ன வாறெ ழுந்த வேலை மஞ்சு றங்கு மிஞ்சிசூழ்
நன்ன கர்க்கு ணக்கின் வந்து நணுகு மெல்லை யரையிரா
மன்ன வன்க னாவின் வெள்ளி மன்ற வாணர் சித்தராய்
முன்னர் வந்தி ருந்த ரும்பு முறுவ றோன்ற மொழிகுவார்.(1042)

வழுதி யுன்ற னகர ழிக்க வருவ தாழி வல்லைணீ
எழுதி போதி வென்றி வேலெ றிந்து வாகை பெறுகெனத்
தொழுத செங்க ரத்தி னான்று திக்கு நாவி னானெழீஇக்
கழுது றங்கு கங்கு லிற்க னாவு ணர்ந்து காவலான்.(1043)

கனவில் வந்த வேடர் நனவில் வந்து காவலோன்
நினைவு கண்டு பொழுது தாழ நிற்ப தென்கொ லப்பனே
சினவி வேலை போல வந்த தெவ்வை மான வலிகெட
முனைய வேலெ றிந்து ஞால முடிவு தீர்த்தி யாலென.(1044)

எடுத்த வேல்வ லந்தி ரித்தெ றிந்த வேலை வேன்முனை
மடுத்த வேலை சுஃறெ னவ்வ றந்து மான வலிகெட
அடுத்து வேரி வாகை யின்றி யடிவ ணங்கு தெவ்வரைக்
கடுத்த வேல்வ லான்க ணைக் காலின் மட்ட மானதே.(1045)

எடுத்த வேல்வ லந்தி ரித்தெ றிந்த வேலை வேன்முனை
மடுத்த வேலை சுஃறெ னவ்வ றந்து மான வலிகெட
அடுத்து வேரி வாகை யின்றி யடிவ ணங்கு தெவ்வரைக்
கடுத்த வேல்வ லான்க ணைக் காலின் மட்ட மானதே.(1046)

சந்த வேத வேள்வி யைத்த டுப்ப தன்றி யுலகெலாஞ்
சிந்த வேறு சூழ்ச்சி செய்த தேவர் கோவி னேவலால்
வந்த வேலை வலிய ழிந்த வஞ்ச கர்க்கு நன்றிசெய்
திந்த வேலை வலியி ழப்ப தென்று முள்ள தேகொலாம்.(1047)

புண்ணிடை நுழைந்த வேலாற் புணரியைப் புறங்கண் டோன்பால்
மண்ணிடை நின்ற சித்தர் வானிடை மறைந்து* ஞானக்
கண்ணிடை நிறைந்து தோன்றுங் கருணையால் வடிவங் கொண்டு
விண்ணிடை யணங்கி னோடு விடையிடை விளங்கி நின்றார்.(1048)

முக்கணும் புயங்க ணான்கு முளைமதிக் கண்ணி வேய்ந்த
செக்கரஞ் சடையுங் காள கண்டமுந் தெரிந்து தென்னன்
பக்கமே பணிந்தெ ழுந்து பரந்தபே ரன்புந் தானுந்
தக்கவஞ் சலிசெய் தேத்தித் தரைமிசை நடந்து செல்வான்.(1049)
----------------------------------------------

Sunday, 1 September 2019

இது ஆலவாய் என்ற பண்டைய மதுரையின் வராக முத்திரையா?

வராக முத்திரை 

கீழடி அருகே அகழ்வராய்ச்சியில் கிடைத்துள்ள வராகமுத்திரையானது ஆலவாயை ஆண்ட வராகர்களின் முத்திரையா?

இன்றைய கீழடி அருகே அன்றைய மதுரை இருந்தது. இந்தத் தொன்மையான மதுரை நகரம் கடல்கோளால் (பெருஞ் சுனாமியினால்) அழிந்தது என்கிறது திருவிளையாடல் புராணம்.

இந்தத் தொன்மையான ஆலவாய் நகரத்தைத் தொல்லியல் அறிஞர்கள் தோண்டிக் கண்டுபிடித்துள்ளனர்.  தினந்தோறும் தோண்டத் தோண்ட அரியபல தடயங்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.  அதில் செங்கல் கட்டுமானம், இரட்டை சுவர், சுடுமண் குழாய், கட்டைவிரல் அளவுள்ள சுடுமண் பானை, வராக உருவத்துடன் கூடிய சூதுபவளம், உயர் வகுப்பு பெண்கள் கழுத்தில் அணியும் கழுத்து மாலை பதக்கம் எனப் பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன.  இதில் “வராக உருவம் பதித்த பவளம்” மிகவும் தனிச் சிறப்பு வாய்ந்தது ஆகும்.


கீழடி அருகே புதையுண்டுள்ள இந்தப் பண்டைய ஆலவாய் நகரம் கடல்கோளால் அழிவதற்கு முன்னர், இந்த ஆலவாய் நகரை இராசராச பாண்டியன் ஆட்சி செய்து வந்தான்.   அவனது ஆட்சிக் காலத்தில் மதுரைக்கு அருகே உள்ள பன்றிமலையில் பன்றியின் அம்சமாகத் தோன்றிய 12 சகோதர்கள் இருந்தனர். இந்தப் 12 பேர்களையும் தனது அமைச்சர்களாக ஆக்கி இராசராசன் சிறப்புடன் தேசம் ஆண்டு வந்தான்.  

இராசராச பாண்டியனது ஆட்சிக்காலத்திற்குப் பின்னாள் , ஆதுலகீர்த்தி பாண்டியனின் மைந்தனாகிய கீர்த்தி வீடணன் காலத்தில் பிரளயத்தினால் கடல்வெள்ளம் (சுனாமி) தோன்றியது.   அந்தக் கடல்கோளால் ஆலவாய் என்ற இந்தத் தொன்மையான மதுரையானது முற்றிலும் அழிந்து போனது.  எல்லாமும் மண்ணுள் புதைந்து போயின.  பன்றிகளின் அம்சமாகத் தோன்றி அமைச்சர்களாக விளங்கி நல்லாட்சி செய்த 12 மந்திரிகளின் இலட்சினைகளும் புதைந்து போயின.
இந்தக் கடல்கோளில் சோமசுந்தரப் பெருமான் விமானமும், மீனாட்சி அம்மை ஆலயமும், இடபமலையும், யானை மலையும், நாக மலையும், பசுமலையும், பன்றி மலையும் மட்டும் அழியாமல் இருந்தன.

கடல்வெள்ளம் வற்றிய பிறகு உலகம் மீண்டும் சிவபெருமானால் படைக்கப்பட்டது.  தமிழ் வேந்தர் மூவரும் சந்திரன் சூரியன் அக்கினி என்னும் மூவர் குலத்தினின்றும் இறைவனால் படைக்கப்பட்டனர்.
சந்திர குலத்தில் தோன்றிய  ‘வங்கிய சேகர பாண்டியன்’ என்பவன் சோமசுந்தரக் கடவுளின் திருக்கோயிலைச் சுற்றி ஒரு சிறு நகரத்தை அமைத்து நீதி வழுவாமல் அரசாண்டான்.  இந்த நகரமே இன்றைய மதுரை நகரமாகும்.

பாண்டியர் ஆட்சிக்குப் பிறகு, நாயக்கர் ஆட்சி, வெள்ளையன் ஆட்சி முடிந்து, இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர், பண்டைய ஆலவாய் நகரைக் கண்டறிந்து தொல்லியல் துறையில் அகழாய்வுகள் செய்துவருகின்றனர்.
இந்த அகழாய்வில்தான் பண்டைய வராக முத்திரை உடைய சூதுபவளம் கிடைக்கப் பெற்றுள்ளது.

தமிழரின் தொன்மை போற்றுவோம்.
மாமதுரை போற்றுவோம்.
தொல்லியலாளர் போற்றுவோம்.


அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
ஆவணி 15 (01.09.2019) ஞாயிற்றுக் கிழமை


நன்றி - படம், தினமலர்.
பார்வை -
1) தினமலர் செய்தி https://www.dinamalar.com/news_detail.asp?id=2356972&fbclid=IwAR1VISgDBzbFai7nhiBsT-wC4vC2VjPJyFe3Ct0Wvp2X2aARnW60W7deRXY
2) திருவிளையாடல் புராணம்  45ஆவது படலம் - பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம்,
3) திருவிளையாடல் புராணம் 46ஆவது படலம் - பன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம்

வராகம் கேழல் என்ற சொற்கள் இடம் பெற்றுள்ள பாடல்களின் தொகுப்பு
2219.
பல் வகைக் சாதி உள்ள பன்றியில் கணங்கள் எல்லாம்
வெல் படைத் தறுங்கண் சேனை வீரராய் முன்பு செல்லச்
செல் எனத் தெழித்துச் செம் கண் தீயுக மானம் என்னும்
மல்லர் வாம் புரவி மேல் கொண்டு எழுந்தனன் வராகவீரன்.

2236.
மண்ணில் குறித்து வலிக்கண்டு வராக வேந்தை 
எண்ணித் தலையில் புடைத்தான் கை இருப்புத் தண்டால்
புண்ணில் படு செம் புனல் ஆறு புடவி போர்ப்ப
விண்ணில் புகுந்தான் சுடர் கீறி விமான மேலால்.

2266.
வந்து இறைஞ்சிய வராக மா மைந்தரை நேர் கண்டு
அந்தம் இல் களிப்பு அடைந்து வேந்து அமைச்சியல் கிழமை
தந்து வேறு பல் வரிசையும் தக்க வா நல்கிக்
கந்து சீறிய கடகரிக் கைதவன் பின்னர்.

2332.
தேன் இழி குதலைத் தீம் சொல் சேல் நெடும் கண்ணி கோயில்
வன் இழி விமானம் பொன் தாமரை விளையாட்டின் வந்த
கான் இழி இடபக் குன்றம் கரிவரை நாகக் குன்றம்
ஆன் இழி வரை வராக வரை முதல் அழிவு இலாத.

கேழல் என்ற சொல் உள்ள பாடல்
2227.
தூங்கு இருள் வறுவாய்ச் சிங்கம் இரண்டு உறை துறையின் மாடோர்
ஆங்கு இரு மருப்புக் கேழல் வந்து நீர் பருகி மீளும்
வீங்கு இருள் உடல் கார் எனும் ஒன்று உறை துறையில் வீரத்து
ஆங்கு இரு மடங்கல் நீர்க்குத் தலைப்பட அஞ்சும் அன்றே.


Thursday, 29 August 2019

கீழடி (ஆலவாய் என்ற மதுரை) அழிந்தது எவ்வாறு?

கீழடி (குலசேகரபாண்டியன் ஆண்ட 
ஆலவாய் என்ற மதுரை) 
அழிந்தது எவ்வாறு?

கழிவு நீர் குழாயிடம் கேளுங்கள், அது சொல்லும்.



கீழடி அருகே தொல்லியல்துறையினரால் அகழாய்வு செய்யப்பட்டு வரும் இந்த ஊரின் பெயர் மதுரை என்றும்,  இப்போதுள்ள மதுரை நகரம் உருவாக்கப்பெற்ற பின்னர்  இந்த நகரில் இருந்தோர் அனைவரும் இந்த ஊரைக் காலிசெய்துவிட்டுப் புதிதாக நிருமானிக்கப் பெற்ற இன்றைய மதுரைநகருக்குக் குடிபெயர்ந்து சென்றனர் என்றும் திருவிளையாடல் புராணம் குறிப்பிடுகிறது.

“வங்கக் கடல்வெள்ளத்தால், அதாவது கடல்கோளால் (பெருஞ் சுனாமியினால்) இந்த மதுரை மாநகரம் அழிந்தது” என்கிறது திருவிளையாடற் புராணம்.   ஆனால் இந்த நகரத்திற்குக் கிழக்கே சுமார் 100 கி.மீ. தொலைவில் வங்கக் கடல் உள்ளது.  எனவே “இவ்வளவு பெருந்தொலைவு கடலானது தரையைக் கடந்து வந்து இந்த நகரை அழித்திருக்க வாய்ப்பு இல்லை” என்று அறிஞர் பலரும் கூறுகின்றனர்.
சில அறிஞர்கள் வைகை ஆற்றுப் பெருக்கால் அழிந்திருக்கலாம் என்று கருத்துத் தெரிவிக்கின்றனர்.

அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தப் பண்டைய மதுரை மாநகரம் எவ்வாறு அழிந்தது? என்பதே நம் முன் நிற்கும் கேள்வி.
புராணம் கூறுவது உண்மையா? அறிஞர்களின் கருத்து உண்மையா?
உண்மையில் நடந்தது என்ன எனக் கண்டறிய ஏதேனும் வழிவகை உள்ளதா?
உள்ளது.

புதைந்துள்ள இந்த நகரத்தில் கண்டுபிடிக்கப் பெற்றுள்ள கழிவுநீர்க் குழாயின் சிதைந்த  பாகங்கள் எந்தத் திசையில் கிடக்கின்றன என்பதைக் கொண்டு, இந்த நகரம் கடல்கோளால் அழிந்ததா? அல்லது வைகை ஆற்று வெள்ளத்தால் அழிந்ததா? என்று எளிதில் கண்டறிந்து விடலாம்.
புதைந்துள்ள நகருக்குக் கிழக்கே வங்கக்கடல் உள்ளது. வைகை ஆறு மேற்கில் இருந்து கிழக்காக ஓடுகிறது. 

எனவே கண்டுபிடிக்கப் பெற்றுள்ள கழிவூநீர்க்குழாய் அதனுடைய இருப்பிடத்திற்கு மேற்குத்திசையில் கண்டறியப்பட்டிருந்தால்,  இந்த நகரம் கிழக்கே யிருந்து வந்த கடல்வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு மேற்கே கிடக்கிறது என்பதை உறுதி செய்யலாம்.
மாறாக, இந்தக் கழிவுநீர்க் குழாயானது அதனுடைய இருப்பிடத்திற்குக்  கிழக்குத் திசையில் கண்டறியப்பட்டால்,  இந்த நகரமானது மேற்கிலிருந்து கிழக்காகப் பாய்ந்து வந்த வைகை ஆற்று வெள்ளத்தால் அழிந்துள்ளது எனக் கண்டறிய முடியும்.

“புதையுண்டுள்ள இந் நகரம் எவ்வாறு அழிந்தது?” என்று இந்தக் கழிவூநீர்க் குழாயிடம் கேளுங்கள், அது சொல்லும் இந்தத் தொன்மையான ஆலவாய் நகரம் எப்படி அழிந்தது என்று !

அன்பன்
காசீசீர், முனைவர், நா.ரா.கி.காளைராசன்
ஆவணி 12 (29.08.2019) விழாயன் கிழமை

பார்வை  - திஇந்து நாளிதழ் செய்தி.
திருப்புவனம்  - சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணில் செய்யப்பட்ட கழிவு நீர் குழாய் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே கழிவு நீர் செல்ல தமிழர்கள் குழாய் வசதி ஏற்படுத்தியிருப்பது தொல்லியல் ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.  கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு ஜூன் 13-ம் தேதி முதல் நடைபெறு கிறது. முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு, நீதி ஆகியோரது நிலங்களில் 30 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.  இதுவரை மணிகள், அணிகலன் கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்பு பொருட்கள், செப்புக் காசுகள், உணவு குவளை, தண்ணீர் மக் உட்பட 700-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள் ளன. மேலும் அதிகளவில் சுவர் களும் கிடைத்தன.  2 தினங்களுக்கு முன் முரு கேசன் என்பவரது நிலத்தில் செங்கற் களால் கட்டப்பட்ட குளியல் தொட்டி கண்டெடுக்கப்பட்டது. நேற்று முன் தினம் நீதி என்பவரது நிலத்தில் வடிகால் சுவர் கண்டுபிடிக்கப் பட்டது.
மேலும் அவரது நிலத்தில் நேற்று சுடுமண்ணில் செய்யப்பட்ட கழிவு நீர் குழாய் கண்டுபிடிக்கப்பட்டது.
https://static.hindutamil.in/hindu/uploads/news/2019/08/29/large/513341.jpg
இதன் மூலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே கழிவு நீர் செல்ல தமிழர்கள் குழாய் வசதி ஏற்படுத்தியிருப்பது தெரியவந்தது.
https://www.hindutamil.in/news/tamilnadu/513341-discovery-of-underground-hot-tub-1.html