Tuesday, 26 September 2023

திருவிளையாடற் புராணத்தில் ' தருமம் '

 

திருவிளையாடற் புராணத்தில்

' தருமம் ' என்ற சொல் உள்ள பாடல்களின் தொகுப்பு.

 

85.         

பொதியிலே விளைகின்றன சந்தனம் பொதியின்

நதியிலே விளைகின்றன முத்தம் அந் நதி சூழ்

பதியிலே விளைகின்றன  தருமப் அப் பதியோர்

மதியிலே விளைகின்றன மறை முதல் பத்தி.             

90.         

வெம்மையால் விளைவு அஃகினும் வேந்தர் கோல் கோடிச்

செம்மை மாறினும் வறுமை நோய் சிதைப்பினும் சிவன் பால்

பொய்ம்மை மாறிய பத்தியும் பொலிவு குன்ற வாய்த்

தம்மை மாறியும் புரிவது   தருமம் அந்நாடு.

127.       

மருமச் செம்புனல் ஆறிட அடு கோட்டுப்

பருமச் செம் கண் மால் யானையின் பனைக்கையும் மறைநூல்

அருமைச் செம் பொருள் ஆய்ந்தவர்க்கு அரும் பொருள் ஈவோர்

 தருமச் செம் கையும் ஒழுகுவது ஆன நீர் ஆறு.       

190.       

முன்னவன் அரசு இருக்கையால் அந் நகர் முளரிப்

பொன்னை ஈன்ற தால் அது பல பொருள் நிறை செல்வம்

தன்னை ஈன்றதால் அது பல தருமம் என்று  க்கும்

மின்னை ஈன்ற அஃது ஈன்றதால் விழுத் தகு புகழே.

196.       

கலவி வித்தாக ஊடிக் கட்புனல் குளிக்கும் நல்லார்

புலவி தீர் செவ்வி நோக்கிப் புனர் முலைப் போகம் துய்த்தும்

நிலை நிலையாமை நோக்கி நெறிப்படு  தரும தானம்

கலைஞர் கைப்பு எய்தும் காலம் கழிப்பவர் எண் இலாதார்.

228.       

மால் அய மாதவனை அடைந்து கைதொழுது வாழ்த்தி வாதாவி வில்வலனைக்

கொலை புரி  தரும மூர்த்தியே விந்தக் குன்று அடக்கிய தவக் குன்றெ

அலைகடல் குடித்த அருள் பெரும் கடலே அரும் தமிழ்க் கொண்டலே தென்பார்

துலை பெற நிறுத்த களைகணே என்று சுருதி ஆயிரம் எனத் துதித்தார்.

235.       

அவ்வகைய மூன்றின் முதல் தலப் பெருமை தனைச் சுருக்கி அறையக் கேண்மின்

எவ்வகைய உலகத்தும்  தருமதலம் அதிகம் அவற்று ஈறு இலாத

சைவ தலம் அதிகம் அவற்று அறுபத்து எட்டு அதிகம் அவை தமில் ஈர் எட்டு

தெய்வ தலம் அதிகம் அவற்று அதிக தல நான்கு அவற்றைச் செப்பக் கேண்மின்.

290.       

 தரும முன்னாகு நான்கும் தருதலால்  தரும தீர்த்தம்

அருமை சால் அருத்த தீர்த்தம் அரும் பெறல் காமதீர்த்தம்

இருமை சேர் முத்தி தீர்த்தம் என்பதாம் இனைய தீர்த்தம்

வெருவரு பாவம் என்னும் விறகினுக்கு எரியாம் அன்றே.

301.       

மின்மை சால் மணியில் சிந்தாமணி வரம் விழுப்ப நல்கும்

தன்மை சால் அறங்கள் தம்மில் மிகும் சிவ  தருமம் என்ப

இன்மை சால் நெறிநின் றோருக்கு ஏற்கு நற்கலங்கள் தம்மின்

நன்மை சான்றவரே முக்கணா தனுக்கு அன்பு பூண்டோர்.           

405.       

பொன் உயிர்த்து அனைய காட்சிப் புண்ணிய குரவன் முன்போய்

மின் உயிர்த்து அனையாள் நின்று விளம்புவாள் இது என் கொல் கெட்டேன்

என்னுயிர்த் துணைவன் ஆங்கே இருக்க மற்று ஒருவன் என்னைத்

தன் உயிர்த் துணையாக் கொள்கை  தருமமோ அடிகள் என்றாள்.

474.       

குலவு அப் பெரும் பதி இளம் கோக்களில் ஒருவன்

நிலவு மா நிதி போல அருச்சனை முதன் நியதி

பலவு ஆம் சிவ  தருமமும் தேடுவான் பரன் பால்

தலைமை சான்ற மெய் அன்பினான் தனஞ்சயன் என்பான்.

516.       

உத்தம குலத்து நாற்பெரும் குடியும் உயர்ந்தவும் இழிந்தவும் மயங்க

வைத்தவும் ஆன புறக்குடி மூன்று மறை வழுக்கா மனு வகுத்த

தத்தம நெறினின்று ஒழுக வைதிகமும் சைவமும்  தருமமும் தழைப்பப்

பைத்தெழு திரைநீர் ஞால மேல் திலகம் பதித்து என நகர்வளம் படுத்தான்.

522.       

கண்ணுதலை முப் பொழுதும் வந்து பணி கற்றோன்

எண் இல் பல நாள் மகவு இலா வறுமை எய்திப்

பண்ணரிய தான  தருமம் பலவும் ஆற்றிப்

புண்ணியம் நிரம்பு பரி வேள்வி புரி குற்றான்.

577.       

இன்னிலை ஒழுகும் தொல்லோர் இயற்றிய  தருமம் வேறும்

அந் நிலை நிறுத்தும் வேள்வி அறம் பல ஆக்கம் செய்ய

நன்னிதி அளித்தும் வேள்வி நடாத்தியும் செல்வம் கல்வி

தன் இரு கண்களாகத் தழைத்திட வளர்க்கும் நாளும்.

639.       

உடையான் அடி தாழ்ந்து இவை ஓதலும் ஓத நீத்தச்

சடையான் இள வாண் நகை செய்து  தருமச் செம்கண்

விடையான் சிலையான் இகல் வென்றி விளைக்கும் தெய்வப்

படையான் எழுந்தான் அமர் ஆடிய பாரில் சென்றான்.

881.       

மானதமே வாசிகமே காயிகமே என வகுத்த

ஈனம் இல் தவம் மூன்றம் இவற்றின் ஆனந்தம்  தருமது

தான மிசை மதி வைத்தறயவு பொறை மெய் சிவனை

மோனம் உறத் தியானித்தல் ஐந்து அடக்கல் முதல்  அனந்தம்.

882.       

வாசிக ஐந்து எழுத்து ஓதன் மனுப் பஞ்ச சாந்தி மறை

பேசுசத உருத்திரம் தோத்திரம்  த்தல் பெரும்  தருமம்

காசு அகல எடுத்து ஓதன் முதல் அனந்தம் ஆயிகங்கள்

ஈசன் அருச்சனை கோயில் வலம் செய்கை எதிர்வணங்கல்.

931.       

புண்ணிய முனிவர் வேத பண்டிதர் போந்து வேந்தர்க்கு

கண்ணிய சடங்கு மூதூர் அரும் கடி வெள்ளத்து ஆழ

எண்ணிய திங்கள் தோறும் இயற்ற இக் கன்னித் தேயம்

பண்ணிய  தருமச் சார்பால் படுபயன் தலைப்பாடு எய்த.

942.       

 தரும மா தவத்தின் பேறோ வருத்த மாதவத்தின் பேறோ

பெருமை சால் காமன் நோற்ற பெருந்தவப் பேறோ எய்தற்கு

அருமை ஆம் வீடுநோற்ற அரும்தவப் பேறோ இந்தத்

திருமகன் என்று தம்மில் வினாய் மகிழ் சிறப்பச் சென்றார்.

1034.    

திங்களின் உக்கிரச் செழியன் வெண் குடை

எங்கணும் நிழற்ற வீற்று இருக்கும் நாள் வயில்

சங்கை இல்லாத மா  தரும வேள்விகள்

புங்கவர் புடைதழீஇப் போற்ற ஆற்றும் நாள்.

1188.    

அருமறை நால் வேறு ஆகையால் வருண  ஆச்சிரமங்களும் நான்காம்

 தருமம் ஆகதி கருமமும் மறையின் தோன்றின மறையும்

கரும நூல் ஞான நூல் என இரண்டாம் கரும நூல்  இவன் அருச்சனைக்கு

வரும் வினை உணர்த்து ஞான நூல் இவன் தன் வடிவு  இலா வடிவினை  உணர்த்தும்.

1191.    

கருமத்தான் ஞானம் உண்டாம் கருமத்தைச் சித்த சுத்தி

 தருமத்தால் இகந்த சித்த சுத்தியைத்  தருமம் நல்கும்

அருமைத்து ஆம்  தருமத்தாலே சாந்தி உண்டகும் ஆண்ட

பெருமைத்து ஆம் சாந்தியாலே பிறப்பது அட்டாங்க யோகம்.

1356.    

மன்னன் முன் அமைச்சர் சித்தர் மறுத்து   மாற்றம் கூற

முன்னவன் அருள் பெற்று இம்மை மறுமையும் முனிந்த யோகர்

இந் நில வேந்தர் மட்டோ இந்திரன் அயன் மால் ஏனோர்

தன்னையும் மதிப்பரோ என்று இருந்தனன்  தரும வேந்தன்.

1673.    

வான் நாடர்க்கு அவி உணவின் வகை முந்நூல் மன்றல் முதல்

நானா ஆம் சிறு வேள்வி நான் மறையோர்க்கு அறுசுவையின்

ஆனாத பேர் உண்டி துறவு அடைந்தோர்க்கு அருத்துபலி

தான் ஆதி பல வேறு  தருமம் நனி தழைவித்தான்.

1706.    

வள்ளல் குல பூடணன் திங்கள் வாரம் தொடுத்து சிவ தருமம்

உள்ள எல்லாம் வழாது நோற்று ஒழுகும் வலியால் தன் நாட்டில்

எள்லல் இல்லா வேதியரை இகழ்ந்தான் அதனான் மழை மறுத்து

வெள்ளம் அருக வளம் குன்றி விளைவு அஃகியது நாடு எல்லாம்.

1709.    

அந்த உலகில் உயிர்க்கு உயிர் நீ அல்லையோ அவ்  உயிர் உயிர் பசியால்

எய்த்த வருத்தம் அடியேனை வருத்தும் மாறு என் யான் ஈட்டி

வைத்த நிதியம்  தருமத்தின் வழியே சென்றது இளியடிகள்

சித்த மலர்ந்து என் இடும் பை வினை தீர அருள்கண் செய்க என.

1716.    

மும்மைப் புவனங்களும் உய்ய முத்தீ வேட்கும் இவர் தம்மை

நம்மைப் போலக் கண்டு ஒழுகி நாளும் நானா வறம் பெருக்கிச்

செம்மைத் தருமக் கோல் ஓச்சித் திகிரி உருட்டி வாழ்தி என

உம்மைப் பயன் போல் எளி வந்தார் உலவாக் கிழி ஒன்று உதவுவார்.

1910.    

அனையான் அறத்திற்கு அருள் போன்றவள் ஆன்ற கற்பின்

மனையாள் மரபின் வழுவாத  தரும சீலை

எனையாரும் நன்கு மதிக்கும் இருக்கும் நீராள்

தனை ஆள் பதிக்குக் கதிக்குத் தனிச் சார்பு போல்வாள்.

1921.    

நீ நாளும் பூசித்து அதில் வேண்டிய கொண்டு நித்தம்

ஆனாத அன்பர்க்கு அமுது ஊட்டி எவர்க்கும் அன்ன

தானாதி நானா  தருமங்களும் செய்தி வீடு

மேல் நாள் அளிக்கின்றனம் என்று விசும்பில் கூற.

1946.    

அரசன் இங்கு இல்லை கொல்லோ ஆன்றவர் இல்லை கொல்லோ

குரை கழல் வேந்தன் செங்கோல் கொடியதோ கோது  இல் நூல்கள்

செயும் தெய்வம் தானும் இல்லை கொல் உறுதியான

 தருமம் எங்கு ஒளித்ததே கொல் என்று அறத் தவிசில்  சார்வார்.

1954.    

ஆவலித்து அழுத கள்வர் வஞ்சரை வெகுண்டு நோக்கிக்

காவலன் செங்கோன் உண்நூல் கட்டிய  தருமத்தட்டில்

நா எனும் துலை நா விட்டு எம் வழக்கையும் நமராய் வந்த

மேவலர் வழக்கும் தூக்கித் தெரிகென விதந்து சொன்னார்.

2120.    

 தரும நீர்ப் பந்தரில் இருக்கும் தந்திரி

வரும் இசைக் கிழவனைக்கண்டு வல்லை போய்த்

திரு மகற்கு உணர்த்தினர் சேனை யோடு எழீப்

பெருமகன் பாணர்தம் பிரானை நண்ணினான்.

2130.    

வந்து மதுரைப் பெருமானை வணங்கிக் கொணர்ந்த நிதி எல்லாம்

இந்து மருமான் நகர் உள்ளார் யாவும் அறிய யாவர்க்கும்

முந்தை வேத முதல்வர்க்கும் புலவோர் தமக்கு முறை நல்கிச்

சந்த யாழின் இசைப்பாணர்  தருமம் அனையான் வைகினான்.

2273.    

இன்னவாறு ஒழுகும் பன்னிரு வோரும் ஈகையும்  தருமமும் புகழும்

தென்னர் கோ மகற்கு வைகலும் பெருகத் திசை எலாம் விசயம் உண்டாக்கிப்

பன்னக ஆபரணன் சிவபுரம் அடைந்து பரன் கண நாதருள் கலந்து

மன்னி வீற்று இருந்தார் மன்னர் மன்னவனும் வான் பதம் அடைந்து வீற்று இருந்தான்.    

2278.    

விடையவன் நீறு பூசும் மெய்யவன் பூண்ட கண்டித்

தொடையவன் புறம்பும் உள்ளும் தூயவன் குடையும் கையில்

உடையவன்  தரும தீர்த்த யாத்திரை ஒழுக்கம் பூண்ட

நடையவன் ஒருவன் அந்த நறும் தரு நிழலில் சார்ந்தான்.

2630.    

அல்லதை என்று அமரால் என் பகைஞரால் கள்வரால்  அரிய கானத்து

எல்லை விலங்கு ஆதிகளால் இடையூறு இன் தமிழ்  நாட்டில் எய்திற்றலோ

தொல்லை மறையவர் ஒழுக்கம் குன்றினரோ தவம்   தருமம் சுருங்கிற்றாலோ

இல்லறனும் துறவறனும் பிழைத்தனவோ யான் அறியேன்  எந்தாய் எந்தாய்.

2710.    

பெண்ணினை வதுவைக்கு ஈந்த பெருந்துறைச் சேர்ப்பற்கு அன்று

தண் அளி சுரந்து நல்கித்  தருமமால் விடைமேல் தோன்றி

விண் இடை நின்றான் சென்றான் வேத்திரப் படையா னோடும்

உள் நிறை அன்பரோடு உத்தர கோச மங்கை.

2831.    

 தருமம் ஆதி நால் பொருள் எனும் தாளது ஞான

கரும காண்டம் ஆம் செவியது காட்சியைக் கடந்த

ஒருமை ஆம் பரம பரமாம் உணர்வு எனும் கண்ணது

அருமை ஆம் விதி முகத்தது நிடேத வால் அதுவால்.

3129.    

அருமறை வணங்கும் கோயில் கதவினை அடைக்கப் பாடிப்

பரன் உறை பதிகள் எங்கும் தொழுதனர் பாடிப் பாடி

வரும் அவர் நுங்கள் நாட்டு வணங்கவும் வருவார் என்னத்

 தரும நூல் அணிந்த தெய்வத் தாபதன் சாற்றலோடும்.

3307.    

அருந்ததி அனையாள் கேள்வற்கு ஆயுளும் ஆனாச் செல்வம்

பெருந்தன நிறைவும் சீரும் ஒழுக்கமும் பீடும் பேறு

அரும்தவ நெறியும் குன்றத்  தருமமும் புகழும் பல்க

இருந்தனள் கமலச் செல்வி என்ன வீற்று இருந்து மன்னோ.

 

_________________________________

 

நன்றி = பாடல்கள் தொகுப்பு உதவி - தமிழ் இணையப் பல்கலைக்கழகம்..

Tuesday, 15 August 2023

தமிழரும் துருக்கரும்

சங்கத் தமிழரும் -- பண்டைய துருக்கரும்

தமிழர், துருக்கர், 
https://thiruvillayadalpuranam-kalairajan.blogspot.com/2019/08/blog-post.html

https://en.wikipedia.org/wiki/Turkic_peoples_in_India

 


,.......
.......
.......
https://arkeonews.net/in-the-excavations-at-tepecik-mound-in-aydin-turkiye-a-palace-like-structure-dating-back-to-the-13th-century-bce-was-discovered/?fbclid=IwAR3mWaWo0M6Bz0dySt9Zi-gV_nlgy0hoV1GO2bvYRY7TUItnjHHSZxx3HK4

Saturday, 25 February 2023

ஐராவதநல்லூர்

மதுரை 

ஐராவதநல்லூரில் வழிபாடு செய்தால்

தலைக்கு வருவன தலைப்பாகையோடு போகும்

 

(அருள்மிகு ஐராவதம் விநாயகர் கோயில்)

(அருள்மிகு ஐராவதம் விநாயகர் கோயில்)


(அருள்மிகு ஐராவதேசுவரர்)

(துர்வாச முனிவர் சிவலிங்க வழிபாடு செய்து சிவபெருமானிடம் இருந்து மலர் பெறுவதும், அந்த மலரை இந்திரனுக்கு அளிப்பதும்)

(ஐராவதம் ஐராவத கணேசரையும் ஐராவதேசுவரரையும் வணங்குதல்)

திருவிளையாடல் புராணம் -  சிவபெருமானது 64 திருவிளையாடல்களில், மதுரைக்காண்டத்தில் 18 படலங்கள் உள்ளன. கூடற்காண்டத்தில் 30 படலங்கள் உள்ளன.  திருவாலவாய்க் காண்டத்தில் 16 படலங்கள் உள்ளன.

மதுரைக் காண்டத்தில். இந்திரன் பழி தீர்த்த படலம் முதலாவது படலமாகும்.  இரண்டாவது படலமாக வெள்ளையானை சாபம் தீர்த்த படலம் இடம் பெற்றுள்ளது.  இப்படலம் ஆணவச் செயலால் சாபம் அடைந்த இந்திரனின் வாகனமான வெள்ளை யானையின் சாபத்தை போக்கிய சிவனின் கருணைமிகுந்த திருவிளையாடலைப் பற்றிக் கூறுகிறது.

கதைச் சுருக்கம் -  இந்திரன் சிவலிங்கத்தினைப் பூசை செய்து விசுவரூபனை கொன்ற பழியிலிருந்து தப்பித்தபின், இந்திரலோகத்திற்கு தேவர்களுடன் சென்றார்.   அங்கே இந்திரனுக்கு மாபெரும் வரவேற்பு கொடுக்கப்பட்டது.   இதனால் இந்திரன் மிகவும் மகிழ்ந்து தலைக்கணம் கொண்டான்.  அவனது வாகனமான ஐராவதமும் மிகவும் பெருமிதம் கொண்டு இருந்தது.

துர்வாசரின் சாபம் - அந்நாளில், துர்வாச முனிவர் சிவலிங்க பூசை செய்தார்.  அவரது பூசையை மெச்சிய சிவபெருமான் அவருக்குத் தன் சடைமுடியிலிருந்த தாமரை மலர் ஒன்றை எடுத்துக் கொடுத்து ஆசிர்வதித்தார்.  அந்த மலரைத் தன் கமண்டலத்தில் வைத்துப் பாதுகாத்து வந்தார்.   இந்திரனின் வெற்றியை வாழ்த்திப் போற்றும் வகையில் இந்திரனிடம் அந்த மலரை முனிவர் கொடுத்தார்.    வெற்றிச் செருக்கில் இருந்த இந்திரன் அந்த மலரை வாங்கி அவனது யானையான ஐராவதத்தின் மத்தகத்தின் மேல் வைத்தான்.   ஆனால் ஐராவதமோ அதன் துதிக்கையால் அந்த மலரை எடுத்துக் கீழே போடு அதன் காலால் நசுக்கி விட்டது. 

இதைக் கண்ட துர்வாசர் மிகவும் கோபம் கொண்டு “ உன் தலை பாண்டிய மன்னனின் சக்கராயுதத்தால் துண்டிக்கப்படட்டும்,  ஐரவாதம் அதனுடைய வெள்ளை நிறத்தையும் நான்கு தந்தங்களையும் இழந்து காட்டு யானையாக மாறிப் போகட்டும்” என்று சாபம் இட்டார்.

இது கேட்ட இந்திரன் பெரிதும் வருந்தி,  துர்வாசரிடம் “ஐம்புலன்களையும் வென்ற முனிவரே தாங்கள் பரிசாக அளித்த தாமரை மலரின் பெருமைகளை அறியாது அதனை தவறாகப் பயன்படுத்தி விட்டேன். எங்களுடைய தவறான செயலினை மன்னியுங்கள். எனக்கும், எனது வெள்ளை யானைக்கும் கொடுத்த சாபத்தினை மாற்றி அருளுங்கள்” என்று இந்திரன் வேண்டினான்.

சாப விமோசனம் - இந்திரனது பணிவு கண்டு கோபம் நீங்கிய முனிவர், “ உன் தலைக்கு வரும் ஆபத்து உன் முடிக்கு ஆகட்டும்,  காட்டுயானையாகி நூறாண்டு கழிந்தபின் மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவரரின் பெருங் கருணையால் மீண்டும் வெள்ளை யானையாக மாறட்டும்” என்று கூறினார்.

சோமசுந்தரேசுவரர் அருளுதல் - முனிவரின் சாபத்தால் ஐராவதம் அதனுடைய வெண்மைநிறம் இழந்து காட்டுயானையாக மாறிப் பூலோகத்தில் காடுகளில் சுற்றித் திரிந்தது. நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் இறுதியில் கடம்ப வனத்தில் பொற்றாமரைக் குளத்தினையும், சொக்கநாதரையும் கண்டு பொற்றாமரைத் தீர்த்த நீரினைக் கொண்டு அபிசேகம் செய்து பொற்றாமரையால் சொக்கநாதரை வழிபட்டது.

ஐராவதத்தின் வழிபாட்டில் மனம் மகிழ்ந்த சோமசுந்தரேசுவரர் அதற்குக் காட்சி அருளி “உனக்கு வேண்டிய வரம் கேள்”  என்றார்.   அது கேட்ட ஐராவதம் பெரிதும் மகிழ்ந்து அருள்மிகு சோமசுந்தரேசுவரரைப் பணிந்து, “தங்களது விமானத்தினை தாங்கும் எட்டு யானைகளோடு நானும் ஒன்பதாவது யானையாகித் இந்த இந்திர விமானத்தைத் தாங்கவேண்டும், தங்களைப் பிரியாது இருக்க வேண்டும்.” என்று வேண்டிக் கொண்டது.  அதற்கு சொக்கநாதரும் “இந்திரன் என்னிடம் மிகுந்த அன்பு பூண்டவன். ஆதலால் அவனை நீ சுமப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கும்” என்று கூறி பல வரங்களை அருளினார்.  வெள்ளையானை சோமசுந்தரருக்கு மேல்திசையில் ஐராவத தீர்த்தத்தையும், ஐராவதேச்சுரர் லிங்கத்திருமேனியையும், ஐராவத விநாயகப் பெருமானையும் உருவாக்கி வழிபட்டு வந்தது.

இந்திரன் தனது வெள்ளை யானையின் சாபம் நீங்கப் பெற்றதை அறிந்து அதனை அழைத்துவர தேவர்களை அனுப்பினான். அவர்களிடம் அந்த யானை “வருவேன்” என்று கூறி அவர்களை அனுப்பிவிட்டது.  பின் சொக்கநாதருக்கு கீழ்திசையில் ஐராவதநல்லூர் என்ற ஊரினை உருவாக்கியும், அவ்வூரில் இந்திரேச்சுரர் என்ற லிங்கத்தை உண்டாக்கியும் வழிபட்டு வந்தது.  இந்திரன் மீண்டும் தேவர்களை அனுப்பி ஐராவதத்தை அழைத்து வரச் சொன்னான். வெள்ளை யானையும் இந்திரனின் வேண்டுகோளை ஏற்று தேவலோகம் சென்றது.

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகட்டும் -  இந்திரனின் வாகனமாகிய ஐராவதம் என்ற வெள்ளையானை வழிபட்ட ஐராவதேச்சுரரை நாமும் வழிபடுவோம்.  இந்திரனின் தலைக்குவந்த ஆபத்து அவனது தலையிலிருந்த கீரிடத்துடன் நீங்கியது போன்று, சாபம் நீங்கி ஐராவதம் பொழிவு பெற்றது போன்று, நமது தீவினைகளும் இறையருளால் நீங்கப் பெற்று, இம்மையில் எல்லா வளங்களும் பெற்று, மறுமையில் இந்திரப் பதவி பெற்று இறுதியில் வீடுபேற்றினைப் பெறுவோம்.  

தல இருப்பிடம் -  மதுரை வண்டியூர் தெப்பக்குளத்திற்கு அருகே 1 கி.மீ. தொலைவில் ஐராவதநல்லூர் உள்ளது.

----------------------------------------------------

ஐராவதம் ஐராவதத் தீர்த்தத்தில் நீராடி, ஐராவத கணபதியை வணங்கி, ஐராவதேசுவரரை பணிந்த நிகழ்வைக் குறிப்பிடும் திருவிளையாடல் புராணம் 

பாடல் எண் 467
விடைகொடு வணங்கி யேகும்வெள் ளானை
    மேற்றிசை யடைந்துதன் பெயரால்
தடமுமற் றதன்பா லரனையுங் கணேசன்
     றன்னையுங் கண்டருச் சனைசெய்
திடையறா வன்புந் தானுமங் கிருக்கு
     மெல்லையிச் செய்திகேட் டருள்கூர்
கடவுளர் பெருமா னுழையரை விளித்தெங்
     களிற்றினைக் கொணர்கென விடுத்தான்.

விடைகொடு வணங்கி ஏகும் வெள்ளாணை
    மேல் திசை  அடைந்து தன் பெயரால்
தடமும் மற்று அதன் பால் ஆனையும் கணேசன் 
    தன்னையும் கண்டு அருச்சனை செய்து
இடையறா அன்பும் தானும் அங்கு இருக்கும்
    எல்லை இச் செய்தி கேட்டு அருள் கூர்
கடவுளர் பெருமான் உழையரை விளித்து எம்
    களிற்றினைக் கொணர்க என விடுத்தான்.

பொருள் -  விடை பெற்று வணங்கிச் செல்லும் வெள்ளையானையானது, மேற்குத் திக்கினை யடைந்து,  தனது பெயரால், ஓர் பொய்கையினையும், அப் பொய்கையில் சிவபிரானையும் மூத்த பிள்ளையாரையும் பிரதிட்டை செய்து,  அருச்சித்து,  நீங்காத அன்புந் தானுமாக அங்கிருக்கும் பொழுதில், இச் செய்தியைக் கேள்வியுற்று, கருணைமிக்க தேவேந்திரன், ஏவலாளரை அழைத்து,  எமது யானையைக் கொண்டு வாருமென அனுப்பினான்.

-------------------

பாடல் எண் 468
வல்லைவந் தழைத்தார் தம்மைமுன் போக்கி
     வருவலென் றெழுந்துகீழ்த் திசையோர்
எல்லைவந் தோரூர் தன்பெய ராற்கண்*
     டிந்திரேச் சுரனென+விறைவன்
றொல்லைவண் பெயரா லொன்றுகண் டரனைத்
     தூயபூ சனைசெய்தங் கிருப்பக்
கல்லைவன் சிறகு தடிந்தவ னின்னுங்
     களிறுவந் திலதெனப் பின்னும்.


வல்லை வந்து அழைத்தார் தம்மை முன் போக்கி
                   வருவல் என்று எழுந்து கீழ்த் திசை ஓர்
எல்லை வந்து ஓர் ஊர் தன் பெயரால் கண்டு
                   இந்திரரேச் சுரன் என இறைவன்
தொல்லை வண் பெயரால் ஒன்று கண்டு அரனைத்
                    தூயபூசனை செய்து அங்கு இருப்பக்
கல்லை வன் சிறகு தடிந்தவன் இன்னும் களிறு
                    வந்திலது எனப் பின்னும்.

பொருள் - விரைந்து வந்து அழைத்தவர்களை, வருவேன் என்று கூறி, முன்னே போகச் செய்து, அவணின்றும் எழுந்து கிழக்குத் திக்கில் ஓர் இடத்தை எய்தி, ஓர் ஊர் தன் பெயரால் அமைத்து,  தன் தலைவனது பழமையான அழகிய பெயரால்,  இந்திரேச்சுரன் என்று ஓர் சிவலிங்கமமைத்து,  அவ்விறைவனைத் தூய்மையான பூசனை செய்து கொண்டு அங்கேயே இருக்க, மலைகளைச் சிறகின் கண் வெட்டியவனாகிய இந்திரன்,  இன்னமும் யானை வரவில்லை என்று மீளவும்.

------------------------------------

பாடல் எண் 469.

மனத்தினுங் கடிய தூதரை விடுப்ப
     வானடைந் திறைவனை வணங்கிப்
புனத்தினுங் கடிய கல்லினும் பன்னாட்
     புன்கணோ யுறவரு சாபங்
கனத்தினுங் கரிய கண்டனைக் கண்டு
     களைந்ததுங் கிளந்துதிக் கயத்தின்
இனத்தினுங் கழிந்த தெய்வத வேழ
     மினிதுவீற் றிருந்தது மாதோ.


மனத்தினும் கடிய தூதரை விடுப்ப
    வான் அடைந்து   இறைவனை வணங்கிப்
புனத்தினும் கடிய கல்லினும் பன்னாள்
    புன்கணோ உற வரு சாபம்
கனத்தினும் கரிய கண்டனைக் கண்டு
    களைந்ததும் கிளந்து இக் கயத்தின்
இனத்தினும் கழிந்த தெய்வத வேழம்
    இனிது வீற்று இருந்தது மாதோ.

பொருள் -  மனத்தினை விட விரைந்து செலவினையுடைய தூதர்களை அனுப்ப (அவர்களோடும்),  விண்ணுலகை எய்தி இந்திரனை வணங்கி,  காட்டிலும் வலிய மலைகளிலும்,  பலநாடகள் வரை, துன்ப நோயானது மிகவந்த சாபத்தினை (நுகர்ந்ததும்), முகிலினுங் கரிய மிடற்றினையுடைய சோமசுந்தரக் கடவுளை, தரிசித்து,  (அச்சாபத்தைப்) போக்கியதும், கூறி, எண்டிசை யானைகளாகிய இனத்தினும், மிக்க தெய்வத்தன்மை பொருந்திய வெள்ளை யானையானது,  இனிதாக வீற்றிருந்தது .

------------------------------

பாடல் எண் 470

குடவயி னயிரா வதப்பெருந் தீர்த்தங்
     குடைந்தயி ராவத கணேசக்
கடவுளைத் தொழுதை ராவதேச் சுரத்துக்
     கடவுளைப் பணிந்தவர்
சாபத் 
தொடர்பினும் பாவத் தொடர்பினும் கழிவர்
     சுராதிபன் களிறுசென் னெறிபோய்
இடர்கெட வையை படிந்துதென் கரையி
     லிந்திரேச் சுரனடி பணிவார்.  
470.

குடவயின் அயிரா வதப் பெரும் தீர்த்தம் குடைந்து அயிராவத கணேசக்
கடவுளைத் தொழுது ஐராவதேச் சுரத்துக் கடவுளைப் பணிந்தவர் சாபத்
தொடர்பினும் பாவத் தொடர்பினும் கழிவர் சுராதிபன் களிறு செல் ஏறிபோய்
இடர் கெட வைகை படிந்து தென் கரையில் இந்திரேச் சுரன் அடி பணிவோர்.

பொருள் - மேற்குத் திசையிலுள்ள, பெருமை பொருந்திய அயிராவத தீர்த்தத்தில் நீராடி, அயிராவத விநாயகக் கடவுளை வணங்கி, அயிராவதேச்சுரப் பெருமானைத் தொழுதவர்கள், சாபத் தொடர்ச்சியினின்றும், தீவினைத் தொடர்ச்சியி னின்றும், நீங்குவர்; தேவேந்திரனது வெள்ளையானையானது, சென்ற வழியிலே சென்று,  துன்பம் ஒழிய வையையாற்றில் நீராடி, அதன் தென்கரையி லெழுந்தருளி யிருக்கும் இந்திரேச்சுரனுடைய திருவடிகளை வணங்குபவர்கள் 


471.

இம்மையி லறமுன் மூன்றா லெய்திய பயனை யெய்தி
அம்மையின் மகவா னீரே ழரும்பத மளவும் வானில்
வெம்மையில் போக மூழ்கி வெறுப்புவந் தடைய வுள்ளச்
செம்மையில் விளைபே ரின்பச் சிவகதிச் செல்வ ராவார்.

இம்மையில் அறமுன் மூன்றால் எய்திய பயனை எய்தி
அம்மையின் மகவான் நீர் ஏழ் அரும் பதம் அளவும் வானில்
வெம்மை இல் போகம் மூழ்கி வெறுப்பு வந்து அடைய  உள்ளச்
செம்மையில் விளை பேரின்ப சிவகதி செல்வார் ஆவார்.

பொருள் -   இப்பிறவியில், அற முதலிய மூன்றானும் வரும்பயனை நுகர்ந்து,  மறுமையில்,  பதி னான்கு இந்திரர்களின் அரிய காலம் வரையும், வெப்பமில்லாத (குளிர்ந்த) போகத்தில் திளைத்து, (பின் அதில்) உவர்ப்புத் தோன்ற, மனத்தூய்மையில் விளைகின்ற,  பேரின்பத்தை யளிக்கும் பரமுத்தியாகிய செல்வத்தையுடையவராவார்

---------------------------------------

நன்றி

1) படங்கள் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. இந்தப் படங்களை இணையத்தில் பதிவு செய்து வைத்துள்ள அன்பர்களுக்கு நன்றி.

2) திருவிளையாடல் புராணம் பாடல்களைப் இணையதளத்தில் பதிவு செய்து வைத்துள்ள “தமிழ் இணையப் பல்கலைக்கழகத்திற்கு” நன்றி.

ஐராவதநல்லூரில் பழமையான சிவலிங்கம் கண்டெடுப்பு

ஐராவதநல்லூரில் 

பழமையான சிவலிங்கம் கண்டெடுப்பு

மதுரை தெப்பக்குளம் முதல் விரகனூர் இடையே 60 அடி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மதுரையில் சாலை பணியின் போது, ஐராவதநல்லூர் அருகே கொந்தகை கால்வாய் பகுதியில் சாலையை தோண்டியபோது,  2 அடி உயரமுள்ள சதுஸ்ர சிவலிங்க சிலை கண்டெடுக்கப்பட்டது. 

இதனையடுத்து, அந்த சிவலிங்க சிலை, ஐராவதநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி சுரேஷ் மூலமாக, தெற்கு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் மூலமாக மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள அரசு அருங்காட்சிய காப்பாளர் மருது பாண்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.

முதற்கட்ட ஆய்வில், சதுஸ்ர வடிவ லிங்க வழிபாடு கி.பி. 10 மற்றும் 11ஆம் நூற்றாண்டுகளில் பயன்பாட்டில் இருந்துள்ளது என்பதால் இது 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனவும் முழுமையான ஆய்வுக்குப் பின்னர் தெயிவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி = https://www.instanews.city/tamil-nadu/madurai/madurai-south/shivalingam-found-during-road-works-madurai-1023321?infinitescroll=1