Showing posts with label நகர நாகரிகம். Show all posts
Showing posts with label நகர நாகரிகம். Show all posts

Monday, 7 October 2019

கீழடி அல்ல, இது சங்கத்தமிழரின் கூடல் மாநகரம்

கீழடி அல்ல, 
இது கூடல் ஆலவாய் என்ற 
சங்கத்தமிழ் மதுரை மாநகரம் ஆகும்

கீழடி அருகே தொல்லியலாளர் தொன்மையான நகரநாகரிகத்தைத் தோண்டிக் கண்டறிந்துள்ளனர்.  புதையுண்டுள்ள இந்த நகரமானது தற்போதுள்ள கீழடி என்ற ஊரின் அருகே உள்ளது.  இக் காரணத்தால், இந்தத் தொன்மையான நகரத்தையும் கீழடி என்றே அனைவரும் குறிப்பிட்டுப் பேசியும் எழுதியும் வருகின்றனர்.  ஆனால் புதையுண்டுள்ள இந்த நகரத்தின் பெயர் கூடல் என்றும் ஆலவாய் என்றும் அழைக்கப் பெற்ற பண்டைய மதுரை ஆகும். 

பண்டைய பாண்டியரின்  தலைநகரம் மதுரை.   மதுரையில் தமிழ்ச் சங்கம் வைத்துத் தமிழாய்ந்துள்ளனர்.  மதுரைக்கு எத்தனையோ பெயர்கள் உள்ளன.  அவற்றில் ஆலவாய், கூடல், மதுரை என்ற மூன்று பெயர்களே சிறப்புப் பெற்றுள்ளன.


(1) கபாடபுரம். இது தொல்காப்பியருக்கும் முந்திய அகத்தியர் காலத்தது.  இது கடல்கோளால் அழிந்தது.
(2) ஆலவாய் என்பது முதல் மதுரையாகும்.  இதுவும் கடல்கோளால் அழிந்தது என்கிறது திருவிளையாடற் புராணம்.
(3) கூடல் என்பது இரண்டாவது மதுரையாகும்.  இதுவும் கடல்கோளால் அழிந்தது என்கிறன திருவிளையாடற் புராணமும் திருஞானசம்பந்தரின் தேவாரமும்.
(4) மதுரை என்பது மூன்றாவது மதுரையாகும்.  இது பண்டைய ஆலவாய் என்ற முதல்மதுரை இருந்த அதே இடத்திலேயே புதிதாக உருவாக்கப் பெற்ற நகரமாகும்.
இதுவே இன்றைய மதுரை மாநகரமாகும் என்கிறது திருவிளையாடற் புராணம்.



புதையுண்டுள்ள இந்தத் தொன்மையான கூடல் நகரைச் சங்கத் தமிழ்ப்பாடல்களும் பக்திஇலக்கியப் பாடல்களும் வெகுவாக விவரித்து எழுதியுள்ளன.
புதையுண்டுள்ள இந்தத் தொன்மையான நகரமே முத்தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவன் நக்கீரன் வாழ்ந்த கூடல் மாநகரமாகும்.
இதுவே செண்பக பாண்டியன் சங்கம் கூட்டித் தமிழாய்ந்த தமிழ்கூடல் நகரமாகும்.
இதுவே செழியன் பாண்டியனின் தலைநகராகும்.
இதுவே கண்ணகி எரித்த கூடல் என்ற மதுரை ஆகும்.


கடல்வாய்ச் சென்ற ஆலவாய் போற்றுவோம்.
சங்கம் வளர்த் கூடல் போற்றுவோம்.
மதுரை மாநகர் போற்றுவோம்.
தொல்லியலாளர் போற்றுவோம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
புரட்டாசி 21 (08.10.2019)  செவ்வாய் கிழமை.
-------------------------------------------------------------------

கற்றவை - 

1) மதுரை என்ற சொல் இடம் பெற்றுள்ள சங்கப்பாடல்களின் தொகுப்பு

மிக்கு புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை/சினை தலைமணந்த சுரும்பு படு செம் தீ - மது 699,700
இடை நெறி தாக்கு_உற்றது ஏய்ப்ப அடல் மதுரை/ஆடற்கு நீர் அமைந்தது யாறு - பரி 11/48,49
வந்து மதுரை மதில் பொரூஉம் வான் மலர் தாஅய் - பரி 12/9
குன்றுதல் உண்டோ மதுரை கொடி தேரான் - பரி 31/3
பொய் ஆதல் உண்டோ மதுரை புனை தேரான் - பரி 32/3
கோத்தை உண்டாமோ மதுரை கொடி தேரான் - பரி 33/3
மதுரை பெரு முற்றம் போல நின் மெய் கண் - கலி 96/23
மகிழ் நனை மறுகின் மதுரையும் வறிதே அதாஅன்று - சிறு 67
மாட மதுரையும் தருகுவன் எல்லாம் - புறம் 32/5

2) கூடல் என்ற சொல் இடம்பெற்றுள்ள சங்கப்பாடல் வரிகளின் தொகுப்பு.

மாடம் மலி மறுகின் கூடல் குட வயின் - திரு 71
மாடம் பிறங்கிய மலி புகழ் கூடல்/நாள்_அங்காடி நனம் தலை கம்பலை - மது 429,430
பெரும் பெயர் கூடல் அன்ன நின் - நற் 39/10
பொன் தேர் செழியன் கூடல் ஆங்கண் - நற் 298/9
மூன்று உடன் கூடிய கூடல் அனையை - பதி 50/7
குன்றத்தான் கூடல் வரவு - பரி 8/28
குன்றம் உடைத்த ஒளிர் வேலோய் கூடல்/மன்றல் கலந்த மணி முரசின் ஆர்ப்பு எழ - பரி 8/29,30
யாம் வேண்டும் வையை புனல் எதிர்கொள் கூடல்/ஆங்க அணி நிலை மாடத்து அணி நின்ற பாங்காம் - பரி 10/40,41
மதி மாலை மால் இருள் கால்சீப்ப கூடல்/வதி மாலை மாறும் தொழிலான் புது மாலை - பரி 10/112,113
வருந்தாது வரும் புனல் விருந்து அயர் கூடல்/அரும் கறை அறை இசை வயிரியர் உரிமை - பரி 10/129,130
ஆடல் தலைத்தலை சிறப்ப கூடல்/உரைதர வந்தன்று வையை நீர் வையை - பரி 12/31,32
கூடலொடு பரங்குன்றின் இடை - பரி 17/23
கொய் உளை மான் தேர் கொடி தேரான் கூடற்கும்/கை ஊழ் தடுமாற்றம் நன்று - பரி 17/45,46
புலத்தினும் போரினும் போர் தோலா கூடல்/கலப்போடு இயைந்த இரவு தீர் எல்லை - பரி 19/8,9
குன்றொடு கூடல் இடை எல்லாம் ஒன்றுபு - பரி 19/15
கூடல் விழையும் தகைத்து தகை வையை - பரி 20/26
நெடு நீர் மலி புனல் நீள் மாட கூடல்/கடி மதில் பெய்யும் பொழுது - பரி 20/106,107
காமரு வையை சுடுகின்றே கூடல்/நீர் அணி கொண்டன்று வையை என விரும்பி - பரி 24/4,5
பொன் தேரான் தானும் பொலம் புரிசை கூடலும்/முற்று இன்று வையை துறை - பரி 24/26,27
பணிவு இல் உயர் சிறப்பின் பஞ்சவன் கூடல்/மணி எழில் மா மேனி முத்த முறுவல் - பரி 24/46,47
உரு கெழு கூடலவரொடு வையை - பரி 24/92
சேய் மாட கூடலும் செவ்வேள் பரங்குன்றம் - பரி 34/2
நெடு மாட கூடற்கு இயல்பு - பரி 35/6
புலம் பூத்து புகழ்பு ஆனா கூடலும் உள்ளார்-கொல் - கலி 27/12
ஆனா சீர் கூடலுள் அரும்பு அவிழ் நறு முல்லை - கலி 30/11
நீள் உயர் கூடல் நெடும் கொடி எழவே - கலி 31/25
நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாட கூடலார்/புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுது அன்றோ - கலி 35/17,18
பூ தண் தார் புலர் சாந்தின் தென்னவன் உயர் கூடல்/தேம் பாய அவிழ் நீலத்து அலர் வென்ற அமர் உண்கண் - கலி 57/8,9
கனவினால் சென்றேன் கலி கெழு கூடல்/வரை உறழ் நீள் மதில் வாய் சூழ்ந்த வையை - கலி 92/11,12
வாடா வேம்பின் வழுதி கூடல்/நாள்_அங்காடி நாறும் நறு நுதல் - அகம் 93/9,10
பொய்யா விழவின் கூடல் பறந்தலை - அகம் 116/14
கொடி நுடங்கு மறுகின் கூடல் குடாஅது - அகம் 149/14
பாடு பெறு சிறப்பின் கூடல் அன்ன நின் - அகம் 231/13
பொன் மலி நெடு நகர் கூடல் ஆடிய - அகம் 253/6
மலை புரை நெடு நகர் கூடல் நீடிய - அகம் 296/12
பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன் - அகம் 315/7
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண் - அகம் 346/20
தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே - புறம் 58/13
இரு பேர் யாற்ற ஒரு பெரும் கூடல்/விலங்கு இடு பெரு மரம் போல - புறம் 273/5,6
குண்டு நீர் வரைப்பின் கூடல் அன்ன - புறம் 347/6

3) கூடல் என்ற சொல் இடம்பெற்றுள்ள சிலப்பதிகாரம் பாடல் வரிகளின் தொகுப்பு.
கூடல் காவதம் கூறு_மின் நீர் என - சிலப்.மது 13/114
கார் கடல் ஒலியின் கலி கெழு கூடல்   ஆர்ப்பு ஒலி எதிர்கொள ஆர் அஞர் நீங்கி - சிலப்.மது 13/149,150
ஓங்கு உயர் கூடல் ஊர் துயில் எடுப்ப - சிலப்.மது 14/6
வருந்தாது ஏகி மன்னவன் கூடல்   பொருந்து உழி அறிந்து போது ஈங்கு என்றலும் - சிலப்.மது 14/60,61
கலி கெழு கூடல் செவ்வணி காட்ட - சிலப்.மது 14/95
கொண்டலொடு புகுந்து கோ_மகன் கூடல் வெம் கண் நெடு வேள் வில்_விழா காணும் - சிலப்.மது 14/110,111
மன்னவன் கூடல் மகிழ் துணை தழூஉம் - சிலப்.மது 14/116
கோடையொடு புகுந்து கூடல் ஆண்ட - சிலப்.மது 14/123
கூடல் மகளிர் கோலம் கொள்ளும் - சிலப்.மது 16/9
கூடல் மகளிர் ஆடல் தோற்றமும் - சிலப்.மது 16/131
வை வாளின் தப்பிய மன்னவன் கூடலில் தெய்வமும் உண்டு-கொல் தெய்வமும் உண்டு-கொல் - சிலப்.மது 19/58,59
கூடலான் கூடு ஆயினான் - சிலப்.மது 20/101
நல் தேரான் கூடல் நகர் - சிலப்.மது 21/57
தீ தரு வெம் கூடல் தெய்வ கடவுளரும் - சிலப்.மது 21/60
கலி கெழு கூடல் பலி பெறு பூத - சிலப்.மது 22/101
மா பெரும் கூடல் மதுராபதி என்பேன் - சிலப்.மது 23/22
நிலை கெழு கூடல் நீள் நெடு மறுகின் - சிலப்.மது 23/123
கோ_முறை நீங்க கொடி மாட கூடலை  தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடுகம் - சிலப்.வஞ்சி 24/111,112
கொங்கையான் கூடல் பதி சிதைத்து கோவேந்தை - சிலப்.வஞ்சி 29/112
கலி கெழு கூடல் கதழ் எரி மாண்ட - சிலப்.வஞ்சி 30/149
----------------------------------------


4) கூடல் ஆலவாய் - திருஞானசம்பந்தரின் பாடல் வரிகளின் தொகுப்பு

ஆடக மாடம் நெருங்கு கூடல் ஆலவாயின் கண் அமர்ந்த ஆறே - தேவா-சம்:65/4
அம் களக சுதை மாட கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே - தேவா-சம்:66/4
அண்ணலின் பாடல் எடுக்கும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே - தேவா-சம்:67/4
ஆவினில் ஐந்து உகந்து ஆட்டும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே - தேவா-சம்:68/4
அம்புதம் நால்களால் நீடும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே - தேவா-சம்:69/4
ஆகம் உடையவர் சேரும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே - தேவா-சம்:70/4
ஆவண வீதியில் ஆடும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே - தேவா-சம்:71/4
அலங்கல் நல்லார்கள் அமரும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே - தேவா-சம்:72/4
அணி கிளர் வேந்தர் புகுதும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே - தேவா-சம்:73/4
அடுக்கும் பெருமை சேர் மாட கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே - தேவா-சம்:74/4
அன்பு உடையானை அரனை கூடல் ஆலவாய் மேவியது என்-கொல் என்று - தேவா-சம்:75/1
மன வஞ்சர் மற்று ஓட முன் மாதர் ஆரும் மதி கூர் திரு கூடலில் ஆலவாயும் - தேவா-சம்:188
ஆடல் ஏற்றினான் கூடல் ஆலவாய் - தேவா-சம்:1018/1
கூடல் ஆலவாயிலாய் குலாயது என்ன கொள்கையே - தேவா-சம்:3350/4
கொட்டு இசைந்த ஆடலாய் கூடல் ஆலவாயிலாய் - தேவா-சம்:3351/3
குற்றம் நீ குணங்கள் நீ கூடல் ஆலவாயிலாய் - தேவா-சம்:3352/1
கோலம் ஆய நீள் மதிள் கூடல் ஆலவாயிலாய் - தேவா-சம்:3354/1
கொன்றை அம் முடியினாய் கூடல் ஆலவாயிலாய் - தேவா-சம்:3355/3
கோவண உடையினாய் கூடல் ஆலவாயிலாய் - தேவா-சம்:3358/2
கூற்று உதைத்த தாளினாய் கூடல் ஆலவாயிலாய் - தேவா-சம்:3359/3
கூடலர் ஆடலர் ஆகி நாளும் குழகர் பலி தேர்வார் - தேவா-சம்:3920/2
கூடல் ஆலவாய்_கோனை விடை கொண்டு - தேவா-சம்:3966/1

நன்றி - இங்கே பயன்படுத்துப்பெற்றுள்ள (புராணப்பாடல்கள் தவிர்த்த) தொடரடைவுகள் அனைத்தும் பேராசிரியர் முனைவர்.ப.பாண்டியராஜா அவர்களால்  எழுதப்பட்ட http://tamilconcordance.in கணினி நிரல்களின் மூலம் தொகுப்பெற்றவை. ஐயா அவர்களுக்கு நன்றி.

Friday, 4 October 2019

கீழடியை ஆண்ட கரடி

கூடலை (கீழடியை) ஆண்ட கரடி


சிவந்த செங்கற்களால் நீண்ட மதில்களையும் நெடிய பல கட்டிடங்களையும் கொண்டுள்ள இந்த நகரத்தைக் “கருப்புக் கரடி” ஒன்று அரசாண்டுள்ளதாம்.  நம்பும்படியாகவா உள்ளது? நம்பித்தான் ஆக வேண்டும்.  ஏனென்றால் இப்படிச் சொல்வது நானல்ல, முத்தமிழ்ச் சங்கப் புலவர் எருக்காட்டூர்த் தாய்ங் கண்ணனார்.  

திருப்பரங்குன்றத்திற்கும் திருப்பூவணத்திற்கும் இடையே கீழடி உள்ளது.  கீழடி அருகே தொல்லியலாளர் ஒரு பெரிய நகர நாகரிகத்தைத் தோண்டிக் கண்டறிந்து உலகு அறியச் செய்துள்ளனர்.  ஐயம் தெளிவுற அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்து, இந்தத் தொன்மையான நகர நாகரிகம் 2600 ஆண்டுகள் பழைமையானது என அரசு அறிக்கையும் வெளியிட்டுள்ளனர்.

கரையான் புற்றும் கரடியும் - சிறிய உருவத்தை உடையது கரையான்.  கரையானின் வாய் மிகவும் சிறியது.  இருப்பினும் ஆயிரக்கணக்கான கரையான்கள் ஒன்று சேர்ந்து அரும்பாடுபட்டு இரவுபகலாக உழைத்து, அவற்றின் மிகச் சிறிய வாயில் சிறிதுசிறிதாக மண்ணை எடுத்துச்  சிவந்த நிறத்தில் உயரமான புற்றை ஒன்றைக் கட்டிவிடும்.  இந்தப் புற்றினுள் உள்ளே உண்டக்கட்டிச் சோறு போன்று இருப்பிடத்தை அமைத்துக் கொண்டு அதில் முட்டையிட்டுக் குஞ்சு பொறித்துக் குடும்பம்போல் கூடி வாழும்.     இந்தச் சிவந்து உயர்ந்த கரையான் புற்றைக் கரிய நிறமுடைய கரடியானது தனது பெரிய கையில் உள்ள நீண்ட நகத்தினால் தோண்டி எடுத்து, உள்ளே உள்ள கரையான் புற்றுச் சோற்றையும் தின்று தீர்த்து விட்டது.

வெளைப்பூவும் வெள்ளைவாய்க் கரடியும் - கரையான் புற்றில் எப்படித் துளை உள்ளதோ அதேபோன்று துளை உடைய வெள்ளைநிறப் பூ உள்ளது.  கரையான் புற்றினுள்ளே உள்ள அறையில் சோறு இருப்பது போல், இந்தப் பூவின் துளையினுள்ளே உள்ள அறையில் தேன் நிறைந்து இருக்கும்.   கரையான் புற்றின் சோற்றைத் தின்றுதீர்த்தும் திருப்தி அடையாத இந்தக் கரிய கரடியானது, வான் உயர வளர்ந்திருக்கும் மரத்தின் மேலே ஏறி, இந்த வெள்ளைநிறப் பூவையும் பறித்து அதன் தேனைக் குடித்து மகிழ்ந்து இருக்கிறது.

செழியனும் கரடியும் - இந்தக் கரடி போன்றவனாம் செழியன்.  இவன் கரையான் போன்ற சிறுசிறு சிற்றரசர்கள் பெரிதும் முயன்று கட்டிய மண்  கோட்டைகளைத் தனது வலிமையான நகம்போன்ற வேல்படையால் அழித்து, அதனுள்ளே உள்ள செல்வதை எடுத்துச் சென்றுவிட்டான்.  ஆனாலும் இவனுக்குத் திருப்தி இல்லை.


சேரநாட்டில் முசிறி உள்ளது.  சுள்ளி என்றொரு அழகிய பெரிய ஆறு ஓடுகிறது.  அந்த ஆற்றில் வெண்மையான நுரைகள் அடித்துச் செல்லப்படுகின்றன.  அந்த நுரைகள் சிதறிப் போகுமாறு சிறந்த தொழில்நுட்பம் கொண்ட மரக்கப்பல்கள் செல்கின்றன.  அந்தக் கப்பல்களில் யவனர்கள் பண்டமாற்று முறையில் பொன்னைக் கொண்டுவது கொடுத்துவிட்டு கரியநிறத்தில் உள்ள மிளகை வாங்கிச் செல்கின்றனர்.  வணிகம் விறுவிறுப்பாக நடைபெறுவதால் எப்போதும் ஆட்களின் ஆரவாரம் மிகுந்துள்ளது இந்த முசிறி நகரம்.



கரையான் போன்ற சிற்றரசர்களை வென்றும் திருப்தி அடையாத கரடி போன்ற செழியன், யானை போன்ற முசிறியின் மீதும் படையெடுத்து வென்று அங்கிருந்த தங்கத்தால் ஆன பாவைச் சிலை ஒன்றையும் கவர்ந்து வந்து விட்டான்.

கூடலும் கரடியும் - கரிய கரடி போன்ற செழியனுடைய கொடி அசையும் தெருக்களையுடையது கூடல் நகரம்.  இந்தக் கூடல் மாநகருக்கு மேற்குப்புறத்தே  திருப்பரங்குன்றம் இருக்கிறது.  இந்தத் திருப்பரங் குன்றத்தில்  பல புள்ளிகளையுடைய மயிலின் வெற்றிக் கொடி உயர்த்து பறக்கிறது.


வருடத்திற்கு ஒருமுறை திருவிழா என்றால் விடுமுறை கொடுக்கலாம்.  வருடவிடுமுறை, மாதவிடுமுறை, வாரவிடுமுறை என்று எந்தவொரு விடுமுறைநாளும் இல்லாமல், இடையறாத திருவிழாக்களைக் கொண்டுள்ளது இந்தத் திருப்பரங்குன்றம்.   விடுமுறையே அளிக்காமல்  இந்த உயர்ந்த மலையில், நெடியோனாகிய முருகன் அருளுகிறான்.  அந்தத் திருப்பரங்குன்றின் மேலே உள்ளது குண்டு சுனை.  இங்கே வண்டினம் மொய்க்க இதழ் விரிந்த புதிய நீலப்பூவின் ஒத்த மலர்கள் இரண்டின் சேர்க்கையைப் போன்று, இரண்டுபேர் காதல் செய்கின்றனர்.
நெஞ்சமே!  நான் இந்தச் சிவந்த செங்கற்களை உடைய நீண்ட இரண்டை மதிலையும், நெடிய மாளிகைகளையும் உடைய இந்த இடத்திலிருந்து எனது முப்பாட்டன் முருகன் வீற்றிருக்கும் திருப்பரங்குன்றத்தைப் பார்த்து வணங்கி மகிழ்ந்திருப்பேன்.  இதைப் பிரிந்து யான் நின்னோடு வருவேனல்லேன். நீ போய் நின் வினையை முடித்து வாழ்வாயாக!
முப்பாட்டன் முருகனைப் போற்றுவோம்.  கூடல் என்ற மாமதுரையை ஆண்ட மன்னன் செழியனைப் போற்றுவோம். தொல்லியலாளர் போற்றவோம்.


அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
புரட்டாசி 18 (05.10.2019) சனிக்கிழமை.

நன்றி -  1)    https://ta.wikisource.org/wiki/பக்கம்:அகநானூறு-மணிமிடை_பவளம்-மூலமும்_உரையும்-2.pdf/81
2)    படங்கள் இணைத்தில் இருந்தவை.   அவற்றைப் பதிவு செய்தோருக்கு நன்றி.

கற்றது - 
1) அகம் 149.
எளிதாகப் பெற்றாலும் வாரேன்!
சிறுபுன் சிதலை சேண்முயன்று எடுத்த;
நெடுஞ்செம் புற்றத்து ஒடுங்கிரை முனையின்,
புல்லரை இருப்பைத் தொள்ளை வான்பூப்,
பெருங்கை எண்கின் இருங்கிளை கவரும்
அத்த நீள்இடைப் போகி, நன்றும் 5

அரிதுசெய் விழுப்பொருள் எளிதினிற் பெறினும்
வாரேன்- வாழி, என் நெஞ்சே!- சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க,
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் 10

வளம்கெழு முசிறி ஆர்ப்பெழ வளஇ,
அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய
நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்
கொடிநுடங்கு மறுகின் கூடற் குடாஅது,
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய, 15

ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து,
வண்டுபட நீடிய குண்டுசுனை நீலத்து
எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரிமதர் மழைக்கண் தெண்பனி கொளவே. 19                     
                                                         - எருக்காட்டூர் தாயங்கண்ணனார்  (அகம்-149)
2) https://kalairajan26.blogspot.com/2018/06/world-wide-big-corporate-tamils.html