Wednesday, 19 January 2022

127 சோகாப்பர் நாகாக்க

 


கி. காளைராசன் to thiruppuvanam

13 Mar 2019, 18:32:44


“நாக்குல சனி” என்பார்கள்.  நாவைக் காக்காவிட்டால் சோகத்தைக் காப்பார்கள் என்கிறார் திருவள்ளுவர்.

அறிந்தோ அறியாமலோ, தெரிந்தோ தெரியாமலோ குற்றமுடைய சொற்களைச் சொல்லி அதனால் துன்பப்படுகின்றனர்.

“யாகாவா ராயினும் நாகாக்க; காவாக்காற் 

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு ”

என்கிறது திருக்குறள் (127).  

ஒருமுறை குறள்வடிவில் இருந்த ஒரு முனிவரை ஏளனம் செய்த காரணத்தினால் , மூன்று தேவியருள்  ஒருவரான மகாலெட்சுமி  நேர்ந்த இழுக்குப் பற்றியும், அந்த இழுக்கு எவ்வாறு நீங்கியது என்பது பற்றியும் திருப்பூவணப் புராணத்தில் ஒரு கதை உள்ளது.

வைகுண்டத்திலே, பொன்மண்டபத்தில் சிங்காசனத்திலே, இலக்குமியுடன் திருமால் வீற்றிருக்கிறார்.  அவர் திருமுன்பு வித்தியாதரர் பாடினார். அரம்பை முதலாயினோர் ஆடினார். தேவர் முதலாயினோர் துதித்தனர்.

அதன்பின்னர், இலெட்சுமிதேவி திருவடிப் பணிவிடை செய்யத் திருமால் நித்திரை புரிந்தார். அப் பொழுது,  ஒன்னேமுக்கால் அடி உயரமுடைய வாலகில்லி என்ற குள்ளமான முனிவர் திருமாலைப் பார்க்க வந்தார்.

வந்தரை வாயில்காப்போர் எதிர்சென்று வணங்கி உபசரித்து ஆசனத்தில் அமரச் செய்தனர்.   வைகுண்டத்தின் உள்ளே போய்ச் சேடியர்களை அழைத்து முனிவர்கள் வரவைத் திருமாலுக்கு விண்ணப்பம் செய்தனர்.

அதனைச் சேடியர்கள் இலெட்சுமிதேவியிடம் தெரிவித்தனர்.  மலைபோன்ற தோள்களை உடைய மாபெரும் திருமேனியை உடைய திருமாலையே அனுதினமும் கண்பவள் இலெட்சுமிதேவி. 

மிகவும் குள்ள உருவமாய் இருந்த வாலகில்லி முனிவரின் உருவத்தைப் பார்த்ததும் இலக்குமிதேவி பெரிதும் நகையாடினள்.  இதனால் முனிவர் பெரிதும் வருந்தித் திருமாலைச் சந்திக்காமலேயே திரும்பிச் சென்றுவிட்டார்.

திருமால் நித்திரைநீங்கி எழுந்து நிகழ்ந்தவைகளை உணர்ந்து கொண்டார்.  இலக்குமியைப் பார்த்து, நீ முனிவரை அவமரியாதை செய்துவிட்டாய் என்று கூறிச் சபித்து விலக்கினர். 

திருமாலின் இந்தச் சாபத்தை எப்படி நீங்குவது எனப் பலவாறும் ஆராய்ந்து பார்த்தார்.  முனிவரின் உருவம் குள்ளமாய் இருப்பதைக் கேலி செய்தது, அறிந்து செய்த பாவம் ஆகும்.

அறிந்து செய்த பாவத்தை நீக்கக்கூடிய திருத்தலம் திருப்பூவணம் ஆகும்.  எனவே இலக்குமிதேவி திருப்பூவண்ம் சேர்ந்து தவஞ் செய்தாள்.

இலக்குமியை விலக்கிய பின்பு திருமால் பயந்து விரைந்து சென்று வாலகில்லி முனிவரைச் சந்தித்து “இலக்குமி செய்த தவறை மறந்து கருணை புரிய வேண்டும்” என்று வேண்டினார்.

அதற்கு முனிவரும் மனமிரங்கி, திருமாலே, 12 ஆண்டுகள் திருமகள் திருப்பூவணத்திலே தவம் செய்து முடித்தவுடன் அவளது பாவம் நீங்கிவிடும். நீ சென்று அவளை அழைத்து வந்து முன்போல் வைகுண்டத்தில் வாழ்வாயாக என்று அருளினார்கள். 

உடனே திருமால் மகிழ்ந்து, "முனிவரே, நீங்கள் என்னைக் காண வைகுண்டம் வந்த காரண யாது?" என்று கேட்டார்.

அதற்கு அம் முனிவர், முனிவர்களாகிய நாங்கள் செய்யும் வேள்வியைத் திருமாலாகிய நீங்கள் காத்தல் வேண்டும் என்றனர். 

அங்ஙனமே முனிவர்கள் வேள்வியைக் காத்து அருளினார்.

12 வருடங்கள் நடைபெற்ற வேள்வியும் திருமாலின் திருவருளாலே சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

வேள்வி முடிந்த பின்பு திருமாலும் திருப்பூவணம் சேர்ந்து இலக்குமி தேவியுடன் சேர்ந்து சென்று சிவலிங்கத்தைப் பூசித்தார்.  இதனால் திருப்பூவணத்தில் சுயம்புலிங்கத்தின் நெற்றியில் திருநாமம் போன்ற அடையாளம் காணப்படும்.  இதனை திரிசூல அடையாளம் என்று அப்பர் பெருமான் பாடியுள்ளார்.  இந்த அடையாளத்தை இன்றும் சிவலிங்கத்தில் காணலாம்.

திருப்பூவணத்தில் உள்ள சுயம்புலிங்கத்தைப் பூசித்ததனால் இலக்குமி அறிந்து செய்த பாவமும் அதனால் உண்டான சாபமும் நீங்கின.  

திருமாலும் இலக்குமிதேவியும் வைகுண்டஞ் சார்ந்து வாழ்ந்தனர். 

திருப்பூவணநாதருக்கு மேற்குத் திசையிலே, இரண்டம்பு செல்லுந்தூரத்திலே, திருமால் தம் பெயராலே ஒரு சிவலிங்கப் பிரதிட்டை செய்தனர். ஒரு தீர்த்தமுண்டாக்கினர். சித்திரை மாதத்திலே, ஆதிவாரத்திலே, அத்தீர்த்தத்திலே மூழ்கி விஷ்ணுலிங்கத்தை வழிபட்டோர் பாவநீங்கிப் பதமுத்தி பெறுவர்.

குற்றமில்லாத சொற்களைச் சொல்லிடவும், குற்றமுடைய  நமது சொற்களால் நமக்கு உண்டாகும் தீமைகளில் இருந்து விடுபடவும் திருப்பூவணம் சென்று நாமும் வழிபடுவோம்.  நல்வாழ்வு வாழ்வோம்.

https://thiruppuvanam-kalairajan.blogspot.com/2012/03/blog-post_8258.html  

அன்பன்

கி. காளைராசன்

குறள் 134 ஓத்து என்றால் என்ன பொருள்

 கி. காளைராசன் to mintamil

17 Mar 2019, 21:36:14


“மறப்பினும் ஓத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்

பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்”

(அதிகாரம்:ஒழுக்கமுடைமை குறள் எண்:134)


ஓத்து என்றால் ஓதுதல் அல்லது படித்தல் என்று பொருள்.

நினைவாற்றல் குறைவாக இருந்து மறந்துவிட்டாலும் பரவாயில்லை ஓத்துக் (படித்துக்) கொள்ளலாம்.  ஆனால் பிறப்பு ஒழுக்கம் குறைந்தால் பிறப்பு கெட்டுவிடும் என்கிறார் திருவள்ளுவர்.


“மறப்பினும் படித்துக் கொள்ளலாகும், பார்ப்பான்

பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்”

ஞாபகமறதியாகித் தேர்வைச் சரியாக எழுதமுடியாவிட்டாலும் பரவாயில்லை. மீண்டும் படித்துக் கொள்ளலாம்.

ஆனால் ஒழுக்கம் தவறிப் “பிட்“ அடித்தால் debar ஆகி மாணவனின் மாண்பு கெட்டு விடும் என்பது போன்ற அறிவுரையை இந்தக் குறள் வழங்குகிறது.

அன்பன்

கி. காளைராசன்

திருக்குறள் ஓலைச்சுவடி இணையத் தமிழ்ப்பல்கலைக்கழக நூலகத்தில் வாசிக்கக் கிடைக்கிறது.

http://www.tamilvu.org/library/suvadi/s210/html/s2100052.htm

---------------------------------------------------------

On Sun, 17 Mar 2019 at 20:56, செல்வன் <hol...@gmail.com> wrote:

ஓதாமல் ஒரு நாளும் இருக்கவேண்டாம்-> தேவாரம், திருவாசகம் முதலான நூல்களை ஓதுபவர்களை ஓதுவார் என அழைக்கும் வழக்கம் உண்டு.


ஓதுதல் என்பது பொதுவாக ஆன்மிகநூல்களை தினமும் கடவுள் முன் பாராயணம் செய்வதையே குறிக்கும்.


படிப்பதை குறிக்க "கற்றல், கற்பது" எனும் வார்த்தைகள் உன்டு


ஓதாமல் ஒரு நாளும் இருக்கவேண்டாம் என்பது தினமும் இறைநூல்களை ஓதுக, வழிபாடு செய்க எனும் பொருளில் வரும்.


அன்பன்

கி. காளைராசன்

Tuesday, 18 January 2022

ஊழி குறித்த திருவிளையாடல் புராணம்

ஞாலம் முடித்த ஊழி

(ஊழி குறித்த திருவிளையாடல் புராணம் 19 பாடல்களின் தொகுப்பு இது)


ஊழ் குறித்து ஓர் அதிகாரமே இருந்தாலும், ஊழி குறித்து ஒரேயொரு குறள் மட்டுமே உள்ளது. 

“ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு

ஆழி யெனப்படு வார் “

என்று ஊழியையும் ஆழியையும் தொடர்பு படுத்திக் குறள் கூறுகிறது.  திருக்குறள் போன்றே திருவிளையாடல் புராணமும் ஊழியையும் ஆழியையும் சேர்த்தே பாடுகிறது.


ஊழி குறித்த திருவிளையாடல் புராணம் 19 பாடல்களின் தொகுப்பு இது.

1) 202.

புரந்தர் ஆதி வானவர் பதம் போதுறை புத்தேள்

பரந்த வான் பதம் சக்கரப் படை உடைப் பகவன்

வரந்த வாதுவாழ் பதம் எலாம் நிலை கெட வரு நாள்

உரம் தவாது நின்று ஊழி தோறும் ஓங்கு அவ் ஓங்கல்.


2) 265.

அவ்வழிப் புறம்பு சூழ்ந்து கிடந்த ஆழி ஊழிப்

பௌவ நீர் என்ன ஓங்கப் பாணியால் அமைத்து வேணித்

தெய்வ நல் நீரைத் தூவிக் கலந்து மா தீர்த்தம்  ஆக்கிக்

கை வரை கபாலி நந்தி கணத்தினை நோக்கிக் கூறும்.


3) 625.

சலிக்கும் புரவித் தம் தேர் உடைத் தம் பிராட்டி

கலிக்கும் பல தூரியம் கைவரை தெய்வத் திண்தேர்

வலிக்கும் பரி மள்ளர் வழங்கு ஒலி வாங்கி நேரே

ஒலிக்கும் படி கிட்டினள் ஊழிதோர் ஓங்கு ஓங்கல்.


4) 630.

சூலம் கண் மழுப் படை தோமரம் நேமி பிண்டி

பாலங்கள் கழுக் கடை வாள் படை தண்டம் நாஞ்சில்

ஆலம் கவிழ் கின்ற அயில் படை வீசி ஊழிக்

காலம் கலிக்கும் கடல் போன்ற களமர் ஆர்ப்பு.


5) 709.

இடிக்கும் வான் உரு மேறுயர் நெடும் கொடி எகின  வெண் கொடி ஞாலம்

முடிக்கும் ஊழி நாள் உளர் கடும் கால் என மூச் செறி விடநாகம்

துடிக்க வாய் விடு முவண வண் கொடி முதல் சூழ்ந்து  சேவகம் செய்யும்

கொடிக் குழாத்தின் உள் கொடி அரசாய் விடைக் கொடி புடை பெயர்ந்து ஆட.


6) 1037.

பொரும் கடல் வேந்தனைக் கூவிப் பொன் என

இரும் கடல் உடுத்த பார் ஏழும் ஊழிநாள்

ஒருங்கு அடு வெள்ளம் ஒத்து உருத்துப் போய் வளைந்து

அரும் கடி மதுரையை அழித்தியால் என்றான்.


7) 1039.

கொதித்தலைக் கரங்கள் அண்ட கூடம் எங்கும் ஊடு போய்

அதிர்த்து அலைக்க ஊழி நாளில் ஆர்த்து அலைக்கும் நீத்தம் ஆய்

மதித் தலத்தை எட்டி முட்டி வரும் ஓர் அஞ்சனப் பொருப்பு

உதித்தல் ஒத்து மண்ணும் விண்ணும் உட்க வந்தது உத்தியே.


8) 1154.

ஐம் பெரும் பூத நிலை திரிந்து ஈர் ஏழ் அடுக்கிய உலகொடு மயன் மால்

உம்பர் வான் பதமும் உதித்தவாறு ஒடுங்க உருத்தது  ஓர் ஊழி வந்து எய்தச்

செம் பொருள் மறையும் ஒடுங்கிய வழி நாள் செம் சுடர் கடவுள் முன் மலரும்

வம்பு அவிழ் கமலம் என அரன் திருமுன் மலர்ந்ததால் அகிலமும் மாதோ.


9) 1301.

சூலமோடு அழல் ஏந்தும் சொக்கர் திரு விளையாட்டின்

சீலமோ நாம் இழைத்த தீ வினையின் திறம் இது வோ

ஆலமோ உலகம் எலாம் அழிய வரும் பேர் ஊழிக்

காலமோ எனக் கலங்கிக் கடி நகரம் பனிப்பு எய்த.


10) 1313.

ஊழிநாள் வெடிக்கும் அண்ட கடாகத்தின் ஒலிபோல் ஆர்த்துப்

பாழிவான் உருமு வீழப் பணாடவி மணிகள் சிந்தி

ஆழி நீர் ஞாலம் தாங்கும் அரா உடல் நெளிய திக்கில்

சூழி மால் யானை நின்ற நிலை கெடத் துணுக்கம் கொள்ள.


11) 1608.

அத்து அழன்று எரி குண்டம் நின்றும் அகன் பிலத்து எழுவான் என

பத்து துஞ்சிருள் வாயும் வாய் இருபாலும் வலிய பகிர் மதிக்கு

ஒத்தும் நஞ்சு இனம் ஒழுகு பற்களும் ஊழி ஆரல்  விழிகளும்

வைத்து அசைந்து ஒரு வெற்பு வந்து என வந்துளான் ஒரு தானவன்.


12) 1761.

மின் அலங்கள் வாகை வேல் விழுப் பெரும் குலத்தினில்

தென்னவன் தன் ஆணை நேமி திசை எலாம் உருட்டும் நாள்

முன்னை வைகல் ஊழி தோறும் ஒங்கும் மொய்வரைக்கணே

மன்னு தண் பராரை ஆல நிழல் மருங்கு மறை முதல்.


13) 1844.

விளை மத ஊற்று மாறி வெகுளியும் செருக்கும் மாறித்

துளை உடைக் கைமான் தூங்கு நடைய வாய்ச் சாம்பிச் சோர்ந்த

உளர் தரு ஊழிக் காலினோடும் ஆம் புரவி எய்த்துத்

தளர் நடை உடைய வாகித் தைவரும் தென்றல் போன்ற.


14) 2074.

வாழிய உலகின் வானோர் மனிதர் புள் விலங்கு மற்றும்

ஆழிய கரணம் எல்லாம் அசைவு அற அடங்க ஐயன்

ஏழ் இசை மயமே ஆகி இருந்தன உணர்ந்தோர் உள்ளம்

ஊழியில் ஒருவன் தாள் புக்கு ஒடுங்கிய தன்மை ஒத்த.


15) 2637.

அறைந்தவித் தெய்வத்து ஆன அனைத்தும் ஓர் ஊழிக் காலத்து

இறந்த நம் தோழன் கண்ட இலிங்கமாம் அதனால் இங்கே

உறைந்தனம் உறைதலாலே உத்தர ஆலவாய் ஆய்ச்

சிறந்திடத் தகுவது இன்று முதல் இந்தத் தெய்வத் தானம்.


16) 2977.

கங்கைப் புனல் வடிவாகிய கவ்வைத் திரை வைகைச்

சங்கச்சரி அறல் ஆம் மலர்த் தார் ஓதியை நோக்கா

வங்கக் கடல் பேர் ஊழியில் வருமாறு என எவரும்

இங்கு அற்புதம் அடையப் பெருக என்றான் அருள் குன்றான்.


17) 3082.

வழுதியால் விடுக்கப் பட்ட வாதவூர் முனிகள் தம்மைப்

பழுது இலாப் பாடல் கொள்வார் பதி பல பணிந்து போந்து

முழுது உணர் மறையோர் வேள்விப் புகை அண்ட முடி கீண்டு ஊழி

எழு வட வரை போல் தோன்றும் எழில் தில்லை மூதூர் சேர்ந்தார்.


18) 3123.

ஏழ் இசை மறை வல்லாளர் சிவபாத இதயர் என்னக்

காழியில் ஒருவர் உள்ளார் கார் அமண் கங்குல சீப்ப

ஆழியில் இரவி என்ன ஒரு மகவு அளித்தி என்னா

ஊழியில் ஒருவன் தாளை உள்கி நோற்று ஒழுகி நின்றார்.


19) 3325.

அடி முடி விலங்கும் புள்ளும் அளந்திடாது அண்டம் கீண்டு

நெடுகிய நெருப்பு நின்ற நிலை இது முள்வாய்க் கங்க

வடிவு எடுத்து இருவர் நோற்கும் மலை இது பல்வேறு ஊழி

இடை உற முன்னும் பின்னும் இருக்கும் இக் குன்றைக் காண்மின்.


‘ஊழிற் பெருவலி யாவுள‘ :)

அன்பன்

காசிஸ்ரீ நா.ரா.கி. காளைராசன்

சித்திரை 31 (14.05.2017) ஞாயிற்றுக் கிழமை.

Saturday, 9 October 2021

பார்ப்பார் அந்தணர் ஐயர்

ஒரே பரிபாடலில் பார்ப்பார் அந்தணர் ஐயர் மூவரும் இடம் பெற்றுள்ளனர்.

பார்ப்பார் அந்தணர் ஐயர்  என்போர் வேறுவேறு பிரிவினரா ?


பரிபாடல்

.....

எனவாங்கு,

ஈ பாய் அடு நறா கொண்டது இ யாறு என

பார்ப்பார் ஒழிந்தார் படிவு

மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று என்று 60

அந்தணர் தோயலர் ஆறு

வையை தேம் மேவ வழுவழுப்பு_உற்று என

ஐயர் வாய்பூசுறார் ஆறு

விரைபு இரை விரை துறை கரை அழிபு இழிபு ஊர ஊர்தரும் புனல்

கரையொடு கடல் இடை வரையொடு கடல் இடை நிரை_நிரை நீர் தரு நுரை ...


வாய் கழுவார் எனவாங்கு -  ஈப்பாய் அடுநறாக் கொண்டதிவ் யாறெனப் பார்ப்பார் ஒழிந்தார் படிவு: மைந்தர் மகளிர் மணவிரை தூவிற்றென்று Ꮾ0 அந்தணர் தோயலர் ஆறு, - வையைதே மேவ வழுவழுப்பு உற்றென ஐயர்வாய் பூசுறார் ஆறு: நீர் விளையாட்டிற்குக் களிப்போடு வந்த மக்கள் பலரும் மதுவை யுண்டு'களித்தனர். எஞ்சிய மதுவை அவர்கள் ஆற்று நீரில் ஊற்றினர். இவ்வாறு மதுக்கலந்து வரும் நீரிலே வண்டினம் மொய்த்தது. அதனால், ஈக்கள் மொய்க்கும் அடப்பெற்ற நறவினை இவ்வாறு கொண்டுள்ளது' எனக் கூறியவராக, அதன்பால் நீராட வந்த பார்ப்பார்கள் நீராடாதேயே தம் வீடு சென்றனர்.


பார்ப்பன், பார்ப்பான், பார்ப்பார் சொல்கள் அடங்கிய சங்கப்பாடல்வரிகளின் தொகுப்பு  

நன்றி - தொகுப்பு உதவி http://tamilconcordance.in/

பார்ப்பன மகளிர் சாரல் புறத்து அணிய - நற் 321/4

பார்ப்பன மகனே பார்ப்பன மகனே - குறு 156/1

பார்ப்பன மகனே பார்ப்பன மகனே - குறு 156/1

படிவ உண்டி பார்ப்பன மகனே - குறு 156/4

பார்ப்பன குறு_மக போல தாமும் - ஐங் 202/2

ஆவும் ஆன் இயல் பார்ப்பன மாக்களும் - புறம் 9/1


பகைவர் புல் ஆர்க பார்ப்பார் ஓதுக - ஐங் 4/2

பார்ப்பார் ஒழிந்தார் படிவு - பரி 24/59

பார்ப்பார் தப்பிய கொடுமையோர்க்கும் - புறம் 34/3

பார்ப்பார் நோவன செய்யலர் மற்று இது - புறம் 43/14


பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையே - பதி 63/1

ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ம் கை நிறைய - புறம் 367/4

பனி பொழி சாரலும் பார்ப்பாரும்/துனியல் மலர் உண்கண் சொல் வேறு நாற்றம் - பரி  8/52,53


கல் தோய்த்து உடுத்த படிவ பார்ப்பான்/முக்கோல் அசை நிலை கடுப்ப நல் போர் - முல் 37,38

பாகம் உண்ட பைம் கண் பார்ப்பான்/உமையொடு புணர்ந்து காம வதுவையுள் - பரி  5/27,28

முது பார்ப்பான் அஞ்சினன் ஆதல் அறிந்து யான் எஞ்சாது - கலி 65/20

வாழ்க்கை அது ஆக கொண்ட முது பார்ப்பான்/வீழ்க்கை பெரும் கரும்_கூத்து - கலி  65/28,29

வேளா பார்ப்பான் வாள் அரம் துமித்த - அகம் 24/1

தூது ஒய் பார்ப்பான் மடி வெள் ஓலை - அகம் 337/7

உயவல் ஊர்தி பயலை பார்ப்பான்/எல்லி வந்து நில்லாது புக்கு - புறம் 305/2,3

சேரியின் போகா முட முதிர் பார்ப்பானை/தோழி நீ போற்றுதி என்றி அவன் ஆங்கே - கலி  65/8,9

----------------------------------

அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே ஒரு முகம் - திரு 96

அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை - திரு 263

அந்தணர் அருகா அரும் கடி வியல் நகர் - சிறு 187

கேள்வி அந்தணர் அரும் கடன் இறுத்த - பெரும் 315

குன்று குயின்று அன்ன அந்தணர் பள்ளியும் - மது 474

ஓதல் அந்தணர் வேதம் பாட - மது 656

அந்தி அந்தணர் அயர கானவர் - குறி 225

அறம் புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி - பதி 24/8

அந்தணர் அரும் கலம் ஏற்ப நீர் பட்டு - பதி 64/5

நா வல் அந்தணர் அரு மறை பொருளே - பரி 1/13

விறல் மிகு விழு சீர் அந்தணர் காக்கும் - பரி 1/40

நா வல் அந்தணர் அரு மறை பொருளே - பரி 2/57

அந்தணர் காணும் வரவு - பரி 2/68

நீ என பொழியுமால் அந்தணர் அரு மறை - பரி 3/14

நின் ஓர் அன் ஓர் அந்தணர் அருமறை - பரி 4/65

புலம் புரி அந்தணர் கலங்கினர் மருண்டு - பரி 6/45

விரி நூல் அந்தணர் விழவு தொடங்க - பரி 11/78

புரிநூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப - பரி 11/79

ஒரு பெயர் அந்தணர் அறன் அமர்ந்தோயே - பரி 14/28

திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி - பரி 23/20

அந்தணர் தோயலர் ஆறு - பரி 24/61

கேள்வி அந்தணர் கடவும் - கலி 36/25

அற வினை இன்புறூஉம் அந்தணர் இருவரும் - கலி 99/2

அந்தி அந்தணர் எதிர்கொள அயர்ந்து - கலி 119/12

முக்கோல் கொள் அந்தணர் முது மொழி நினைவார் போல் - கலி 126/4

மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே - புறம் 1/6

அந்தி அந்தணர் அரும் கடன் இறுக்கும் - புறம் 2/22

அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த - புறம் 397/20

அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும் - சிறு 204

ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து - கலி 1/1

கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு/அரும் கலம் நீரொடு சிதறி பெருந்தகை - புறம் 361/4,5

அழல் புறந்தரூஉம் அந்தணரதுவே/வீயா திருவின் விறல் கெழு தானை - புறம் 122/3,4

ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ - பரி 5/22

அங்கி உயர் நிற்ப அந்தணன் பங்குவின் - பரி 11/7

இமைய வில் வாங்கிய ஈர்ம் சடை அந்தணன்/உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக - கலி  38/1,2

ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல் - கலி 69/5

அறிவு உடை அந்தணன் அவளை காட்டு என்றானோ - கலி 72/18

யாழ் கெழு மணி மிடற்று அந்தணன்/தா இல் தாள் நிழல் தவிர்ந்தன்றால் உலகே - அகம் 0/15,16

யானே பரிசிலன் மன்னும் அந்தணன் நீயே - புறம் 200/13

அந்தணன் புலவன் கொண்டுவந்தனனே - புறம் 201/7

ஆ குரல் காண்பின் அந்தணாளர்/நான்மறை குறித்தன்று அருள் ஆகாமையின் - புறம் 362/8,9

புலன் அழுக்கு அற்ற அந்தணாளன்/இரந்து செல் மாக்கட்கு இனி இடன் இன்றி - புறம் 126/11,12

சேண் புலம் முன்னிய அசை நடை அந்தணிர்/நும் ஒன்று இரந்தனென் மொழிவல் எம் ஊர் - ஐங் 384/1,2

திறம் புரி கொள்கை அந்தணீர் தொழுவல் என்று - ஐங் 387/2

குறிப்பு ஏவல் செயல் மாலை கொளை நடை அந்தணீர்/வெவ் இடை செலல் மாலை ஒழுக்கத்தீர் இ இடை - கலி  9/4,5

---------------------------------------------------

ஐயர் (14)
இரும் கல் அடுக்கத்து என் ஐயர் உழுத - நற் 122/1
கல்லா கதவர் தன் ஐயர் ஆகவும் - நற் 127/5
பன் மீன் வேட்டத்து என் ஐயர் திமிலே - குறு 123/5
புன்கண் மட மான் நேர்பட தன் ஐயர்/சிலை மாண் கடு விசை கலை நிறத்து அழுத்தி - குறு 272/4,5
கண மா தொலைச்சி தன் ஐயர் தந்த - ஐங் 365/1
உயர்_நிலை_உலகத்து ஐயர் இன்புறுத்தினை - பதி 70/19
ஐயர் வாய்பூசுறார் ஆறு - பரி 24/63
ஐயர் அவிர் அழல் எடுப்ப அரோ என் - கலி 130/9
மால் இருள் நடுநாள் போகி தன் ஐயர்/காலை தந்த கணை கோட்டு வாளைக்கு - அகம் 126/7,8
பன் மீன் கூட்டம் என் ஐயர் காட்டிய - அகம் 240/6
அன்னை அல்லல் தாங்கி நின் ஐயர்/புலி மருள் செம்மல் நோக்கி - அகம் 259/16,17
இரும் கல் அடுக்கத்து என் ஐயர் உழுத - அகம் 302/9
வருதல் ஆனார் வேந்தர் தன் ஐயர்/பொரு சமம் கடந்த உரு கெழு நெடு வேல் - புறம் 337/16,17
எண்ணா மையலன் தந்தை தன் ஐயர்/கண் ஆர் கண்ணி கடு மான் கிள்ளி - புறம் 355/4,5

ஐயர்க்கு (2)
விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது - திரு 107
என் ஐயர்க்கு உய்த்து உரைத்தாள் யாய் - கலி 39/22

ஐயர்க்கும் (1)
ஆசு அறு காட்சி ஐயர்க்கும் அ நிலை - குறி 17

ஐயரும் (1)
தாம் பிழையார் கேள்வர் தொழுது எழலால் தம் ஐயரும்/தாம் பிழையார் தாம் தொடுத்த கோல் - கலி  39/18,19

ஐயவி (14)
நெய்யோடு ஐயவி அப்பி ஐது உரைத்து - திரு 228
குறும் கதிர் தோரை நெடும் கால் ஐயவி/ஐவன வெண்ணெலொடு அரில் கொள்பு நீடி - மது 287,288
ஐயவி அப்பிய நெய் அணி நெடு நிலை - நெடு 86
ஐயவி அமன்ற வெண் கால் செறுவில் - மலை 123
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈர் அணி - நற் 40/7
நெய்யோடு இமைக்கும் ஐயவி திரள் காழ் - நற் 370/3
ஐயவி அன்ன சிறு வீ ஞாழல் - குறு 50/1
பூணா_ஐயவி தூக்கிய மதில - பதி 16/4
வில் விசை மாட்டிய விழு சீர் ஐயவி/கடி மிளை குண்டு கிடங்கின் - பதி 22/23,24
நீயே ஐயவி புகைப்பவும் தாங்காது ஒய்யென - புறம் 98/15
ஐயவி சிதறி ஆம்பல் ஊதி - புறம் 281/4
நெய் உடை கையர் ஐயவி புகைப்பவும் - புறம் 296/2
ஆரல் ஈன்ற ஐயவி முட்டை - புறம் 342/9
ஐயவி அனைத்தும் ஆற்றாது ஆகலின் - புறம் 358/4

ஐயள் (3)
வை எயிற்று ஐயள் மடந்தை முன் உற்று - நற் 2/7
ஐயள் மாயோள் அணங்கிய - நற் 146/10
ஐயள் அரும்பிய முலையள் - ஐங் 255/3

ஐயன்மார் (1)
ஐயன்மார் எல்லாம் ஒருங்கு - கலி 107/34

ஐயனை (1)
ஐயனை ஏத்துவாம் போல அணி பெற்ற - கலி 43/5

ஐயும் (2)
அன்னையும் அமர்ந்து நோக்கினளே என் ஐயும்/களிற்று முகம் திறந்த கல்லா விழு தொடை - நற் 389/3,4
அது போர் என்னும் என் ஐயும் உளனே - புறம் 89/9
 
ஐயென (9)
நள்ளென் யாமத்து ஐயென கரையும் - குறு 261/4
செம் வாய் வானத்து ஐயென தோன்றி - குறு 307/2
வாங்கு கதிர் தொகுப்ப கூம்பி ஐயென/அலங்கு வெயில் பொதிந்த தாமரை - குறு 376/4,5
அரவு நுங்கு மதியின் ஐயென மறையும் - அகம் 114/5
அரி கோல் பறையின் ஐயென ஒலிக்கும் - அகம் 151/10
அழல் பொழி யானையின் ஐயென தோன்றும் - அகம் 223/7
தவல் இல் நீத்தமொடு ஐயென கழிய - அகம் 305/2
அணங்கு என உருத்த நோக்கின் ஐயென/நுணங்கிய நுசுப்பின் நுண் கேழ் மாமை - அகம் 319/6,7
ஐயென உரைத்தன்றி நல்கி தன் மனை - புறம் 395/29

ஐயை (3)
கோள் வல் என் ஐயை மறைத்த குன்றே - ஐங் 312/4
இழை அணி பணை தோள் ஐயை தந்தை - அகம் 6/3
முழவு தோள் என் ஐயை காணா ஊங்கே - புறம் 88/6




Thursday, 30 September 2021

திருப்பரங்குன்றம் திருக்கூடல் மலை ,தென்கால் கண்மாய்

சங்கத்தமிழ்மதுரை அறிந்து போற்றுவோம்.
 திருப்பரங்குன்றம் பகுதி திருக்கூடல் மலை ,தென்கல் கண்மாய் ஆகும் .

திருவிளையாடல் புராணப்படி   தென்கல் கண்மாய்க்கு பெயர்  பூதங்கண்டகுளம் . குண்டோதரன் என்ற பூதம் தோண்டியது ஆகும் . சரி வெட்டிய மணலை போடவேண்டும் அல்லவா.அதை போட்ட இடம் திருக்கூடல்மலை ஆகிவிட்டதாம் .அதை தான்   கூடைதட்டிப்பறம்பு என்று சொல்கின்றனர் . இந்த மலை தொலைவில் இருந்து பார்த்தால் அப்படி தான் இருக்கும் . 

இதை சொன்ன முன்னோர் கற்பனை அறிவு அற்புதம் . 

இதை பதிப்பித்த தமிழ்த்தாத்தாவிற்கு மிக்க நன்றி .- ஸ்ரீ பூ கலாசார மையம் ,மதுரை .
நண்பர் இராமகிருஷ்ணன் அவர்களின் முகநூல் பதிவு இது.

Thursday, 2 September 2021

சூழியம் விழுங்குசிறு கொண்டை

 கீழடியில் கிடைத்த கொண்டை

சூழியம் விழுங்குசிறு கொண்டை


மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு அவர்கள் கீழடி தொல்லியல் அகழாய்வில் அகரத்தில் கிடைத்த சிறு கொண்டயுடைய பெண் உருவச் சுடுமண் பொம்மையின் படத்தை அவரது முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.  16 ஜுலை 2021 அன்று தினமலர்[1] நாளிதல் இச்செய்தியை வெளியிட்டுத் தமிழரின் தொன்மையை உலகறியச் செய்துள்ளது.  கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வில் அகரத்தில் ஏழு குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதில் மூன்றாவதாக தோண்டப்பட்ட குழியில் 65 செ.மீ., ஆழத்தில் இந்தச் சுடுமண் உருவத்தைத் தொல்லியலாளர்கள் தோண்டிக் கண்டறிந்துள்ளனர்.

            பெருத்த கண்கள், மூக்கு, உதடு எனப் பேரழகியாகத் தோன்றும் இந்தப் பெண் தன்னுடைய தலைமுடியை இடதுபுறம் அள்ளிச் சுருட்டி முடிந்து பெரிதாக கொண்டை போட்டுக் கொண்டுள்ளாள்.  முகத்திற்கு மேலும் அழகூட்ட முகத்தைச் சுற்றிலும் சிவப்பு நிறச் சாயம் பூசியுள்ளாள்.  இரண்டு காதுகளிலும் கலைநயத்துடன்கூடிய பெரிய காதணிகளை அணிந்துள்ளாள்.  நெற்றியின்  நடுவில் பதக்கத்துடன் இரண்டு பக்கங்களிலும் பூக்களால் தொடுக்கப்பட்ட ஆபரணத்தால் நெற்றியையும் தலைமுடியையும் சுற்றிக் கட்டிக் கொண்டுள்ளாள். 

            நெற்றிச் சுட்டியும், சூழியமும் -  தலைமுடியில் நேர்வகிடு எடுத்து நடு நெற்றியில் ஒரு பதக்கத்தைத் தொங்கவிட்டிருப்பர்.  இந்த ஆபரணத்திற்கு “நெற்றிச் சுட்டி, நெற்றிச் சூடி, நெற்றிச் சுற்றி” என்று பெயர்.  நெற்றியின் நடுவே பதக்கம் வைத்து, இரண்டு பக்கத்திலும் மலர்களை மாலைபோல் தொடுத்து, நெற்றியையும் தலைமுடியையும் சூழ்ந்து கட்டப்பட்டுள்ள இந்த ஆபரணத்திற்குச் “சூழியம்” என்று பெயர். 

            பூமாலையால் சுற்றிக் கட்டப்பெற்ற கொண்டையைச் சங்கப்பாடலான பரிபாடல் பூ மாலை கொண்டைஎன்று குறிப்பிடுகிறது. (பரிபாடல் 24).

 


நெற்றிச் சுட்டி அணிந்துள்ளார்

சூழியம் அணிந்துள்ளார்

“சூழியம் விழுங்கு சிறு கொண்டை” மலையத்துவச பாண்டியனின் மகளாகத் தடாதகைப் பிராட்டியாக அன்னை மீனாட்சி அவதரித்தபோது, அவளது சிறு கொண்டையில் “சூழியம்” அணிந்து தோன்றினாள் என்கிறது திருவிளையாடற் புராணம்.   தென்னவன் பாண்டியன் மலையத்துவசனும் அவனது மனைவி காஞ்சனமாலையும் குழந்தைப்பேறு வேண்டி மாபெரும் யாகம் செய்கின்றனர்.  அந்த யாக குண்டத்தில், ஒளிபொருந்திய முத்துச் சூழியத்தால் விழுங்கப்பட்ட சிறிய கொண்டையுடன்,  மார்பில் முத்துமாலை சந்திரனைப் போன்று ஒளிவிடவும், ஒளிமிக்க உதயசூரியனைப் போன்று ஒளிவிடுகின்ற கடலிற்றோன்றிய பவளத்தின் மாலையானது ஒளி வீசவும்தெளிந்த அமுதம் போன்ற, மெல்லிய மழலைுச் சொற்கள் தோன்றவும், புன்னகை பூக்கும் கூரிய பற்கள் வெளிப்படவும், இகழ்தல் இல்லாத பல உயிர்களையும் எல்லா உலகங்களையும் பெற்றவளாகிய உமையவள், மூன்று முலைகளை உடைய  ஒருபெண் மகவாக, மூன்று வயதுடன் தோன்றி நின்றாள் என்கிறது திருவிளையாடற் புராணம்.

            சூழியம் விழுங்கு சிறு கொண்டை” உடையவளாக மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் இன்றும் அடியார்களுக்குக் காட்சி அருளி, உலக உயிர்களை யெல்லாம் காத்து அருளி வருகிறாள். 

 சாய்ந்த கொண்டைச் சடையோன் -

            அன்னை மீனாட்சியின் கொண்டையானது அவளது இடதுபுறமாகச் சாய்ந்திருக்கும்.  மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவர் கொண்டையானது எப்போதும் நேராக நிமிர்ந்து இருக்கும். ஆனால் சிவபெருமான் நரிகளைப் பரிகளாக்கி மதுரைக்கு ஓட்டிக் கொண்டு வந்து, பாண்டியனிடம் குதிரைகளை ஒப்படைத்த போது, சிவபெருமானின் கொண்டையானது சாய்ந்து இருந்தது என்கிறது திருவிளையாடற் புராணம்.

            “ஒரு புறஞ்சாய்ந்த கொண்டையும்,  திருமுடிச்சாத்தும், திருமுடிப்பாகையும், ஒளி பொருந்திய வைரம் பதித்த கண்டிகைகளும், வீரவளைகளும்  குண்டலங்களும், திருநீற்றினை மூன்று கீற்றாக அணிந்த திருநுதலும், வெள்ளிய ஆடையும் கவசமும் அணிந்துகொண்டு, தொண்டர்களின் மனத்தினின்றும் நீங்காத சிவபெருமான் ஆவணிமூல நாளில் குதிரைகளை ஓட்டிக் கொண்டு மதுரை வந்து சேர்ந்தார்” என்கிறது திருவிளையாடற் புராணம். 

(பாடல் வரிசை எண் 2836).  இத் திருவிளையாடலையெல்லாம் சோமசுந்தரர் மீனாட்சியிடம் கூறித் தமது திருக்கோயிலில் வீற்றிருந்தார் என்கிறது புராணம்.   


கீழடியல்ல இது கூடல் என்ற மதுரை -

            கீழடியருகே தொல்லியலாளர்களால் தோண்டிக் கண்டறியப்பட்டுள்ள இந்தத் தொல்லியல் மேடு சுமார் 5 கி.மீ. சுற்றளவு உடையது. இது இன்றைய மதுரையின் நான்கு வெளிவீதிகளின் சுற்றளவுக்குச் சமமாகும். அதாவது இன்றைய மதுரையின் சுற்றளவும்,  கீழடி தொல்லியல் மேடும் ஒரே பரப்பளவு உடையன.  கூடல்  என்ற மதுரை மாநகருக்கு மேற்கே திருப்பரங்குன்றம் உள்ளதாம்.  இதை  ''மாடமலி மறுகிற் கூடற் குடவயின் ....'' என்று முத்தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவன் நக்கீரன் திருமுருகாற்றுப் படையில் பாடியுள்ளார்.  “திருப்பரங்குன்றத்திற்குக் கிழக்கே கூடல் மாநகர் இருந்துள்ளது” என்பதை இந்தப் பாடல்வழியாக அறிந்து கொள்ள முடிகிறது.   இதை உறுதி செய்யும் வகையில், “செழியன் கொடிநுடங்கு மறுகின் கூடற் குடாஅது“ என்று எருக்காட்டூர் தாயங்கண்ணனார்  (அகம்-149) என்ற சங்கப் புலவரும் பாடியுள்ளார்.  இவ்வாறாகத் தமிழ் இலக்கியச் சான்றுகளின் அடிப்படையிலும்,  தொல்லியல் மேட்டின் பரப்பளவின் அடிப்படையிலும் கீழடியருகே புதைந்துள்ள நகரத்தின் பெயர் “கூடல் என்ற மதுரை” என்பது தெளிவாகிறது.

            இந்தக் கருத்திற்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில் அகரத்தில் கிடைக்கப் பெற்றுள்ள சுடுமண்ணால் செய்யப்பெற்றுள்ள பெண்ணின் முக அமைப்பும் அலங்காரமும், அன்னை மீனாட்சியின் முகச்சாயலையும் அலக்காரத்தையும் ஒத்துள்ளது.  இன்றைய மதுரை மாநகரின் வாஸ்து இலக்கணத்தைக் கருத்திற் கொண்டால், இந்தச் சுடுமண் பொம்மை உருவம் கிடைக்கப் பெற்றுள்ள அகரத்திற்குக் கீழே கூடல்நகரின் அரண்மனை புதையுண்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

            சூழியம் விழுங்கு சிறு கொண்டையுடன் அன்னை தடாதகைப்பிராட்டி மலையத்துவச பாண்டியனின் வேள்விக்குண்டத்தில் தோன்றி இந்தப் பாரததேசம் முழுமையும் வென்று ஆண்டாள்.  அன்னை மீனாட்சியின் முக அமைப்பை ஒத்துள்ள, சூழியம் விழுங்கு சிறுகொண்டையுடைய சுடுமண் உருவம் அகரத்தில் அகழாய்வுக் குழியிலிருந்து தோன்றியுள்ளது.  இதனால், அன்னை மீனாட்சியின் அம்சமாக மதுரையில் தோன்றும் பெண் ஒருத்தி அகண்டபாரதத்தை ஆளப்போவது உறுதி என்றாகிறது. இது மதுரை மக்களுக்கும், உலகெங்கும் வாழும் தமிழருக்கும் கிடைத்த பெரும் பேறு ஆகும். 

கீழடியில் கிடைப்பனவும் கிடைக்காதனவும்    

            கீழடியருகே “மணலூர்” உள்ளது.  இந்த ஊரின் பண்டைய பெயர் “மணவூர்” ஆகும். இந்த மணவூரைத் தலைநகராகக் கொண்டு “குலசேகரபாண்டியன்” ஆண்டு வந்துள்ளான்.  அவன் மணவூருக்கு மேற்கே இருந்த கடம்பவனத்தை அழித்து தற்போதுள்ள மதுரையை மீட்டுருவாக்கம் செய்து, மணவூரில் வாழ்ந்த மக்களையெல்லாம் மதுரையில் குடியமர்த்தினான் என்கிறது திருவிளையாடற் புராணம்.  கீழடியருகே தொல்லியலாளர்கள் தோண்டிக் கண்டறிந்துள்ள நகரமானது குலசேகரபாண்டியனால் “கைவிடப்பட்ட தலைநகரமாகும்”.  இங்கிருந்த மக்கள் அனைவரும் இப்போதுள்ள மதுரைக்குக் குடிபெயர்ந்து செல்லும்போது,  அவர்களது வழிபாட்டுப் பொருட்களையும், புழங்கு பொருட்களையும் அவர்களுடன் எடுத்துச் சென்று விட்டனர்.  இதனால், கீழடி அகழாய்வில் பண்டைய மக்கள் பயன்படுத்திக் கொண்டிருந்த,  உபயோகித்துக் கொண்டிருந்த எந்தவொரு பொருளும் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.  மாறாக, தொலைந்துபோன, உடைந்து போன அல்லது கைவிடப்பட்ட பொருட்கள் மட்டுமே  அகழாய்வில் கிடைக்கும்.  

அன்பன்

காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்,

ஆராய்ச்சி அமைப்பாளர், திருவிளையாடற் புராண ஆராய்ச்சி மையம்.

மேனாள் துணைப்பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி.

28 அ, குருநாதர் கோயில் தெரு, கோட்டையூர் 630106, சிவகங்கை மாவட்டம்.

அலைபேசி 834 826 6418, பகிரி +91 94435 01912

மின்னஞ்சல் - kalairajan26@gmail.com


 

கற்றவை -

 1)  https://www.dinamalar.com/news_detail.asp?id=2803206 

 ஜூலை 16, 2021  01:29

------------------------------------------------------------------

 2) திருவிளையாடற் புராணம்  

பாடல் வரிசை எண் 533

நொய்தழ லெரிக்கடவு ணோற்றபய னெய்தக்

கொய்தளி ரெனத்தழல் கொழுந்துபடு குண்டத்

தைதவிழிதழ்க்கமல மப்பொழு தலர்ந்தோர்

மொய்தளிர் விரைக்கொடி முளைத்தெழுவ தென்ன.

பாடல் வரிசை எண்  534.

விட்டு இலகு சூழியம் விழுங்கு சிறு கொண்டை

வட்ட மதி வாய்க்குறு முயல் கறையை மானக்

கட்டி அதி நாற்றிய கதிர்த் தரள மாலை

சுட்டி அதில் விட்டு ஒழுகு சூழ் கிரணம் ஒப்ப.         

பாடல் வரிசை எண்  535.

தீங்கு தலை இன் அமுதம் மார்பின் வழி சிந்தி

ஆங்கு இள நிலா ஒழுகும் ஆர வடம் மின்ன

வீங்கு உடல் இளம் பரிதி வெம் சுடர் விழுங்கி

வாங்கு கடல் வித்து உரும மாலை ஒளி கால.

பாடல் வரிசை எண்  536.

சிற்றிடை வளைந்த சிறு மென் துகில் புறம் சூழ்

பொன் திரு மணிச் சிறிய மேகலை புலம்ப

வில் திரு மணிக் குழை விழுங்கிய குதம்பை

சுற்று இருள் கடிந்து சிறு தோள் வருடி ஆட.

பாடல் வரிசை எண்  537.

தெள் அமுத மென் மழலை சிந்து இள மூரல்

முள் எயிறு அரும்ப முலை மூன்று உடையது ஓர் பெண்

பிள்ளை என மூ ஒரு பிராய மொடு நின்றள்

எள் அரிய பல் உயிரும் எவ் உலகும் ஈன்றாள்.

----------------------------

பாடல் வரிசை எண் 2836.

சாய்ந்த கொண்டையும் திரு முடிச் சாத்தும் வாள் வயிரம்

வேய்ந்த கண்டியும் தொடிகளும் குழைகளும் வினையைக்

காய்ந்த புண்டர நுதலும் வெண் கலிங்கமும் காப்பும்

ஆய்ந்த தொண்டர் தம் அகம் பிரியாது அழகு எறிப்ப.

---------------------------

கொண்டை  என்ற சொல் இடம் பெற்றுள்ள சங்கப்பாடல் வரிகள் -

1) செறி கொண்டை மேல் வண்டு சென்று பாய்ந்தன்றே - பரி 9/43

2) புனல் ஊடுபோவது ஓர் பூ மாலை கொண்டை/எனல் ஊழ் வகை எய்திற்று என்று ஏற்றுக்கொண்ட - பரி  24/51,52

3) கொண்டை கூழை தண் தழை கடைசியர் - புறம் 61/1

(நன்றி - http://tamilconcordance.in/SANG-18A.html)


 

சூழியம் விழுங்கு சிறு கொண்டை யுடைய சுடுமண் உருவ பொம்மை.  கூடல் மாநகரின் அரண்மனை இருந்திருக்கலாம் என்று கருதப்படும் இடத்தில் கிடைத்துள்ளது.


சூழியம் விழுங்கு கொண்டையுடன் அருள்மிகு மதுரை மீனாட்சியம்மன்  அருளாட்சி செய்யும் அற்புதக் காட்சி.